Thursday, 2 March 2017

எம் எம் ஆர் தடுப்பூசி:அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கான கட்டுரை!

ம.செந்தமிழன்


எப்போதும் அறிவியல் சான்றுகளோடும், நவீனத் தொழில்நுட்ப அறிக்கைகளோடும் நடமாடும் வல்லமைகொண்டவர்கள் நம்மிடயே வாழ்கிறார்கள். எம் எம் ஆர் தடுப்பூசி தொடர்பாக அவர்கள், இதுவரை மூன்று பொய்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். அவர்களது, நான்காவது பொய்க்காக நாம் காத்திருக்கலாம். அதற்கு முன், தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, தமிழக சுகாதாரத் துறை அலுவலர்களின் மனசாட்சியிடம் சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.

பொய்:1

எம் எம் ஆர் தடுப்பூசிக்கு ஆதரவாக பரப்புரை செய்யத் துவங்கிய நவீன மருத்துவர்கள் சிலர், ‘தடுப்பூசி கட்டாயம்’ என்ற வாக்கியத்தைப் போகிற போக்கில் வீசிக் கொண்டிருந்ததை கவனித்திருப்பீர்கள். ’இந்திய, தமிழக அரசுகளின் சட்டப்படி இந்த எம் எம் ஆர் தடுப்பூசி கட்டாயம் அல்ல; மக்கள் விரும்பாவிட்டால் தவிர்க்கலாம்’ என்ற உண்மையை நானும் என்போன்றோரும் முன்வைத்தோம்.

அதன் பின்னரும் தாங்கள் உதிர்த்த பொய் குறித்த கூச்சம், வெட்கம் ஏதுமின்றி அம்மருத்துவர்கள் ‘கட்டாயம்’ என்ற வாத்தையை இரட்டைப் பொருளில் பயன்படுத்துகிறார்கள். அதாவது, ‘கட்டாயமாகப் போடுங்கள். அது உங்கள் பிள்ளைக்கு நல்லது’ என்ற சொல் விளையாட்டாக அந்த வாசகத்தை மாற்றியுள்ளார்கள்.
ஒரு இளம் மருத்துவர், ‘ஆமாம்…இது கட்டாயத் தடுப்பூசிதான். இதற்கு எதிராகப் பேசினால்…முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் செய்வேன்’ என வெளிப்படையாக மிரட்டினார்.
அதாவது, இல்லாத சட்டத்தை இருப்பதாகக் கூறி மிரட்டினால் அது…நவீனப் பகுத்தறிவு! அப்படி ஒரு சட்டமே இல்லை என்ற உண்மையை முன்வைத்தால்…மூடத்தனம்.

பல்வேறு தனியார் பள்ளிகளில் ‘உங்கள் குழந்தைக்கு எம் எம் ஆர் தடுப்பூசி போடுவதில் உங்களுக்குச் சம்மதமா?’ என்ற இசைவுக் கடிதம் பெறப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல பள்ளிகளில் இவ்வாறான இசைவுக் கடிதம் வழங்கப்படவில்லை. பிராய்லர் பண்ணைகளில் கோழிகளின் உடலில் ஊசி குத்துவதைப் போல, ஏழை மற்றும் கிராமப்புற குழந்தைகளுக்கு இந்த ஊசி போடப்படுகிறது.

செல்வம் மிக்க அல்லது நவீனத் தொடர்புகள் கொண்ட மக்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு, நமது கிராமங்களைச் சென்றடையவில்லை. குறிப்பாக, தமிழ்வழியில் படிக்கும் பிள்ளைகளின் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விதம், மனசாட்சி இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கையைப் பறைசாற்றுகிறது.
’இந்தத் தடுப்பூசி கட்டாயமில்லை’ என்பது சட்டப்படியிலான உண்மை.

பொய்: 2

’எம் எம் ஆர் தடுப்பூசியினால் எந்தப் பக்க விளைவும் இல்லை’ என்ற வாசகத்தையும் நீங்கள் பரவலாகக் கேட்டிருக்கலாம். நவீனர்கள் உதிர்த்த மந்திரங்களிலேயே இதுதான் மிக வலிமையானது.

எம் எம் ஆர் தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் சில பத்திகள் இவை:
1.    இந்தத் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வோரில் 25 % பேருக்கு மூட்டுவலிகள் (Arthralgia) மற்றும் 10% பேருக்கு கீல்வாதம் (arthritis) உருவாகலாம். இளம் மற்றும் வளர்ந்த பெண்களுக்கு உருவாக வாய்ப்புள்ள சிக்கல்கள் இவை.
2.    குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கு மேற்கண்ட விளைவுகள், அதிகபட்சம் 3% பேருக்கு உருவாக வாய்ப்புண்டு. இப்போது போடப்படும் எம் எம் ஆர் ஊசிகளுக்கான ‘இலக்கு’ – 1 கோடியே 80 இலட்சம் பேர். இவர்களில் எத்தனை இலட்சம் பேர்களுக்கு மூட்டு வலி, கீல்வாதம் ஆகியன உருவாகும் வாய்ப்புள்ளது என்பதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
3.    த்ரோம்போசிப்டோபீனியா (thrombocyptopenia) எனும் இரத்தத்தில் உருவாகும் சீர்கேடு 30,000 பேர்களில் ஒருவருக்கு வரும் வாய்ப்புண்டு.
4.    நினைவு இழத்தல் அல்லது பிறழ்ச்சியடைதல் (anaphylactic) அரிதாக சிலருக்கு உருவாகலாம்.
5.    ஒவ்வாமையினால் மூளையில் உருவாகும் வீக்கம் (Encephalitis) பத்து இலட்சம் பேர்களில் ஒருவருக்கு உருவாகலாம்.

இவைதவிர, வேறுபல விளைவுகளும் பட்டியலில் உள்ளன. இந்தத் தகவல்களை எல்லாம் மக்களிடம் அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கும், தடுப்பூசி ஆதரவு மருத்துவர்களுக்கும் உண்டு என நான் நினைக்கிறேன். மாறாக, பொத்தாம்பொதுவாக ‘எந்தப் பக்கவிளைவும் இல்லை. வதந்திகளை நம்பாதீர்கள்’ என்று பேசுவதும் எழுதுவதும் எந்த வகையில் நியாயம்?

ஒரு குழந்தைக்கு இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது என்றால், அந்தப் பிள்ளையின் பெற்றோருக்கு மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் எல்லா மருந்து நிறுவனங்களும், வெளிப்படையாக இவ்வாறான விளைவுகளைப் பட்டியலிட்டு அச்சிட்டுக்கொண்டுள்ளன. இங்கே உள்ள தடுப்பூசி ஆதரவாளர்கள் இந்தப் பட்டியலைப் படித்திருக்கிறார்களா? இல்லையா?

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர், ‘தடுப்பூசிக்கு ஆதரவாக’ மட்டும் நடந்துகொள்வதைப் பார்க்கிறோம். அவர்களுக்கெல்லாம் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும் அல்லவா. குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்புவது இடர்மிகுந்த நடவடிக்கையாக மாற்றப்படுகிறது.தடுப்பூசிச் செயல்பாட்டில், பணக்காரர்களுக்கான பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் நேர்மை, ஏழைகளுக்கான பள்ளிகளில் கடைபிடிக்கப்படவில்லை. எவ்வளவு அநியாயமான சமூகமாக இது மாறிக்கொண்டுள்ளது!

பொய்: 3

‘தடுப்பூசிகள் பாதுகாப்பானவை’ என்பது அடுத்த பொய். 

இந்த எம் எம் ஆர் ஊசிகளை எவரெல்லாம் போடக் கூடாது எனப் பெரிய பட்டியல் உள்ளது.
1.    கார்டியோகாஸ்டிராய்ஸ் வகைப்பட்ட (ஹார்மோன் சுரப்புடன் தொடர்புடைய) மருந்துகளை உட்கொள்வோர் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால், அவர்களது உடலில் போதுமான எதிர்ப்பாற்றல் உருவாகாமல் போகும் ஆபத்து உண்டு. பலவகையான ஒவ்வாமை (allergies), தோல் நோய்கள், ஆஸ்துமா மற்றும் கீல்வாதம் (arthritis) ஆகியவற்றுக்கான மருந்து உட்கொள்வோர் மேற்கண்ட கார்டியோகாஸ்ட்ராய்ஸ் வகையில் வரும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக தோல் நோய்க்கு மருத்துவம் மேற்கொள்ளும் சிறுவர், குழந்தைகள் எண்ணிக்கையில் மிக அதிகம் என்பது நமக்குத் தெரியும். அவர்களுக்கான சிகிச்சையில், மேற்கண்ட ஹார்மோன் தொடர்பான மருந்துகள் தரப்படுகின்றனவா என்பதைப் பெற்றோர் தெரிந்து வைத்திருக்க வேண்டும் அல்லது மருத்துவர்கள் இதைப் பற்றி பெற்றோருக்குத் தகவல் கூற வேண்டும்.
2.    தீவிர இரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்தத் தடுப்பூசியினால் தீய விளைவுகள் உருவாகும் வாய்ப்புண்டு.
3.    காய்ச்சல்.
4.    தொற்று நோயாளிகள்.
5.    தடுப்பூசியின் உட்பொருட்களால் உருவாகும் ஒவ்வாமைக்கு ஆட்படுவோர், இந்தத் தடுப்பூசியைத் தவிர்க்கலாம். அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதற்கான ஆய்வுகள் செய்தால்தான் தெரியும்.
6.    பசும் பால் உட்கொண்டால் ஒவ்வாமை உருவாகும் நிலையில் உள்ளவர்களுக்கும், இந்தத் தடுப்பூசியினால் பாதிப்பு வர வாய்ப்புண்டு.
7.    இந்தத் தடுப்பூசியில் உள்ள நியோமைசீன் (neomycin) காரணமாக, அரிதாக வெகு சிலருக்கு மூளை அதிர்ச்சி – திடீர் பிறழ்ச்சி உருவாகலாம். இவ்வாறான நிலைமையில், உடனடியாக தீவிர சிகிச்சை தரப்பட வேண்டும். இல்லையெனில், அக்குழந்தை இறக்க நேரிடலாம்.

இன்னும் நீளமான பட்டியல் இது. நான் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன்.
‘பாதுகாப்பான தடுப்பூசி’ என்ற வார்த்தைக்கும் ‘பாதுகாப்பான அணு உலை’ என்ற உத்தரவாதத்திற்கும் எவ்வளவு உறவு உள்ளதெனப் பாருங்கள்.

மேலே உள்ள அனைத்துச் செய்திகளையும் எம் எம் ஆர் தடுப்பூசியைத் தயாரிக்கும் ’சீரம் மையம்’ (SERUM INSTITUTE OF INIDIA LTD) வெளியிட்டுள்ளது. இது எந்த ‘தடுப்பூசி எதிர்ப்பு முட்டாளும்’ எழுதிய கற்பனைக் கதை அல்ல.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆய்வுக் கூடம் இயங்கினால்தான் ஒவ்வொரு குழந்தைக்கும் மேற்கண்ட சோதனைகளைச் செய்து, இக்குழந்தை தடுப்பூசிக்குத் தகுதியாக உள்ளதா என முடிவெடுக்க முடியும். இதுதான் உண்மை நிலை. ஆனால் இங்கே என்ன நடக்கிறது எனப் பாருங்கள்.

‘வதந்திகளை நம்பாதீர்கள். வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற எச்சரிக்கை. அதைத் தொடர்ந்து மூன்று பொய்கள். இவற்றுக்கு எதிராக எழுதுவோர், பேசுவோரைக் குறிவைத்து அவதூறு பரப்பும் இழிசெயல்கள் என மாபெரும் சதித்திட்டம் இங்கே அரங்கேற்றப்படுகிறது.

எம் எம் ஆர் தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தைகளுக்கு மேலே குறிப்பிட்டுள்ள உடல் தொல்லைகள் உருவானால், அதைச் சட்டப்படி நிரூபிக்கும் வழி ஏதேனும் இங்கே உள்ளதா?

இந்தத் தடுப்பூசியினால் இவ்வளவு விளைவுகள் உருவாகும் என்ற தகவல் தெரிந்தால்தானே, பெற்றோர் அடுத்த கட்ட நடவடிக்கையைப் பற்றி சிந்திப்பார்கள். இங்கேதான் தடுப்பூசிக்கு ஆதரவாகப் பேசுவது புனிதப் போரில் ஈடுபடுவது போல மாற்றப்பட்டுள்ளதே.

அவர்கள் நடத்துவது புனிதப் போராகவே இருக்கட்டும். அந்தப் போரின் விதிமுறைகளையும் விளைவுகளையும் பற்றி மக்களுக்குத் தெரிவித்துவிட்டு ஆயுதங்களைச் சுழற்றட்டும் என்பதுதான் எனது கருத்து. ஏனெனில், ஒரு மருந்து வேண்டும் அல்லது வேண்டாம் என்று முடிவு செய்யும் உரிமை ஒவ்வொரு மனிதருக்கும் வேண்டும். இந்த உரிமையை எக்காலத்திலும் நாம் விட்டுத் தரக் கூடாது. மேலும், சின்னஞ்சிறு குழந்தைகளுக்குப் போடப்படும் இந்தத் தடுப்பூசிகளைப் பற்றி அந்தக் குழந்தைகள் எந்த முடிவையும் எடுப்பதில்லை. பெற்றோர் அல்லது ஆசிரியர் சொன்னால், கையைத் தூக்கிக் காட்டிக்கொண்டு பற்களைக் கடித்து வலிக்காகக் காத்திருக்கும் அப்பாவிகள் அவர்கள்.

குறிப்பாக மருத்துவர்கள் எதைச் சொன்னாலும் அது மட்டும்தான் சரியானது என்ற நம்பிக்கையில் வாழும் உயிர்கள் நம் குழந்தைகள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமானால், அந்தப் பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் குறைந்தபட்சத் தகவல்களையாவது தெரிவிக்க வேண்டும்.

‘பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இன்னும் இந்தத் தடுப்பூசியை ஏற்கவில்லை’ என்ற கருத்தை நீங்கள் கவனித்தீர்களா எனத் தெரியவில்லை. இவ்வாறான கருத்து மிக அழகாகப் பரப்பப்படுகிறது.

நாம் எதிர்கொள்ளப்போகும் நான்காவது பொய்,
‘பாகிஸ்தான் தீவிரவாதிகள் தங்கள் நாட்டிலிருந்து ரூபெல்லா நோயாளிகளை அனுப்பி இந்தியக் குழந்தைகளைக் கொலை செய்யச் சதி செய்கிறார்கள். ஏனெனில், அந்த நாட்டில் ரூபெல்லாவுக்குத் தடுப்பூசியே இல்லை’

இதைப் படிக்கும்போது அதீதமான கற்பனையாகத் தோன்றலாம். நவீன அறிவாளிகள் எம் எம் ஆர் தடுப்பூசி குறித்து பரப்பிவரும் பொய்களை மீண்டும் படித்துப் பாருங்கள். தடுப்பூசிக்கு ஆதரவாகப் பேச வேண்டுமானால், எதையும் பேசுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அதிலும் ‘பாகிஸ்தான் தீவிரவாதம்’ என்ற சொற்கட்டமைப்பு நீண்டகாலமாக நிலைத்துள்ள கட்டுக்கதைகளின் வலிமை பொருந்தியது!

சான்று இணைப்பு:
குறிப்புதவி: மருத்துவர். பிரேமா கோபாலகிருஷ்ணன் (Prema Gopalakrishnan)