Thursday, 2 March 2017

எம் எம் ஆர் தடுப்பூசி:அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கான கட்டுரை!

ம.செந்தமிழன்


எப்போதும் அறிவியல் சான்றுகளோடும், நவீனத் தொழில்நுட்ப அறிக்கைகளோடும் நடமாடும் வல்லமைகொண்டவர்கள் நம்மிடயே வாழ்கிறார்கள். எம் எம் ஆர் தடுப்பூசி தொடர்பாக அவர்கள், இதுவரை மூன்று பொய்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். அவர்களது, நான்காவது பொய்க்காக நாம் காத்திருக்கலாம். அதற்கு முன், தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, தமிழக சுகாதாரத் துறை அலுவலர்களின் மனசாட்சியிடம் சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.

பொய்:1

எம் எம் ஆர் தடுப்பூசிக்கு ஆதரவாக பரப்புரை செய்யத் துவங்கிய நவீன மருத்துவர்கள் சிலர், ‘தடுப்பூசி கட்டாயம்’ என்ற வாக்கியத்தைப் போகிற போக்கில் வீசிக் கொண்டிருந்ததை கவனித்திருப்பீர்கள். ’இந்திய, தமிழக அரசுகளின் சட்டப்படி இந்த எம் எம் ஆர் தடுப்பூசி கட்டாயம் அல்ல; மக்கள் விரும்பாவிட்டால் தவிர்க்கலாம்’ என்ற உண்மையை நானும் என்போன்றோரும் முன்வைத்தோம்.

அதன் பின்னரும் தாங்கள் உதிர்த்த பொய் குறித்த கூச்சம், வெட்கம் ஏதுமின்றி அம்மருத்துவர்கள் ‘கட்டாயம்’ என்ற வாத்தையை இரட்டைப் பொருளில் பயன்படுத்துகிறார்கள். அதாவது, ‘கட்டாயமாகப் போடுங்கள். அது உங்கள் பிள்ளைக்கு நல்லது’ என்ற சொல் விளையாட்டாக அந்த வாசகத்தை மாற்றியுள்ளார்கள்.
ஒரு இளம் மருத்துவர், ‘ஆமாம்…இது கட்டாயத் தடுப்பூசிதான். இதற்கு எதிராகப் பேசினால்…முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் செய்வேன்’ என வெளிப்படையாக மிரட்டினார்.
அதாவது, இல்லாத சட்டத்தை இருப்பதாகக் கூறி மிரட்டினால் அது…நவீனப் பகுத்தறிவு! அப்படி ஒரு சட்டமே இல்லை என்ற உண்மையை முன்வைத்தால்…மூடத்தனம்.

பல்வேறு தனியார் பள்ளிகளில் ‘உங்கள் குழந்தைக்கு எம் எம் ஆர் தடுப்பூசி போடுவதில் உங்களுக்குச் சம்மதமா?’ என்ற இசைவுக் கடிதம் பெறப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல பள்ளிகளில் இவ்வாறான இசைவுக் கடிதம் வழங்கப்படவில்லை. பிராய்லர் பண்ணைகளில் கோழிகளின் உடலில் ஊசி குத்துவதைப் போல, ஏழை மற்றும் கிராமப்புற குழந்தைகளுக்கு இந்த ஊசி போடப்படுகிறது.

செல்வம் மிக்க அல்லது நவீனத் தொடர்புகள் கொண்ட மக்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு, நமது கிராமங்களைச் சென்றடையவில்லை. குறிப்பாக, தமிழ்வழியில் படிக்கும் பிள்ளைகளின் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விதம், மனசாட்சி இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கையைப் பறைசாற்றுகிறது.
’இந்தத் தடுப்பூசி கட்டாயமில்லை’ என்பது சட்டப்படியிலான உண்மை.

பொய்: 2

’எம் எம் ஆர் தடுப்பூசியினால் எந்தப் பக்க விளைவும் இல்லை’ என்ற வாசகத்தையும் நீங்கள் பரவலாகக் கேட்டிருக்கலாம். நவீனர்கள் உதிர்த்த மந்திரங்களிலேயே இதுதான் மிக வலிமையானது.

எம் எம் ஆர் தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் சில பத்திகள் இவை:
1.    இந்தத் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வோரில் 25 % பேருக்கு மூட்டுவலிகள் (Arthralgia) மற்றும் 10% பேருக்கு கீல்வாதம் (arthritis) உருவாகலாம். இளம் மற்றும் வளர்ந்த பெண்களுக்கு உருவாக வாய்ப்புள்ள சிக்கல்கள் இவை.
2.    குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கு மேற்கண்ட விளைவுகள், அதிகபட்சம் 3% பேருக்கு உருவாக வாய்ப்புண்டு. இப்போது போடப்படும் எம் எம் ஆர் ஊசிகளுக்கான ‘இலக்கு’ – 1 கோடியே 80 இலட்சம் பேர். இவர்களில் எத்தனை இலட்சம் பேர்களுக்கு மூட்டு வலி, கீல்வாதம் ஆகியன உருவாகும் வாய்ப்புள்ளது என்பதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
3.    த்ரோம்போசிப்டோபீனியா (thrombocyptopenia) எனும் இரத்தத்தில் உருவாகும் சீர்கேடு 30,000 பேர்களில் ஒருவருக்கு வரும் வாய்ப்புண்டு.
4.    நினைவு இழத்தல் அல்லது பிறழ்ச்சியடைதல் (anaphylactic) அரிதாக சிலருக்கு உருவாகலாம்.
5.    ஒவ்வாமையினால் மூளையில் உருவாகும் வீக்கம் (Encephalitis) பத்து இலட்சம் பேர்களில் ஒருவருக்கு உருவாகலாம்.

இவைதவிர, வேறுபல விளைவுகளும் பட்டியலில் உள்ளன. இந்தத் தகவல்களை எல்லாம் மக்களிடம் அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கும், தடுப்பூசி ஆதரவு மருத்துவர்களுக்கும் உண்டு என நான் நினைக்கிறேன். மாறாக, பொத்தாம்பொதுவாக ‘எந்தப் பக்கவிளைவும் இல்லை. வதந்திகளை நம்பாதீர்கள்’ என்று பேசுவதும் எழுதுவதும் எந்த வகையில் நியாயம்?

ஒரு குழந்தைக்கு இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது என்றால், அந்தப் பிள்ளையின் பெற்றோருக்கு மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் எல்லா மருந்து நிறுவனங்களும், வெளிப்படையாக இவ்வாறான விளைவுகளைப் பட்டியலிட்டு அச்சிட்டுக்கொண்டுள்ளன. இங்கே உள்ள தடுப்பூசி ஆதரவாளர்கள் இந்தப் பட்டியலைப் படித்திருக்கிறார்களா? இல்லையா?

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர், ‘தடுப்பூசிக்கு ஆதரவாக’ மட்டும் நடந்துகொள்வதைப் பார்க்கிறோம். அவர்களுக்கெல்லாம் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும் அல்லவா. குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்புவது இடர்மிகுந்த நடவடிக்கையாக மாற்றப்படுகிறது.தடுப்பூசிச் செயல்பாட்டில், பணக்காரர்களுக்கான பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் நேர்மை, ஏழைகளுக்கான பள்ளிகளில் கடைபிடிக்கப்படவில்லை. எவ்வளவு அநியாயமான சமூகமாக இது மாறிக்கொண்டுள்ளது!

பொய்: 3

‘தடுப்பூசிகள் பாதுகாப்பானவை’ என்பது அடுத்த பொய். 

இந்த எம் எம் ஆர் ஊசிகளை எவரெல்லாம் போடக் கூடாது எனப் பெரிய பட்டியல் உள்ளது.
1.    கார்டியோகாஸ்டிராய்ஸ் வகைப்பட்ட (ஹார்மோன் சுரப்புடன் தொடர்புடைய) மருந்துகளை உட்கொள்வோர் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால், அவர்களது உடலில் போதுமான எதிர்ப்பாற்றல் உருவாகாமல் போகும் ஆபத்து உண்டு. பலவகையான ஒவ்வாமை (allergies), தோல் நோய்கள், ஆஸ்துமா மற்றும் கீல்வாதம் (arthritis) ஆகியவற்றுக்கான மருந்து உட்கொள்வோர் மேற்கண்ட கார்டியோகாஸ்ட்ராய்ஸ் வகையில் வரும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக தோல் நோய்க்கு மருத்துவம் மேற்கொள்ளும் சிறுவர், குழந்தைகள் எண்ணிக்கையில் மிக அதிகம் என்பது நமக்குத் தெரியும். அவர்களுக்கான சிகிச்சையில், மேற்கண்ட ஹார்மோன் தொடர்பான மருந்துகள் தரப்படுகின்றனவா என்பதைப் பெற்றோர் தெரிந்து வைத்திருக்க வேண்டும் அல்லது மருத்துவர்கள் இதைப் பற்றி பெற்றோருக்குத் தகவல் கூற வேண்டும்.
2.    தீவிர இரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்தத் தடுப்பூசியினால் தீய விளைவுகள் உருவாகும் வாய்ப்புண்டு.
3.    காய்ச்சல்.
4.    தொற்று நோயாளிகள்.
5.    தடுப்பூசியின் உட்பொருட்களால் உருவாகும் ஒவ்வாமைக்கு ஆட்படுவோர், இந்தத் தடுப்பூசியைத் தவிர்க்கலாம். அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதற்கான ஆய்வுகள் செய்தால்தான் தெரியும்.
6.    பசும் பால் உட்கொண்டால் ஒவ்வாமை உருவாகும் நிலையில் உள்ளவர்களுக்கும், இந்தத் தடுப்பூசியினால் பாதிப்பு வர வாய்ப்புண்டு.
7.    இந்தத் தடுப்பூசியில் உள்ள நியோமைசீன் (neomycin) காரணமாக, அரிதாக வெகு சிலருக்கு மூளை அதிர்ச்சி – திடீர் பிறழ்ச்சி உருவாகலாம். இவ்வாறான நிலைமையில், உடனடியாக தீவிர சிகிச்சை தரப்பட வேண்டும். இல்லையெனில், அக்குழந்தை இறக்க நேரிடலாம்.

இன்னும் நீளமான பட்டியல் இது. நான் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன்.
‘பாதுகாப்பான தடுப்பூசி’ என்ற வார்த்தைக்கும் ‘பாதுகாப்பான அணு உலை’ என்ற உத்தரவாதத்திற்கும் எவ்வளவு உறவு உள்ளதெனப் பாருங்கள்.

மேலே உள்ள அனைத்துச் செய்திகளையும் எம் எம் ஆர் தடுப்பூசியைத் தயாரிக்கும் ’சீரம் மையம்’ (SERUM INSTITUTE OF INIDIA LTD) வெளியிட்டுள்ளது. இது எந்த ‘தடுப்பூசி எதிர்ப்பு முட்டாளும்’ எழுதிய கற்பனைக் கதை அல்ல.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆய்வுக் கூடம் இயங்கினால்தான் ஒவ்வொரு குழந்தைக்கும் மேற்கண்ட சோதனைகளைச் செய்து, இக்குழந்தை தடுப்பூசிக்குத் தகுதியாக உள்ளதா என முடிவெடுக்க முடியும். இதுதான் உண்மை நிலை. ஆனால் இங்கே என்ன நடக்கிறது எனப் பாருங்கள்.

‘வதந்திகளை நம்பாதீர்கள். வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற எச்சரிக்கை. அதைத் தொடர்ந்து மூன்று பொய்கள். இவற்றுக்கு எதிராக எழுதுவோர், பேசுவோரைக் குறிவைத்து அவதூறு பரப்பும் இழிசெயல்கள் என மாபெரும் சதித்திட்டம் இங்கே அரங்கேற்றப்படுகிறது.

எம் எம் ஆர் தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தைகளுக்கு மேலே குறிப்பிட்டுள்ள உடல் தொல்லைகள் உருவானால், அதைச் சட்டப்படி நிரூபிக்கும் வழி ஏதேனும் இங்கே உள்ளதா?

இந்தத் தடுப்பூசியினால் இவ்வளவு விளைவுகள் உருவாகும் என்ற தகவல் தெரிந்தால்தானே, பெற்றோர் அடுத்த கட்ட நடவடிக்கையைப் பற்றி சிந்திப்பார்கள். இங்கேதான் தடுப்பூசிக்கு ஆதரவாகப் பேசுவது புனிதப் போரில் ஈடுபடுவது போல மாற்றப்பட்டுள்ளதே.

அவர்கள் நடத்துவது புனிதப் போராகவே இருக்கட்டும். அந்தப் போரின் விதிமுறைகளையும் விளைவுகளையும் பற்றி மக்களுக்குத் தெரிவித்துவிட்டு ஆயுதங்களைச் சுழற்றட்டும் என்பதுதான் எனது கருத்து. ஏனெனில், ஒரு மருந்து வேண்டும் அல்லது வேண்டாம் என்று முடிவு செய்யும் உரிமை ஒவ்வொரு மனிதருக்கும் வேண்டும். இந்த உரிமையை எக்காலத்திலும் நாம் விட்டுத் தரக் கூடாது. மேலும், சின்னஞ்சிறு குழந்தைகளுக்குப் போடப்படும் இந்தத் தடுப்பூசிகளைப் பற்றி அந்தக் குழந்தைகள் எந்த முடிவையும் எடுப்பதில்லை. பெற்றோர் அல்லது ஆசிரியர் சொன்னால், கையைத் தூக்கிக் காட்டிக்கொண்டு பற்களைக் கடித்து வலிக்காகக் காத்திருக்கும் அப்பாவிகள் அவர்கள்.

குறிப்பாக மருத்துவர்கள் எதைச் சொன்னாலும் அது மட்டும்தான் சரியானது என்ற நம்பிக்கையில் வாழும் உயிர்கள் நம் குழந்தைகள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமானால், அந்தப் பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் குறைந்தபட்சத் தகவல்களையாவது தெரிவிக்க வேண்டும்.

‘பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இன்னும் இந்தத் தடுப்பூசியை ஏற்கவில்லை’ என்ற கருத்தை நீங்கள் கவனித்தீர்களா எனத் தெரியவில்லை. இவ்வாறான கருத்து மிக அழகாகப் பரப்பப்படுகிறது.

நாம் எதிர்கொள்ளப்போகும் நான்காவது பொய்,
‘பாகிஸ்தான் தீவிரவாதிகள் தங்கள் நாட்டிலிருந்து ரூபெல்லா நோயாளிகளை அனுப்பி இந்தியக் குழந்தைகளைக் கொலை செய்யச் சதி செய்கிறார்கள். ஏனெனில், அந்த நாட்டில் ரூபெல்லாவுக்குத் தடுப்பூசியே இல்லை’

இதைப் படிக்கும்போது அதீதமான கற்பனையாகத் தோன்றலாம். நவீன அறிவாளிகள் எம் எம் ஆர் தடுப்பூசி குறித்து பரப்பிவரும் பொய்களை மீண்டும் படித்துப் பாருங்கள். தடுப்பூசிக்கு ஆதரவாகப் பேச வேண்டுமானால், எதையும் பேசுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அதிலும் ‘பாகிஸ்தான் தீவிரவாதம்’ என்ற சொற்கட்டமைப்பு நீண்டகாலமாக நிலைத்துள்ள கட்டுக்கதைகளின் வலிமை பொருந்தியது!

சான்று இணைப்பு:
குறிப்புதவி: மருத்துவர். பிரேமா கோபாலகிருஷ்ணன் (Prema Gopalakrishnan)


Tuesday, 14 February 2017

எதிர்காலச் சமூகம் குறித்து ஏன் அச்சப்பட வேண்டும்? ம.செந்தமிழன் (ஆயம் - நூலின் சில பத்திகள்)





-       திர்காலம் குறித்த அச்சங்களை உருவாக்குவதல்ல, என் நோக்கம். மாறாக, எதிர்காலம் குறித்த விருப்பங்களையும் புரிதல்களையும் முன்வைக்கிறேன். நிச்சயமாக, இப்போதுள்ள வாழ்க்கை வாய்ப்புகள் எதிர்காலத்தில் கிடைக்கப்போவதில்லை. உணவு, நீர், காற்று, நிலம் ஆகிய நான்கு வாழ்வாதாரங்களும் கடந்த முப்பதாண்டுகளுக்கு முன் இருந்த நிலையில் இப்போது இல்லை. இவை அனைத்தும் தரம் கெட்டவையாகவும், நஞ்சு மிகுந்தவையாகவும் மாற்றப்பட்டுள்ளன. பொருளாதாரம் எனும் அளவுகோல் இப்போது மிக மோசமான ஆதிக்கத்தில் இருக்கிறது. எல்லாவற்றையும் பொருளாதாரத்தின் வழியில் மட்டுமே அணுகும் மனநிலை வளர்ந்துவிட்டது.

அரசுத்துறை எனும் கருத்து அதிவேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டுள்ளது. சமூகப் பாதுகாப்பிற்காகத்தான் அரசு எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. மக்களுக்கும், நாட்டின் இயற்கை அமைப்பிற்கும் அரணாக இருக்க வேண்டியது அரசின் கடமை. இப்போது அரசு எனும் அமைப்பு, அதிகாரம் அற்றதாக மாறிக்கொண்டுள்ளது. தனியார் பெருநிறுவனங்கள்தான் நாட்டின் பெரும்பாலான தொழில்களை நடத்துகின்றன.

நிறுவனங்களின் பிடியில் உணவுத்துறை சிக்கிக்கொண்டுள்ளது. பசுமைப் புரட்சிக்குப் பிந்தைய வேளாண்மை, தனியார் நிறுவனங்களைப் பெருமளவு சார்ந்ததாகிவிட்டது. உரம், விதை, வேளாண் கருவிகள் ஆகியவற்றைத் தனியார் நிறுவனங்கள்தான் வழங்குகின்றன. அரசாங்கம் இவற்றுக்கான மானியத்தை மட்டும் தருகிறது. எல்லா மானியங்களும் குறைக்கப்படுகின்றன. வெகு விரைவில் வேளாண்மைக்கான மானியங்கள் நிறுத்தப்படும். அந்த நிலையில் வேளாண்மையின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் ஒரு சில தனியார் பெருநிறுவனங்களின் பிடிக்குள் சென்றிருக்கும்.
வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் பொதுச் சந்தைக்கே எடுத்துவர இயலாத நிலை உருவாகும். பெருநிறுவனங்கள் தமக்குள் கூட்டமைப்பை உருவாக்கிக்கொண்டு, எல்லா விளைபொருட்களையும் தாங்கள் மட்டுமே கொள்முதல் செய்யப் போகின்றன.

அவ்வாறான சூழலில் உணவுப் பொருட்களின் விலை, கற்பனைக்கெட்டாத வகையில் இருக்கும். இப்போது ஆடம்பரங்களுக்காகக் கடன் வாங்கும் மக்கள், அடிப்படைத் தேவைகளுக்காகக் கடன் வாங்க வேண்டி வரும். உணவு மட்டுமல்ல, நீரும் இவ்வாறான நெருக்கடிகளுக்குள்ளாகும். இப்போதே குடிநீர் தனியார்மயமாகத்தான் இருக்கிறது. கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் மட்டும் அரசு குடிநீர் வழங்கிக்கொண்டுள்ளது. மாநகரங்களில் அரசு வழங்கும் நீரின் தரம் மோசமாகியுள்ளது. அந்தத் தரம் கெட்ட நீரும் போதுமான அளவுக்கு வழங்கப்படுவதில்லை.

ஏரிகள், குளங்கள் போன்ற இயற்கை நீர்க் கலன்களை ஏறத்தாழ இழந்துவிட்டோம். அவற்றைப் போற்றிப் பராமரிப்பதில், இந்தச் சமூகத்தின் பெரும்பகுதி மக்களுக்கு விருப்பமில்லை. ஏனெனில் ஏரி, குளங்கள் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் வணிக நிலங்களாக (real estate) மாற்றப்பட்டுள்ளன. அவற்றின் பரமாரிப்புக்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகாரிகளும் ஊர் மக்களும் இணைந்து பங்கிட்டுக்கொள்கிறார்கள். அல்லது ஊர் மக்களின் எதிர்ப்புகளை மீறி அரசியல்வாதிகள் அப்பணத்தைச் சுருட்டுகிறார்கள்.

எவ்வளவு மழை பெய்தாலும் நீரை நிலத்தில் தேக்கிவைக்க இயலாத நிலைக்குத் தமிழகம் சென்றுவிட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் பெய்த பெருமழையைத் தேக்கி வைத்திருந்தால், குறைந்தது இரண்டாண்டுகளுக்கு வேளாண்மை செய்திருக்கலாம்; குடிநீருக்கும் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், வெறும் ஆறே மாதங்களில் அம்மழை நீர் வற்றிப்போனது. வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தி அன்றாடம் வந்து சேர்கிறது. இதுதான் நிலைமை.
பெரும்பான்மைச் சமூகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது. இப்போக்கு முற்றிலும் மாறப்போவதில்லை என்பது என் எண்ணம்.

பெரும்பான்மையரிடம் உரையாடி, அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவது இயலாது என்றும் நான் நினைக்கிறேன். ஆகவே, இவ்வாறான புரிதல்கள் கொண்ட சமூகத்தினரிடம் உரையாடி அவர்கள் வழியாக எதிர்காலத்தைப் பற்றிய நல்ல விருப்பங்களை உருவாக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

நமது செயல்பாடுகள் யாவும் சீர்திருத்தங்களுக்கானவை அல்ல, அடிப்படை மாறுதலுக்கானவை. நமது மூத்த தலைமுறை நமக்கான வாழ்க்கையை விற்றுவிட்டது. அவர்கள் அறியாமையில், பேராசையில், ஏமாளித்தனமாக நம் மரபுகளை உதறி வீசிவிட்டார்கள். நாம் தனித்து விடப்பட்டுள்ளோம். அரசும், நிறுவனங்களும் இணைந்து நமது இயற்கைச் சூழலை, அடிப்படை வாழ்வாதாரங்களைப் பறிக்கின்றன. இணைந்து காக்க வேண்டிய நாம், பிரிந்து கிடக்கிறோம். ஒரு சமூகமாக நாம் மாற வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. இந்தச் சமூகத்தில் இடம்பெறுவோர் அவரவர் பண்புகளால் தீர்மானிக்கப்படுகிறார்களே தவிர, வேறெந்தக் காரணிகளாலும் அல்ல. ஏழ்மையில் ஆழ்ந்து கிடப்போர், செல்வத்தில் வீற்றிருப்போர் எவராக இருந்தாலும் மரபுவழிப்பட்ட புதிய சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால் போதும்.

இயற்கையையும் சகமனிதர்களையும் சுரண்டி வாழ்ந்த பாவங்களின் பலனாகத்தான் இவ்வளவு துன்பங்களும் வந்து சேர்ந்துள்ளன. இதுதான் என் கருத்து. இப்பாவங்களின் விளைவுகளிலிருந்து தப்ப வேண்டுமானால், முதலில் ‘நான் பாவங்களைச் செய்துள்ளேன்’ என மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும். பின்னர், ‘இனி சக மனிதர்களுக்கும் இயற்கையின் பிற அங்கங்களுக்கும் எதிராகச் சிந்திக்கவும் செயல்படவும் மாட்டேன்’ என்று முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், இந்தத் தீவினைச் சுழற்சியிலிருந்து வெளியேற இயலாது.

.................

செம்மை வெளியீட்டகம்
தொடர்பாளர்: திருமுருகன் - 96008 93550


Friday, 10 February 2017

செந்தமிழனின் வேண்டுகோள்


செந்தமிழனின் வேண்டுகோள்


நண்பர்களே,
 எனது கருத்துகளைப் பின்பற்றும் செம்மை சமூகத்தவர் சிலரைக் கொண்டு, https://www.facebook.com/Semmaivanam/ பக்கத்தை அன்றாடம் இயங்கும் மின்னிதழாக மாற்ற முடிவெடுத்துள்ளோம். இதற்கென ஆசிரியர் குழுவை அமைக்கிறோம்.


மரபு மீட்பு, இயற்கை வாழ்வியல், இயற்கை வேளாண்மை, தற்சார்புச் சமூக அமைப்பு போன்ற எமது கருத்துகளை அன்றாடம் பதிவு செய்யச் சொல்லி இருக்கிறேன். இந்த ஏற்பாட்டினால், தனிப்பட்ட முறையில் என்னுடைய பணிச் சுமை குறையும். மேலும், பலருடைய கருத்துகள் வந்து சேரும்.


இதற்கான ஆசிரியர் குழு:
ப.கலாநிதி கலாநிதி பவேஸ்வரன்
ஆனந்த் செல்லையா Anand Chelliah
பால் கிரிகோரி Paul Gregory
சந்தோஷ் நாராயணன் Santhosh Narayanan
இராஜராஜன் Rajarajan R
க.காந்திமதி Gandhimathi Senthamizhan
துர்கா லெட்சுமி துர்காலட்சுமி தினசேகரன்
யமுனா Yamunanand
நளினி Nalini Velumani
திருமுருகன் Thiru Murugan
ப.நரேஸ் Naresh Green


மேலும், செம்மை வனம் முகநூல் பக்கம் பரவலான அறிமுகத்தைப் பெறும் வரை, எனது முகநூல் பக்கத்தில் செம்மை செயல்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவேன்.

உடல் நலம், சமையல், இல்லப் பராமரிப்பு, வேளாண் நுட்பங்கள் போன்ற செயல்களுக்கான பல தகவல்களைச் செம்மை சமூகத்தவர், செம்மைவனம் பக்கத்தில் பகிர்ந்துகொள்வார்கள். இணைந்திருங்கள்.

பதிவு செய்த நாள் : 0/02/2017

Image may contain: cloud, sky, tree, plant, outdoor and nature

பசுவாகிய எனக்கு காளை தேவை!

பசுவாகிய எனக்கு  காளை தேவை!
ம.செந்தமிழன்

 

உம்பளச்சேரி வகையைச் சேர்ந்த பசுவாகிய நான் ஆச்சாம்பட்டியில் உள்ள செம்மைவனத்தில் வாழ்கிறேன். ’வளத்தி’ என்று எனக்குப் பெயரிட்டிருக்கிறார்கள். வளங்களைத் தருபவள் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். 

நான் சினையாக இருந்தபோது இங்கு வந்தேன். செம்மைவனம் வந்து ஏழு நாட்களுக்குள் கிடாரி (பசு) கன்றை ஈன்றேன். இப்போது நான் உங்களிடம் கேட்பது மிக முக்கியமான உதவி.

உடலுறவைப் பற்றி மெத்தப் படித்த மனிதர்களாகிய நீங்கள் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு மாடு. எனக்கு ஐந்தறிவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என்னையும் என் இனத்தவரையும் பொறுத்தவரை, உடலுறவு கொள்வது மிகுந்த இன்பம் தரும் செயல். பிள்ளை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ‘கடமை’ என்று உங்களில் சில மேதாவிகள் உடலுறவைப் புரிந்துகொள்வது எனக்குத் தெரியும். 

என்னை செம்மைவனத்திற்கு வாங்கி வந்தவர் என்னிடம் பேசும் வழக்கம் கொண்டவர். மனிதர்களில் அவர் ’மூடர்கள்’ எனும் வகையைச் சேர்ந்தவர். ஆடு, மாடு, கோழி, மரம், செடி போன்ற உயிரினங்களோடு பேசுபவர்களை ‘மூடர்கள்’ என அழைப்பது நாகரிகர்களின் வழக்கம் என அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

நான் கன்று ஈன்று நான்கு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன. இன்னும் சில நாட்களில் எனக்கு உடலுறவுகொள்ள வேண்டிய தேவை உருவாகிவிடும். இப்போதே எனது முலைகளில் பால் சுரப்பு குறைகிறது, முலை மடி இறுகத் துவங்கிவிட்டது, பிறப்புறுப்பு அவ்வப்போது துடிக்கத் துவங்கிவிட்டது. இந்த அறிகுறிகளை எல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டிய நிலையில் நானும் என்போன்ற மாடுகளும் இருக்கிறோம். 

பால் சுரப்பு நிற்கும் காலத்தில் எங்கள் அடிவயிறு பிசையும் உணர்ச்சி அதிகரிக்கும். அவ்வாறான உணர்ச்சி நிலைகளில் எங்களை அறியாமல் அடி வயிற்றிலிருந்து கத்தத் துவங்குவோம். பசியில் கத்துவதற்கும் காமத்தில் கத்துவதற்கும் எங்கள் குரலில் வேறுபாடுகள் இருக்கும். காமம் மிகும்போது எங்கள் கண்கள் வெறித்து, வால் மயிர்கள் சிலிர்த்து, பிறப்புறுப்பு புடைத்து இருப்பதை உங்களில் எத்தனைப் பேர் பார்த்திருப்பீர்களோ தெரியவில்லை.
சில காலம் முன்புவரை இவ்வாறான அறிகுறிகளைப் பார்த்ததும் எங்களை வளர்ப்பவர்கள் எங்களை ஏதேனும் ஒரு காளையிடன் ஓட்டிச் செல்வார்கள். காமம் தீரத் தீர எங்களுக்கு புணர்ச்சி கிடைக்கும்.

காடுகளில் மேயும்போது கிடைக்கும் புணர்ச்சிகள் இன்னும் சிறப்பானவை. பசுக்களாகிய எங்கள் குரலில் எழும் காமம் மனிதர்களிடன் உதவி கேட்பதற்கானது அல்ல, காளைகளை சுண்டி இழுப்பதற்காக என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். 

இப்போதெல்லாம் எங்களுக்குக் காமம் மிகுந்தால் காளைகளிடம் ஓட்டிச் செல்வதில்லை; மருத்துவர்களிடம் கூட்டிச் செல்கிறார்கள். மருத்துவர்கள் மெத்தப் படித்தவர்கள், அறிவாளிகள், நாகரிகம் தெரிந்தவர்கள், விலங்கியல் பயின்றவர்கள், மேதைகள். காமம் எனும் உணர்வு, கன்று போடுவதற்காக மட்டுமே தோன்றுகிறது என்ற அதி புத்திசாலித்தனமான புரிதல் மருத்துவர்களுக்கு உள்ளது. 

மனிதர்களில் ஆணும் பெண்ணும் கூடுவது பிள்ளை பெறுவதற்காகத்தானோ என்ற ஐயம் எங்களுக்கு இப்போது எழுந்துள்ளது. ஒருவேளை மனிதர்களுக்குக் காமம் என்ற உணர்வே அற்றுவிட்டதோ என்ற குழப்பமும் சமீபகாலமாக உருவாகியுள்ளது. மருத்துவர்கள் எங்கள் காமத்தில் இரசாயனக் கழிவுகளைக் கொட்டி அழித்துவிட்டு, விந்தணுக்களை பிறப்புறுப்பில் பீச்சிவிடுகிறார்கள். காளை செய்ய வேண்டிய வேலையை மருத்துவர்கள் செய்கிறார்கள். ஆனாலும் காளையைப் போன்ற வேலையை அவர்கள் செய்வதில்லை, செய்யவும் முடியாது.

அவர்கள் பீச்சியடிக்கும் விந்தணுவுக்குச் சொந்தமான காளைகள் ஏதோ சில வெளிநாடுகளில் தோன்றியவை. அந்தக் காளைகளுக்கு பசுக்களின் யோனி மறுக்கப்படுகிறது. பசுக்களாகிய எங்களுக்கு காளைகளின் ஆண்குறிகள் மறுக்கப்படுகின்றன. இவ்வாறு ஆண்குறி, பெண்குறிகளுக்கிடையில் கூட அறிவியலைப் புகுத்தும் நாகரிக மனிதர்களின் காலத்தில் பிறந்ததை எண்ணி நானும் என் சக மாடுகளும் அவமானமும் துக்கமும் கொள்கிறோம்.
எங்கள் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டு, நீங்கள் மட்டும் நன்றாக வாழ்ந்துவிடலாம் என நம்புகிறீர்கள். உங்கள் நம்பிக்கையை நான் சிதைக்க விரும்பவில்லை. அதேவேளை, ஒரு செய்தியை உரைக்க வேண்டியுள்ளது. எங்கள் புணர்ச்சியை நீங்கள் நிராகரித்த பின்னர், நாகரிகச் சமூகத்தில் உருவாகியுள்ள மலட்டுத் தன்மையின் அளவைக் கொஞ்சம் ஆய்வு செய்து பாருங்கள். உங்களுக்குத்தான் ஆய்வுகள் என்றால் பிடிக்குமே. மலடு நீக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை எவ்வளவு பெருகியுள்ளது எனப் பாருங்கள்.

ஆண்குறி நுழையாத எங்கள் யோனிகளின் சாபம், முலைக்காம்புகளில் வழியும் பாலின் வளத்தைச் சீரழித்துக்கொண்டுள்ளது. காளையைப் புணர்ந்து பெற்ற கன்றுக்காகச் சுரக்கும் பால் வேறு, மருத்துவர் செலுத்தும் விந்துவில் பிறக்கும் கன்றுக்கான பால் வேறு. 

பிறப்புறுப்பு மரத்துப் போன பசுக்களின் எண்ணிக்கைதான் இப்போது அதிகம். அவற்றின் பாலைத்தானே அருந்திக் களிக்கிறீர்கள். அவற்றில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்று ஆய்வு செய்து முடித்தாயிற்று அல்லவா. அவற்றில் உயிர் உருவாக்கும் ஆற்றல் இருக்கிறதா எனப் பாருங்கள் மேதைகளே. சத்தியமாகச் சொல்கிறேன், காய்ந்த யோனிப் பசுக்களின் பாலில் உயிராற்றல் இருக்காது.

புணர்ச்சி என்பது பிள்ளை பெறும் ‘வேலை’ அல்ல. மனங்கள் கூடிக் களித்து, உடலுக்குள் மழை பொழிந்து, கருப்பை நனைந்து, உயிர் வளரும் படைப்புத்தொழில். அந்தப் படைப்புத் தொழிலில் குறுக்கிட்டு விந்தணுக்களை பீச்சிவிட்டால் கன்று பிறக்கும். அந்தக் கன்று இயற்கையான உடல் வலுவுடன் வாழாது, அக்கன்றுக்காகச் சுரக்கும் பாலில் உயிர் ஆற்றல் இருக்காது. இவ்வாறு பிறக்கும் கன்றுகள் யாவும் மருத்துவமனைகளையும் இரசாயன தீவனங்களையும் நம்பித்தான் வாழ்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் எப்படி மருத்துவமனைகளையும், இரசாயனம் கலந்த உணவுகளையும் நம்பி வாழ்கிறீர்களோ அதேபோல, செயற்கைக் கன்றுகள் வாழ்கின்றன.
எங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை உங்களுக்கும் வழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் புத்திசாலிகள் என்பதால் உங்களுக்கு இந்தத் தகவல் வந்து சேரவில்லை. இப்போதும்கூட உங்களில் பலர் இந்தத் தகவலை நம்பப்போவதில்லை. உங்களுக்கு ஆய்வறிக்கைகள் தேவை, சோதனைகள் தேவை. எங்களுக்கோ காளைகளின் விறைத்த குறிகள் தேவை.

பசுக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு மேதாவிக் கூட்டம் காளைகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. காளைகளுடன் மனிதர்கள் ஆடும் விளையாட்டுகளைத் தடை செய்தது அக்கூட்டம். இப்போது காளைகளை வளர்ப்பது தேவையற்ற செயலாக மாறிவிட்டது.
ஒருபக்கம், விந்து ஊசிகள் மறுபக்கம் காளை விளையாட்டுகளுக்குத் தடை. எங்களை வளர்க்கும் மக்களுக்கு நாங்கள் வெற்றுச் செலவினமாக மாறிப்போனோம்.

பசு என்றால், உயிர் என்றும் பொருள். மாடு என்றால், செல்வம் என்றும் பொருள். உயிரின் ஆதி, செல்வத்தின் உருவம் நாங்கள்தான். காளை என்றால் உயிர்களின் குறியீடு. காளை மீது இறைவன் அமர்கிறான் என்பது, எல்லா உயிர்களையும் அடக்கி ஆள்பவன் என்ற விரிந்த கருத்தின் உருவகம்.
உங்களுக்கு இவையெல்லாம் தேவையற்ற சேதிகள். எந்தப் பாலில் எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பது உங்கள் கவலை. நாய்ப் பாலில் அதிக சத்து இருப்பதாக ஏதேனும் ஆய்வகம் அறிக்கை தந்தால், நாய்களின் முலைகளை நாசமாக்கிவிடும் நவீனர்களின் சமூகம் இது. 

எல்லாவற்றிலும் சத்து, ஊட்டம், உடல்நலம், மருத்துவகுணம் இருக்க வேண்டும் என்று அலைவது நவீனத்தின் மனநோய். சக உயிர்களைப் பற்றிய அறச் சிந்தனை துளியேனும் இருந்தால் எங்களுக்கு இந்தக் கொடுமை நேர்ந்திராது.

உங்களில் மனசாட்சியை விற்றுவிடாத ஒரு சிலரை நோக்கி இக்கடிதம் வழியாக நான் உதவி கேட்கிறேன். 

காளை மாடுகள் யாவும் இப்போது இறைச்சிக்காக விற்கப்படுகின்றன.
ஏர் இழுத்த எங்கள் காளைகள், மலைமலையாகக் குவிந்த நெல்லைப் போர் அடித்த எங்கள் காளைகள், செக்குகளை இழுத்து எண்ணெய் வளம் பெருக்கிய எங்கள் காளைகள், வண்டிகளை இழுத்து கோடானு கோடி மக்களுக்கான வாகனங்களைத் தந்த எங்கள் காளைகள், ஏறு தழுவலில் ஓடி விளையாண்டு இன்புற்ற எங்கள் காளைகள், காடுகளில் எங்கள் மீது ஏறி விழுந்து தடித்த குறிகளால் எங்கள் யோனிகளை விரித்துப் புணர்ந்து பெருமழை பெய்த எங்கள் காளைகள், இப்போது கசாப்புக்கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
மாட்டிறைச்சி உண்பதும் உண்ணாததும் உங்கள் கொள்கை, உங்கள் உரிமை. பசுக்களாகிய நாங்கள் பால் கறப்பதால் தப்புகிறோம். காளைகளுக்கென வேலை ஏதும் உங்கள் நாகரிக சமூகத்தில் இல்லை. ஆகவே, ஆணாகப் பிறக்கும் எல்லா மாடுகளும் கறிக் கடைகளுக்கு மட்டுமே அனுப்பப்படுகின்றன. ஒருகாலத்தில், உழைத்துக் களைத்து இளைத்த மாடுகளைக் கறிக்கு வெட்டினார்கள். இப்போது கொழுத்துத் திரியும் காளைகளாகத் தேடித் தேடி வெட்டுகிறார்கள். 

உங்கள் சமூகத்தின் மேதைகளுக்கு பசுக்கள் வேண்டும், காளைகள் வேண்டாம். மாடுகளாகிய எங்களுக்கோ புணர்வதற்குக் காளைகள் வேண்டும். இதில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைக்கிறீர்களா?

இன்னும் சில நாட்களில் எனக்குப் புணர்ச்சி தேவைப்படும். நான் வாழும் ஊரில் காளைகள் இல்லை, மருத்துவர்கள் இருக்கிறார்கள். எனக்குக் காளையுடன் புணரும் வேட்கை எழுகிறது, மருத்துவர்களின் விந்து ஊசிகள் மீது வெறுப்பு மிகுந்துகொண்டுள்ளது. 

என்னை வளர்ப்பவர் என்னிடம் இது பற்றிப் பேசினார். எ்ப்படியாவது காளை தேடித் தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக அவர் இறையிடம் வேண்டிக் கொண்டும் இருக்கிறார். என்னைப் புணர்வதற்காகவேனும் ஒரு காளை மாட்டை விலைக்கு வாங்கவும் அவர் தயாராக இருக்கிறார். 

என்னைப் போன்ற பசுக்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களுக்கெல்லாம் புணரும் உரிமை வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தின் வழியாக நான் உரையாடுகிறேன். 

எல்லா உயிரினங்களையும் உங்கள் பயன்பாட்டுக்கானவையாகப் பார்க்கும் வெறித்தனத்திலிருந்து விடுபடவே மாட்டீர்களா? ஒரு மரத்தைப் பார்க்கும்போதுகூட, இந்த மரத்தால் என்ன பயன் எனக் கேட்கிறீர்கள். மாடுகளாகிய நாங்கள் மனிதர்களைப் பார்க்கும்போது, ‘இந்த மனிதர்களால் என்ன பயன்?’ எனக் கேட்டால் உங்களிடம் பதில் இருக்காது.
இந்தப் பூமியில் மனிதர்கள் இல்லாத காலம் மிக அதிகம். மாடுகள் இல்லாத காலம் மிகக் குறைவு. நேரடியாகச் சொல்வதானால், பூமிக்கு மனிதர்களைவிட மாடுகளை அதிகம் பிடிக்கும். 

உங்கள் மலம் கூட புழுக்களுக்கு உணவாகாத வகையில், இரசாயனத்தில் கழுவி புதைக்கிறீர்கள். எங்கள் சாணத்தில் ஒவ்வொரு நாளும் கோடானு கோடி புழுக்கள் வாழ்ந்து மடிகின்றன.

புணராத கோழிகளிலிருந்து முட்டைகள் பெறுகிறீர்கள், மலட்டு விதைகளைத் தூவி பழங்கள் அறுக்கிறீர்கள், விதையற்ற பயிர்களை உணவாகக் கொள்கிறீர்கள். உங்களோடு பழகும் எல்லா உயிர்களிடமிருந்தும் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டீர்கள். 

எல்லா உயிரினங்களின் அடி வயிற்று சூட்டிலிருந்து கூறுகிறேன், ‘இதற்கெல்லாம் நீங்கள் அனுபவிப்பீர்கள்’

இப்போதும் அனுபவித்துக்கொண்டுதானிருக்கிறீர்கள். படும்பாடுகளுக்கெல்லாம் நாம் செய்த பாவம்தான் காரணம் என்று உணராமல், அனுபவிக்கிறீர்கள். 

இப்போதும் உங்களால் மாற முடியும். மலட்டுத் தன்மை கொண்ட எல்லா உணவுகளையும் நிராகரியுங்கள். விந்து ஊசிகளுக்கு எதிராகப் பேசுங்கள், செயலாற்றுங்கள். காளைகளைப் பாதுகாக்க ஏதேனும் செய்யுங்கள். பசுக்களை மட்டும் பாதுகாப்போரின் எண்ணிக்கை உயர்கிறது, காளைகளைக் காப்பவர்கள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். காளைகளைப் பாதுகாப்பதற்கென கூடிப் பணியாற்றுங்கள்.

பால்வளம், வெண்மைப் புரட்சி ஆகிய சொற்களைக் கொண்டு எங்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் பாவத்தை இத்துடன் நிறுத்துங்கள். உங்கள் புள்ளிவிவரங்களை விட எங்கள் உணர்ச்சிக் குமுறலுக்கு வலிமை அதிகம்.
நாங்கள் அப்படி என்ன பெரிதாகக் கேட்கிறோம்? எங்களுடன் புணர்வதற்குக் காளை வேண்டும் என்கிறோம். அந்தக் காளை எந்தப் பிறப்பாக இருந்தாலும் கவலையில்லை. கேவலம், நாங்கள் மாடுகள்தானே!

பதிவு செய்த நாள்: 17/07/2016

Image may contain: 1 person, sky, cloud, grass, outdoor and nature

மின்னணு உலகிலிருந்து விலகி, உண்மை உலகிற்குச் செல்லும் வழியில்…!

மின்னணு உலகிலிருந்து விலகி,                                                   உண்மை உலகிற்குச் செல்லும் வழியில்…!
ம.செந்தமிழன்

 

நண்பர்களே,
வணக்கம். நவீனக் கருவிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்ற எனது நீண்ட கால விருப்பத்தின் அடுத்த நிலையை நோக்கி நகர்கிறேன்.

தொலைக்காட்சி இணைப்புகளைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டில் நீக்கிவிட்டோம். அலைபேசிப் பயன்பாட்டினை நான் பெருமளவு குறைத்துவிட்டேன். செம்மை பொறுப்பாளர்கள், குடும்பத்தவருடன் மட்டும் அலைபேசியைப் பயன்படுத்துகிறேன். சமூக வலைதளங்களில் முகநூலை மட்டும் கூடுதலாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளேன்.
இப்போது அதிலிருந்தும் விடுபடுகிறேன்.

இப்போதைய சூழலில் சமூக வலைதளங்கள் நல்ல பங்களிப்புகளுக்குப் பயன்படுகின்றன. இவற்றை முற்றிலும் தவிர்ப்பது, உடனடிச் சாத்தியமல்ல. ஆனாலும், எனது நேரம், திறன் ஆகியவை வலைதளங்களைக் காட்டிலும் நிலத்திற்கும் மனிதர்களுக்கும் சக உயிரினங்களுக்கும் தேவைப்படுகின்றன. செம்மை வனத்துப் பணிகளில் தேக்கம் உள்ளது. எனது பயணங்கள் குறைந்துவிட்டன. மனிதர்களுடன் உறவாடுவது, உரையாடுவது குறைந்துவிட்டது.


இந்த மின்னணு உலகில் இருந்து, எனது அறிவையும் உடலையும், உண்மை உலகிற்குக் கடத்திச் செல்ல விழைகிறேன். நான் உண்மை உலகில்தான் கற்றுக்கொள்கிறேன், வாழ்கிறேன். மின்னணு உலகில் எனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன், கற்றுக்கொள்வதில்லை.
என் கருத்துகளைப் புத்தகங்களாக்கி வெளியிடுவதில் நானும் என் சக மனிதர்களும் நல்ல நிலைகளை எட்டியுள்ளோம். நிறைய நூல்கள் விற்பனை ஆகின்றன. அவற்றைப் படிப்போர் பலர் தமது வாழ்க்கைப் போக்கையே மாற்றிக்கொண்டு எம்முடன் இணைந்துகொள்கிறார்கள். 

இனி, எனது கருத்துகளை நூல்கள் வழியாக மட்டும் எழுத உள்ளேன்.

எனது இந்த முகநூல் பக்கத்தை முடக்கப் போகிறேன். இந்தச் செய்தி பலரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக சில மணி நேரம் இப்பக்கம் நீடிக்கும். எனது கட்டுரைகள், செய்திகள் தேவைப்படுவோர் அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஐயா நம்மாழ்வார் எந்த ஊடகத்தையும் நம்பிப் பணியாற்றவில்லை. அவர் மக்களோடும் நிலத்தோடும் பிணைந்துகொண்டிருந்தார். அவரைக் கேலி செய்தவர்களும் இப்போது அவர் தந்த இயற்கை உணவை உண்பதைப் பார்க்கிறேன். 20 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் தனித்தமிழ் இயக்கம் நடத்தி, நம் மொழியை மீட்டெடுத்த மறைமலை அடிகளும் அவரது வழித்தோன்றல்களும், எந்த ஊடகத்தை நம்பிப் பணியாற்றினார்கள்?
ஏறத்தாழ 700 ஆண்டுகளாக அந்நிய அரசுகளின் கீழ் இருந்து போராடி, மொழியை, பண்பாட்டைக் காத்த நாயன்மாரும் ஆழ்வார்களும் சித்தர்களும் இறையை நம்பினர், மக்களோடு நின்றனர். ’ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற ஒரே ஒரு நூல் வழியாக உலகிற்கே வெளிச்சம் பாய்ச்சிய மசானபு புகோகா, ஊடகத்தை நம்பவும் இல்லை, அலைபாயவும் இல்லை. 

உண்மை வலிமையானது. அது எல்லாச் சக்திகளையும் தன்னை நோக்கி ஈர்க்கும். நான் உண்மையைப் பேசுகிறேன், கடைபிடிக்கிறேன், வாழ்கிறேன். என்னால், இந்தப் புவியின் மாற்றத்தில் மிகத் தெளிவான பங்களிப்புகளைச் செய்ய முடியும்; செய்வேன்.

இதுவரை அவ்வப்போது எழும் சிக்கல்களுக்கு எனது கருத்துகளை வெளியிட்டேன். உங்களில் பலர் அக்கருத்துகளைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறீர்கள். இனி அவ்வாறு செய்யப்போவதில்லை. அடிப்படைகளைப் புரிந்துகொண்டால், அவ்வப்போது சந்தேகம் எழாது.
நாம் வாழும் இந்தக் காலம், நவீனத்தின் சுழலில் எல்லா உயிரினங்களையும் சிக்க வைத்துள்ளது. நவீனம்தான் சரி என்போர் பெரும்பான்மையாகத்தான் இருப்பார்கள். அந்த எண்ணிக்கையைக் கண்டு கலங்காதீர்கள். மந்தையை வழிநடத்தும் ஆடுகள் ஒன்றிரண்டுதான். 


நமது பூமி, நமது வாழ்க்கை நிலைக்க வேண்டும். நஞ்சில்லா உணவு, நீர், உடல் நலம் வேண்டும். நிறுவனங்களிடம் நமது உடல்நலனை ஒப்படைக்கக் கூடாது. குறிப்பாக, நமது பிள்ளைகள் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும். வேதிப் பொருட்களின் பிடியிலிருந்து காற்று, நீர், நிலம் ஆகிய பூதங்கள் தம்மை விடுவித்துக்கொள்ளும் காலம் வரும். அப்போது மனிதர்களின் நிலை மோசமடையும். இப்போது உருவாகும் புயல், பெருவெள்ளம், நில நடுக்கங்கள், ஆழிப் பேரலைகள், காற்று நஞ்சாகுதல் போன்றவை பூமியில் நிகழ்த்தும் மாற்றங்களை மனிதர்களால் இப்போதே தாங்க முடியவில்லை. 

வறட்சி காரணமாக மனிதர்கள் மரணமடைவதும் கால்நடைகள் அழிவதும் உங்கள் கண்ணெதிரே நடக்கின்றன. இவற்றைத் தடுக்க நவீனம் என்ன செய்யும் என்று பார்த்துக்கொண்டிருக்காதீர்கள். உங்களால் இயன்றளவுக்கு நவீனத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுங்கள், மற்றவர்களை விடுவியுங்கள். இந்தக் கருத்துகள் தொடர்பாக விவாதம் செய்துகொண்டிருக்காதீர்கள். நவீனத்தின் பிள்ளைகள் நமது ஆற்றலை, நேரத்தை விவாதம் செய்துதான் விரயம் செய்வார்கள். ஏனெனில் அவர்கள் சொந்தமாக எதையும் உற்பத்தி செய்வதில்லை. நிறுவனங்களின் உற்பத்தியை இவர்கள் சந்தைப்படுத்துகிறார்கள். அதற்கான ஊதியத்தைப் பெறுகிறார்கள். நாம், உற்பத்தியில் ஈடுபட வேண்டியுள்ளது, இயற்கைச் செல்வங்களைக் காக்க வேண்டியுள்ளது. நமக்கு வேலைகள் அதிகமாக உள்ளன.

இப்போதும் இரசாயன வேளாண்மைதான் சரி என்போர் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசும் நேரத்தில், ஒரு பிடி சாணத்தை அள்ளி தோட்டத்தில் வீசுங்கள். அதுதான் நமக்குத் தேவையான செயல். ஏனெனில் நம்மை இகழ்வோருக்கும் நாம்தான் நஞ்சில்லா உணவு தர வேண்டும். நமக்குச் செயல் தேவை; விவாதங்கள் அல்ல.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை என்ற முடிவை நான் எடுத்தபோது நண்பர்கள், வருந்தினார்கள். அதன் பின்னர் நான் ஆற்றி வரும் களப் பணிகளைக் கண்டு அவர்கள் புரிந்துகொண்டனர்.
தை எழுச்சியிலும் நான் மக்களோடுதான் நின்றேன். மீனவர் குப்பங்களில் காவல்துறை தாக்குதல் என்ற சேதி பரவிய அந்த நள்ளிரவிலும் நானும் என் தோழர்களும் குப்பங்களுக்கு ஓடிச் சென்று, விடியும் வரை அங்குதானிருந்தோம். ஆகவே, ஊடகங்களில் தலைகாட்டாதிருப்பது, மக்களிடமிருந்து விலகும் போக்கு அல்ல. மாறாக, மக்களுடன் கூடுதலாக நெருங்கும் வழி.

இன்றும் செம்மை மக்களும் பிற தன்னார்வர்களும் மீனவர்களின் சந்தையில் அழிந்துபோன தராசுகள், மீன்கூடைகள் ஆகியவற்றை வாங்கித் தருவதற்காகக் களத்தில் நிற்கிறார்கள். முகம் காட்டாத பலர் எவ்வளவு வேண்டும் எனக் கேட்டு நிதி தருகிறார்கள். 

‘குறுகலான பாதைகளைத் தேர்வு செய்யுங்கள். ஏனெனில், அகலமான பாதைகள் அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன; அந்த வழிகளில்தான் அதிகமானோர் செல்கிறார்கள்’ (மத்தேயு விவிலியம்) என்றார் என் மனம் கவர்ந்த ஆசான்களில் ஒருவரான இயேசு.
‘சிற்றம்பலத்து நடனமே பேரம்பலமாக விரியும்’ என்பது தமிழ் மறையின் கருத்து. ஆகவே, பெரும்பான்மையை நோக்கிய தளங்களில் நீடிப்பதும், நிலைப்பதும் நல்ல மாற்றங்களைத் தரும் என நினைக்க வேண்டாம். ஒரு சின்னஞ்சிறு குழுவினரின் கருத்து, பெரும்பான்மையை வழி நடத்தி இட்டுச் செல்லும். 

எந்தப் பின்புலத்தையும் எனது அடையாளமாக, கவசமாக வைத்துக்கொள்ளாமல் செயலாற்றத் துவங்கினேன். இப்போது எனது பெயரும், செம்மை என்ற சொல்லும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் குறியீடுகளாக மாறியுள்ளன. 

மேலும் என்னைக் குறுக்கிக்கொள்கிறேன். மேலும் என்னை வலுப்படுத்திக்கொள்கிறேன். மேலும் ஆற்றல் பொங்கப் பணியாற்றுவேன்.
நேர்மறையாகவும் எதிர்மறையாகவும், முகநூல் வழியாக என்னுடன் உறவுகொண்டிருப்போர் அனைவருக்கும் நன்றி.

குறிப்பு:
எனது உரைகள், காணொளிகள் அவ்வப்போது தரவேற்றப்படும். இவற்றை https://www.facebook.com/Semmaivanam/
என்ற இணைப்பில் பெறலாம்.

புத்தகங்களைப் பற்றிய தகவல்களை https://www.facebook.com/Semmai-Publications-243952049110…/…
என்ற இணைப்பில் காணலாம்.
ஊர் சந்தை குறித்த தகவல்கள், அறிவிப்புகளை https://www.facebook.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%A…/
என்ற இணைப்பில் அறிந்துகொள்ளலாம்.

இந்தப் பக்கங்களைத் தொடர்ந்தால், எனது செயல்பாடுகள் செம்மை செயல்பாடுகளை அறிந்துகொள்ளலாம்.
செம்மை சமூகத்தவர், என் கருத்துகளைப் பின்பற்றுவோர் - இந்த இணைப்புகளைப் பலர் அறியச் செய்தால் நல்லது.

தடுப்பூசிகளும் கொடிய நோய்களும்: மறைக்கப்படும் உண்மைகள்!

தடுப்பூசிகளும் கொடிய நோய்களும்: 

மறைக்கப்படும் உண்மைகள்!

ம.செந்தமிழன்

நண்பர்களே,
மருத்துவர்கள் மீது இந்த சமூகம் இன்னும் கொஞ்சம் மரியாதை வைத்துள்ளது. படித்தவர்கள் அந்தக் கல்விக்குரிய பண்புடனும் நடந்துகொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதும், தவிர்ப்பதும் இந்த நாட்டு குடிமக்களுக்கு உள்ள உரிமை. அந்த உரிமையைக் கேள்வி கேட்பதும், ’நீ தடுப்பூசி போட்டுத்தான் ஆக வேண்டும்’ என்று கட்டாயப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல். அதைவிட, மனித உரிமைகளுக்கு எதிரான செயல் இது.

தடுப்பூசிக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யும் மருத்துவர் திரு.அருண்குமார், இவ்வாறான நேரடி மனித உரிமை மற்றும் சட்ட மீறல்களில் ஈடுபடுகிறார்.
எனது முந்தைய பதிவுகளுக்குப் பதில் சொல்வதாக அவர் ஒரு பதிவை எழுதியுள்ளார்.

தடுப்பூசிகளால் தீய விளைவுகள் உள்ளனவா இல்லையா? என்ற என் கேள்விக்கு அவர் தரும் பதில்,

//‘அல்லோபதி ஓமியோபதி எல்லாம் இல்லை பாஸ். இது evidence based medicine.
ஒரு இலை தலையை நீங்கள் மருந்து என்று சொல்லவேண்டுமானால் கூட, அதன் மருத்துவ குணத்தை ஆராய்ந்து, பல பல பரிசோதனை கட்டங்களை தாண்டி, இவை இவை பயன்கள், இவை இவை பக்க விளைவுகள் என்று தெளிவாக நிரூபித்து அதை மக்களுக்கு கொடுத்தால் அது தான் நவீன மருத்துவம். ஒன்றுமே செய்யாமல், எங்கள் மருந்துக்கு பக்க விளைவுகள் ஏதும் கிடையாது என்று கூறுவது அறிவியல் இல்லை.
எங்கள் மருந்துகள் இவை இவை விளைவுகள், இவை இவை பக்க விளைவுகள் என்று சொல்லி தான் கொடுக்க படுகின்றன.
100 சதவீதம் பக்க விளைவுகள் இல்லை என்று ஊரை ஏமாற்றி, கிட்னியை சட்னி ஆக்குவது இல்லை.
ஏன் நவீன மருத்துவத்தில் பக்க விளைவுகள் என்று சிலவற்றை குறிப்பிடுகிறார்கள். மற்றவற்றில் அவை இல்லை?
சிம்பிள்.
மற்ற மருத்துவத்தில் பக்க விளைவுகள் உள்ளனவா என்று பரிசோதித்து பார்ப்பதில்லை’//

- இந்த பதிலில் இருந்து நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்? தடுப்பூசிகளால் தீயவிளைவுகள் உண்டு. ஆனால், நவீன மருத்துவம் அதை ஒப்புக்கொள்கிறது. மரபு மருத்துவம் தனது, மருந்துகளின் பக்க விளைவுகளை ஒப்புக்கொள்வதில்லை. இதுதானே அவர் கூற வரும் கருத்து? இதை நேரடியாகக் கூறிவிட்டால், அவரது தடுப்பூசி பரப்புரைக்கு பாதிப்பு உருவாகிவிடும். அதனால் சுற்றி வளைத்து எழுதுகிறார்.
நமது குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசிகளைப் போட்டால் அவர்களுக்கு மன இறுக்கம் (ஆட்டிசம்) உருவாகும் ஆபத்து உண்டு என்ற அக்கறையில் நான் என் கருத்துகளை வைக்கிறேன். ஆட்டிசம் மட்டுமல்ல, உறுப்புகள் செயலிழப்பு, முற்றிலும் இயக்கம் முடங்கிப்போகும் நிலை ஆகியவையும் உருவாகும் வாய்ப்பு உண்டு. இவ்வாறான பாதிப்புகள் எல்லாம் அமெரிக்காவில் முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எந்தத் தனி நபரும் செய்த செயல்ல இது. அமெரிக்க அரசு இந்த பாதிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளது.
மரபு மருத்துவத்தின் மருந்துகளைப் பற்றி நான் ஒரு வார்த்தையும் இப்பதிவில் எழுதவில்லை. ஆனால், ‘இலை தழைகளுகும் பக்க விளைவு உண்டு’ எனக் கேலி செய்கிறார் திரு.அருண்குமார். இவ்வாறான கேலிகளையும் அவமானங்களையும் சுமந்துகொண்டுதான், இந்தச் சமூகத்தில் என்னைப்போன்றோர் பணி செய்கிறோம். இந்த மண்ணில், மரபுகளை முன்வைப்போருக்கெல்லாம் கிடைக்கும் பரிசுகளில் இவ்வாறான இழிசொற்களும் உண்டு.
கேட்ட கேள்விக்குப் பதில் தராமல், சுற்றி வளைத்து, ‘ஆம். தீய விளைவுகள் உண்டு. ஆனால், நாங்கள் அதை ஒப்புக்கொள்கிறோம்’ என்கிறார் மருத்துவர்.
தடுப்பூசிகளால் ஆட்டிசம் உருவாகிறது’ என்று அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டு, அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கென தனி நீதிமன்றமும், இழப்பீட்டு நிதியமும் அமைத்துள்ளது. இதற்கான சான்றுகளை எனது முந்தைய பதிவில் வைத்துள்ளேன்.
தடுப்பூசிகள் 99% பாதுகாப்பானவை என்றே வைத்துக்கொள்வோம். அந்த 1% என்பது சாதாரணமான பாதிப்பு என நீங்கள் நினைக்கிறீர்களா?
இப்போது ஏறத்தாழ 1 கோடியே 80 இலட்சம் குழந்தைகளுக்கு mmr தடுப்பூசி போடப்போகிறார்கள். இவர்களில் ஒரு சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், குறைந்தது 1,இலட்சத்து 80 ஆயிரம் பிள்ளைகள் நோய்வாய்ப்படுவார்கள். இது என்ன மிகச் சாதாரணமாகக் கடந்துபோகும் பாதிப்பா? கொஞ்சமாவது பொறுப்பாகச் சிந்தித்துப் பேச வேண்டாமா? ஏறத்தாழ 2 இலட்சம் பிள்ளைகள் ஆட்டிசம் நோய்க்கு ஆளானால், அவர்களது பெற்றோருக்கு பதில் சொல்லப் போவது யார்?
எனது இந்தக் கருத்து தவறென்றால், ‘நிச்சயமாக ஒருவருக்கும் இந்தத் தடுப்பூசியால் பாதிப்பு இருக்காது’ என அரசு அறிவிக்க வேண்டும். அரசாங்கம் எந்தக் காலத்திலும் அவ்வாறான உத்தரவாதத்தை அளிக்காது. ஏனெனில், தடுப்பூசிகளால் பல மோசமான தீய விளைவுகள் உருவாகின்ற என்பதை அரசு நன்கு அறிந்துள்ளது. அதனால்தான், இந்தியாவில் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கவில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் சில மருத்துவர்கள், ‘தடுப்பூசி கட்டாயம்’ என்கிறார்கள்.
திரு.அருண்குமார் இந்த அரசாங்கத்தின் பிரதிநிதியாகப் பேசுகிறாரா? அவரால் எப்படி இவ்வளவு பெரிய உத்தரவாதங்களைத் தர முடிகிறது? இங்கே அரசாங்கம் இருக்கிறதா இல்லையா? மக்களது அச்சங்களுக்கும் ஐயங்களுக்கும் அரசுதானே பதில் கூற வேண்டும். தனிப்பட்ட மருத்துவர்கள் தம் கருத்துகளை முன்வைக்கலாம். ஆனால், ‘கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்’ என்று எழுதுவதற்கு எந்தச் சட்டம் அல்லது அரசுத் துறை இவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது?
இந்திய சுகாதார அமைச்சகம் ஏறத்தாழ 331 மருந்துகளைத் தடை செய்தது. இந்த மருத்துவர்கள் அன்றாடம் எழுதிக்கொடுத்துக்கொண்டிருந்த எல்லா மருந்துகளும் அந்தப் பட்டியலில் இருந்தன. அப்படியானால், அந்த மருந்துகளை எல்லாம் விழுங்கி செத்துப் போனவர்களுக்கு எவர் பொறுப்பு? குறைந்தபட்ச குற்றவுணர்ச்சி இருந்தால், ஒரு மருந்தினை ‘கட்டாயம்’ என்று கூற மாட்டார்கள். ’தடுப்பூசி கட்டாயம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால் அதற்கான அரசு அனுமதியைப் பெற்றுவிட்டு வாருங்கள்’ என மக்கள் அவர்களிடம் கூற வேண்டும்.
நண்பர்களே, மீண்டும் கூறுகிறேன். அவர்கள் உண்மையை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ’தடுப்பூசிகளால் எந்தத் தீய விளைவும் இல்லை’ என்று இந்திய அரசோ, அமெரிக்கா போன்ற நவீனக் கொள்கை நாடுகளோ அறிவிக்கவே இல்லை. இங்கே உள்ள மருத்துவர்களில் சிலர் அவ்வாறான கட்டுக்கதையைப் பரப்புகிறார்கள்.
உங்களுக்கு இந்த நாட்டில் சுயமாக முடிவெடுக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள்.
உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி வேண்டாம் என நீங்கள் நினைத்தால், அந்த முடிவைத் துணிச்சலாக பள்ளிக் கூடத்திலும் அரசு அலுவலர்களிடம் தெரிவியுங்கள். அது நமக்குள்ள உரிமை.
எந்த மருந்து தருவதாக இருந்தாலும் அதன் விளைவுகளைப் பற்றி உங்களிடம் தெரிவிப்பது மருத்துவர்களின் கடமை. அதற்கான படிவத்தில் நீங்கள் ஒப்புகைக் கையொப்பம் இட வேண்டும். தனிப்பட்ட ,முறையில் மருத்துவர்களிடம் தடுப்பூசி போடச் சென்றால், அந்தப் படிவத்தைக் கேட்டு வாங்கிப் படியுங்கள். அதன் பிறகு முடிவெடுங்கள்.
நாம் குடிமைச் சமூகத்தில் வாழ்கிறோம்; அலோபதி மருத்துவத் துறையின் அடிமைச் சமூகத்தில் அல்ல.
முக்கியமான குறிப்பு:
இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள தடுப்பூசி செய்தியைப் பாருங்கள்.

இந்த mmr தடுப்பூசியை இந்திய அரசு இன்னும், ‘தேசிய தடுப்புசித் திட்டத்தில் சேர்க்கவில்லை. தமிழகத்தில் தடுப்பூசி முகாம் முடிந்த பின்னர்தான், அவ்வாறு செய்ய இருப்பதாக அரசு அலுவலர் கூறியுள்ளார். தேசிய தடுப்பூசித் திட்டத்தில் கூட இணைக்கப்படாத ஊசிக்கு ஆதரவாக தமிழக மருத்துவர்கள் சிலர் இறங்கி வேலை செய்வது ஏன் எனச் சிந்தியுங்கள்.

பதிவு செய்த நாள்: 30/01/2017

Image may contain: text

தடுப்பூசி பாதிப்புகளுக்கென நீதிமன்றம் அமைத்துவிட்டு வாருங்கள்

தடுப்பூசி பாதிப்புகளுக்கென நீதிமன்றம் அமைத்துவிட்டு வாருங்கள்!
ம.செந்தமிழன்

 

 

’தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் இருப்பது உண்மைதான். ஆனால், அது மிக மிகக் குறைவான அளவில்தான் இருக்கும்’ என்ற கருத்தினை இப்போது அலோபதி மருத்துவர்கள் முன் வைக்கிறார்கள். ’அந்த மிக மிகக் குறைந்த அளவு ஆட்டிசம் குழந்தையாக என் குழந்தை இருந்துவிட்டால் என்ன செய்வது?’ என்று நினைத்துப் பார்ப்பவர்களுக்காக மட்டும் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. மற்றவர்கள் இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
ஏனெனில், ’மிக மிகக் குறைவான அளவு’ என்ற அந்த வாசகம் தனக்குள் பல பெரும் பொய்களை மறைத்துக்கொண்டுள்ளது.
தடுப்பூசிகளைப் பற்றி கேள்வி எழுப்பும் உரிமை இந்த நாட்டில் உள்ளது. பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளது. பொத்தாம் பொதுவாக, ‘தடுப்பூசிகளுக்கு எதிராகப் பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என மிரட்ட முடியாது.
இத்தனை ஆண்டுகாலமாக தடுப்பூசிகளைப் பற்றி இந்தச் சமூகம் கேள்வியே எழுப்பவில்லையே. குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவோரெல்லாம் தெய்வங்கள் என்றுதானே எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தனர்? இப்போது முதல்முறையாக அதைப் பற்றிக் கேள்வி எழும்போது, உணர்ச்சிவசப்படாமல் பதில் சொல்ல வேண்டும்.
ஆனால், அவர்கள் பதட்டமடைகிறார்கள். ‘உங்களை எல்லாம் கைது செய்ய வேண்டும்’ என்கிறார்கள். யார் யாரைக் கைது செய்வதென்ற நியாயம், சட்டம் ஆகியனவெல்லாம் அவர்கள் அறியாதவை.
அலோபதி மருத்துவம் மக்களிடையே நம்பிக்கை இழந்துவிட்டது. எந்த மருந்தும் இல்லாமல் மிக நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெரும் கூட்டம் உருவாகிவிட்டது. இதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? இந்திய அரசமைப்புச் சட்டமோ, மருத்துவச் சட்டங்களோ, ‘எல்லோரும் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்’ என்று கூறுகின்றனவா என்ன? இல்லையே.
மருந்து நிறுவனங்களும், மருத்துவத் தொழிலதிபர்களும் எம் மக்களை மருத்துவத்தை நோக்கி இழுப்பதைப் பார்க்கிறோம். மருந்து வேண்டாம் எனக் கூறும் உரிமை ஒவ்வோர் உயிருக்கும் உண்டு.
தடுப்பூசிகளால் பாதிப்படைந்தோர், இறந்துபோனோருக்கென தனி நீதிமன்ற அமைப்பு அமெரிக்காவில் இயங்குகிறது. தடுப்பூசிச் சேதத்திற்கான தேசிய இழப்பீட்டுத் திட்டம் (The National Vaccine Injury Compensation Program) என்று அதற்குப் பெயர். 1986 ஆம் ஆண்டு முதல் இவ்வமைப்பு இயங்குகிறது.
தடுப்பூசிகளால் உறுப்புச் செயலிழப்பு, மரணம், இயங்கவே இயலாத வகையிலான முடக்கம் ஆகியவை அமெரிக்காவில் அதிகரித்ததைடுத்து, அந்த அரசு இந்த வழக்குகளுக்காகவே தனிச் சட்ட அமைப்பை உருவாக்கியுள்ளது. மிக முக்கியமாக, ஆட்டிசம் எனப்படும் மன இறுக்கம் குழந்தைகளைப் பாதிப்பதற்குத் தடுப்பூசிகளும் முக்கியக் காரணம் என்பதை அமெரிக்க அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.
தடுப்பூசிகளின் வருகைக்குப் பின்னர்தான் குழந்தை நோய்கள் அதிகரித்தன. அவற்றிலும் மன இறுக்கத்திற்கும் தடுப்பூசிகளுக்கும் உள்ள உறவு மிக முக்கியமானது.
அமெரிக்க தடுப்பூசி இழப்பீட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் இறுதிப் பத்தி, இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘மார்ச் 1, 2010 ஆம் ஆண்டு நிலைப்படி, தடுப்பூசிகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக மொத்தம் 13,330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில், 5,617 வழக்குகள் ஆட்டிசம் தொடர்பானவை. இவற்றில் 7,397 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அவற்றில், 2,409 வழக்குகளில் மனுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது’
இந்த வழக்குகள் யாவும் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக நடந்தவை. ’தடுப்பூசிகளால்தான் என் பிள்ளைக்கு ஆட்டிசம் வந்தது. என் பிள்ளையின் உறுப்புகள் செயலிழந்தன, என் குழந்தை இறந்தே விட்டது’ என்றெல்லாம் வாதாட வேண்டுமானால் அதற்கான சட்ட விதிகள் மிக அதிகம். ஆண்டுக் கணக்கில் இவ்வழக்குகள் நடக்கின்றன.
இவ்வளவுக்குப் பின்னர் வெளியான தீர்ப்புகளின் விவரம் இது.
இந்தியாவில் இவ்வாறான சட்ட அமைப்பே இல்லை. தடுப்பூசிகளால் தீய விளைவுகள் உருவாகும் என்ற சிந்தனை கூட பெரும்பான்மை மக்களுக்குக் கிடையாது.
மன இறுக்கம் (ஆட்டிசம்) என்ற கொடுமையான நோய் இந்தியாவில் எந்தளவுக்குப் பெருகிக்கொண்டுள்ளது என்பதைப் பாருங்கள்.
’2012 ஆம் ஆண்டு இந்தியாவில் 1 கோடி குழந்தைகள் மன இறுக்கத்தில் பாதிக்கப்பட்டிருந்தனர் என்கிறது நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் (centres for disease control and prevention) எனும் அமெரிக்க நிறுவனம். ‘இந்தியக் குழந்தைகளில் 88 பேரில் ஒருவருக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது’ என்றும் அவ்வமைப்பு கூறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 110 குழந்தைகளில் ஒருவருக்கு இருந்தது. இப்போது ஆட்டிசம் விகிதம் உயர்ந்துள்ளது’ என்கிறது அதன் அறிக்கை.
எங்கு பார்த்தாலும் மன இறுக்கம் மிகுந்த பிள்ளைகளை நாம் பார்க்கிறோமே! அவர்களுக்கெனச் சிறப்புப் பள்ளிக் கூடங்கள் வந்துவிட்டன, மருத்துவமனைகள் பெருகிவிட்டன. அவர்களை மையமாக வைத்து இயங்கும் தொண்டு நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் பல்கிப் பெருகிக்கொண்டுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் தடுப்பூசிகளைப் பற்றி நாம் கேள்விகூட கேட்கக் கூடாதென்றால், மக்களெல்லோரும் அலோபதி மருத்துவத்தின் அடிமைகளா என்ன?
இந்த MMR தடுப்பூசியை ஜப்பான் அரசு ஏற்கெனவே தடை செய்துவிட்டது. இதே தடுப்பூசியைப் பற்றி பிரிட்டனில் கடும் வாக்குவாதங்கள் நிகழ்ந்துள்ளன. MMR தடுப்பூசிகளுக்கும் மன இறுக்கம் (ஆட்டிசம்) மற்றும் வேறுபல நோய்களுக்குமான உறவைப் பற்றி பிரிட்டன் மக்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்தத் தடுப்பூசி வந்த பின்னர் தம் பிள்ளைகளுக்கு ஆட்டிசம் அதிகரித்ததாக அங்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அலோபதி மருத்துவரான ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட் (Dr. Andrew Wakefield) 1998 ஆம் ஆண்டு, ‘mmr தடுப்பூசிக்கும் மன இறுக்கம் நோய்க்குமான உறவைப் பற்றிய அறிக்கைகளை வெளியிட்டார். இந்த அறிக்கைகளை அவர் பணியாற்றிய ராயல் மருத்துவப் பல்கலைக் கழகம் ஒப்புக்கொள்ளவில்லை. அந்தப் பல்கலைக் கழகத்திலிருந்தே வெளியேறினார் அவர்.
மேற்படித் தடுப்பூசிக்கும் மன இறுக்கம் நோய்க்குமான சான்றுகளைப் பல மருத்துவர்கள் முன் வைத்தனர். அவர்களுக்குப் பதில் அளித்த பிரிட்டன் மருத்துவ அறிவியல் தலைவர் பீட்டர் லாக்மென் என்ன கூறினார் தெரியுமா?
‘தடுப்பூசி கொடுப்பதால் எவ்வளவு கேவலமான (nasty) விளைவுகள் ஏற்படுகின்றன என்று நீங்கள் கூறினாலும், தடுப்பூசி போடாமல் விட்டால் அதைக் காட்டிலும் 100 மடங்கு அதிகமான கேவலங்கள் உருவாகும்’ என்றார். அழகான பதில்!
இதே பதிலைத்தான் இங்கே உள்ள மருத்துவர்களும் கூறிக்கொண்டுள்ளார்கள். ஆனால், உண்மையை இவ்வாறான எரிச்சல் மிகுந்த வார்த்தைகளால் மறைக்க முடியாது.
நீங்கள் புள்ளி விவரங்களைப் பார்வையிடுங்கள். குழந்தைகளுக்கான புற்றுந்நோய், சர்க்கரை, இதய நோய், சிறுநீர்க நோய், நுரையீரல் மற்றும் சுவாச நோய் ஆகியனவெல்லாம் குறைந்துள்ளனவா? அதிகரிக்கின்றனவா? எனப் படியுங்கள். இவை எல்லாமே மிக வேகமாக அதிகரிக்கின்றன என்பதுதான் உண்மைநிலை. அலோபதி அமைப்புகளும் இவ்வாறான புள்ளி விவரங்களைத்தான் முன்வைக்கின்றன.
இந்த அரசும் மருத்துவத் துறையும் எந்தத் தடுப்பூசியை நீட்டினாலும் நம் பிள்ளைகளுக்குப் புகட்டிக்கொண்டுதானே இருக்கிறோம். பின்னரும் ஏன் இவ்வளவு நோய்கள் குழந்தைகளைப் பற்றிக்கொண்டுள்ளன? எனக் கேட்பது நம் உரிமை. தடுப்பூசிகளின் வழியாக மன இறுக்கம் வரும் என்பது கற்பனை அல்ல. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த உண்மையின் ஒரு துளியையாவது இந்திய மக்களிடையே இந்த அரசு வெளிப்படுத்துகிறதா?
இந்திய மருத்துவச் சட்டங்கள், ‘ஒரு மருந்து தரும் முன், அம்மருந்தின் விளைவுகளைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும்’ என்ற விதியை வலியுறுத்துகின்றன. ஒரே ஒரே மருத்துவர் இந்தக் கொள்கையைக் கடைபிடித்துவிட்டு ஒரு குழந்தையின் உடலைத் தொடட்டுமே!
மேற்கண்ட எனது எல்லாக் கருத்துகளையும் நிராகரிப்போருக்கு நான் கூறும் செய்தி ஒன்றுதான். அமெரிக்காவைப்போல், தடுப்பூசி வழக்குகளுக்கென ஒரு நீதிமன்றத்தை அமையுங்கள். இந்தச் சமூகத்து மக்களும் தம் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு நீதிமன்றங்களுக்கு அலையட்டும். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இழப்பீடு கிடைக்கட்டும். அல்லது வழக்கு தள்ளுபடி ஆகட்டும்.
குழந்தையின் வாழ்க்கையே நாசமான பின்னர், இழப்பீட்டுத் தொகைக்காக நீதிமன்றத்தில் அலையும் அமெரிக்கப் பெண்களின் வரிசையில் தமிழ்நாட்டுப் பெண்களும் இணையட்டும். உலகமயம் அதன் அடுத்த கட்டத்தை அடையட்டும்.
மரபு மருத்துவங்கள் மீதுதானே இவர்களுக்குக் கோபம்?
‘ஆட்டிசம், குழந்தைச் சர்க்கரை, இதய நோய்கள், புற்றுநோய்கள் ஆகியவை அதிகரிப்பதற்கான காரணம் துளசி நீரும், மிளகு கசாயமும், தூதுவளைக் கீரையும்தான்’ என்று அவர்கள் அறிவித்துவிடட்டும்.
இந்த அரசு மக்களுக்கானது என்றால், ‘தடுப்பூசிகளின் தீய விளைவுகளையும் கூறிவிட்டு, அதன் பின்னர்தான் குழந்தைகளுக்கு அந்த ஊசியைப் போட வேண்டும்’. இதுதான் சட்டம்; இதுதான் நியாயம். தேவையா இல்லையா என மக்களே முடிவெடுக்கட்டும். அதைச் செய்யாமல், ‘தடுப்பூசி நல்லது’ என்ற ஒற்றைச் செய்தியை மட்டுமே அரசு பரப்பும் என்றால், அந்தப் பரப்பலுக்காக மக்களின் வரிப்பணம் செலவிடப்படும் என்றால், இதை எதிர்ப்போரை அச்சுறுத்தும் என்றால், இது மக்களுக்கான அரசாக இருக்க முடியாது.
அமெரிக்க அரசு தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்டோருக்கு 2010 ஆம் ஆண்டு வரை வழங்கிய இழப்பீட்டு விவரம் இது:
1988 ஆம் ஆண்டுக்கு முந்தைய வழக்குகளில் இழப்பீடு – ரூ. 6,130 கோடி (900 மில்லியன் டாலர்)
1988 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய இழப்பீடு – ரூ.13,600 கோடி (2 பில்லியன் டாலர்)
2010 ஆம் ஆண்டு முதல் இதற்கான ஒதுக்கீட்டில் வைக்கப்பட்டுள்ள தொகை – ரூ.20,400 கோடி (3 பில்லியன் டாலர்)
இந்திய – தமிழக அரசுகளே, எங்கள் பிள்ளைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நீங்கள் எத்தனை ஆயிரம் கோடிகளை ஒத்துக்கியிருக்கிறீர்கள்? இந்தக் கேள்வியையாவது கேட்கலாமா அல்லது இதுவும் தேசதுரோகமா!

பதிவு செய்த நாள் : 29/01/2017


                                   

தமிழர் அறம் : படகுகள், மேற்கூரைகள் சீர்செய்யப்படுகின்றன

தமிழர் அறம்: 25 படகுகள், 17 மேற்கூரைகள் சீர்செய்யப்படுகின்றன!
ம.செந்தமிழன்

 

நண்பர்களே,
மீனவர் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யும் நோக்கில், ‘தமிழர் அறம் காப்போம்’ என்ற வாசகத்துடன் எழுதியிருந்தேன். பலர் இந்த அறப்பணியில் ஈடுபட முன் வந்தீர்கள்.
நடுக்குப்பம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக, நமது குழுவினர் களப்பணியில் ஈடுபட்டனர். பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானவையாக நாங்கள் பின்வரும் சிக்கல்களைக் கருத்தில்கொண்டோம்.
1. மீனவர்களின் படகுகள், வலைகளை உடனடியாகச் சீர் செய்வது. அவர்களது வாழ்வாதாரத்தை மீட்பது.
2. வீடுகளின் கூரைகள், கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பழுதுபார்ப்பது.
3. மருத்துவ சிகிச்சை பெறும் நிலையில் உள்ளோருக்கு அதற்குத் தேவையான நிதியை அளிப்பது.

மீனவர்கள் அதிகமான பணச் சேமிப்பு இல்லாமல் வாழ்வதைக் கண்டோம். அதிகபட்சம் ஞாயிற்றுக் கிழமை (2/2/17) வரைக்கும் கடலுக்குப் போகாமல் சமாளிக்கலாம். அதற்குப் பின்னர், உணவுக்கும் கூட பணம் இருக்காது என்ற அவர்களது நிலையை நம் குழுவினர் புரிந்துகொண்டனர். வெளி நாடுகளில் இருந்தும், ஊர்களிலிருந்தும் உதவ முன்வந்தவர்களிடமிருந்து பணம் வந்து சேர்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. நாங்கள் அறக்கட்டளையோ, தன்னார்வ அமைப்போ அல்ல என்பதால் பணத்தை வங்கியில் மாற்றுவதில் குழப்பம் இருந்தது. மேலும், இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியினால் வங்கியில் பணம் எடுப்பதும் குறை வாய்ப்புள்ள செயலாகிவிட்டது.
ஒருபுறம் பலர் எம்மை அழைத்து தமது உதவிக் கரங்களை நீட்டுகிறார்கள். மறுபுறம் எம்மால் அவற்றை முறையாக வாங்க இயலவில்லை. எப்படியும் இன்று இரவுக்குள் படகுகளையாவது சீர் செய்து தர வேண்டும் என்ற நிலையும் நம் குழுவினருக்கு மனதளவில் சங்கடத்தை உருவாக்கியது.
இந்த நிலையைச் சமாளிப்பதற்காக, தன்னார்வர்கள் சிலர், செம்மைச் சமூகத்தவர் சிலர் சேர்ந்து தமது கையிருப்புகளைச் செலவிட்டு தேவையான அனைத்தையும் வாங்கிக் கொடுத்தார்கள். பங்களிப்பு செய்ய விரும்புவோரது தொகை வந்த பின்னர் அவர்களது தனிப்பட்ட சுமையைக் குறைக்கலாம் என நினைக்கிறேன்.
பின்வரும் பொருட்கள் இன்று மீனவர்களுக்கு வழங்கப்பட்டன:
1. 25 படகுகளுக்கான பொருட்கள் : வலைகள், நங்கூரக் கயிறுகள், பாய்மரப் பதாகைகள், இதர உதிரி பாகங்கள்.
2. ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரைகள்: 17.
மேலும், துடுப்புகள், துடுப்புக் கழிகள், வேறு சில கம்புகளும் உதிரி பாகங்களும் நாளை வாங்கித்தர உள்ளோம்.
25 படகுகளில் ஏறத்தாழ 250 மீனவர்கள் தொழில் செய்வதாக அம்மக்கள் கூறினார்கள். இந்த 25 படகுகளும் முழுமையாக இயங்கும் நிலைக்குக் கொண்டு வரத் தேவையான அனைத்தையும் செய்வதென உறுதிகொண்டுள்ளோம்.
திங்கள் முதல் அம்மீனவர்கள் தம் தொழிலுக்குத் திரும்புவார்கள் என எண்ணுகிறேன்.
மேலும் மருத்துவச் சிகிச்சையில் உள்ள சிலருக்கு உதவித் தொகை வழங்க உள்ளோம்.

நடுக்குப்பத்தில் உள்ள ஊர்த்தலைவர் திரு.அசோக் முன்னிலையில் பொருட்கள் வழங்கப்பட்டன. பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக மீனவர்கள் சிலர் நம் குழுவினரோடு வந்திருந்தனர்.

இப்பணி முழுமையடைந்த பின்னர் பணியில் ஈடுபட்டவர்களை அறிவிக்கிறேன். பங்களிப்பு செய்வோர், இப்பணி சிறப்பாக நடக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டுள்ளோர் அனைவருக்கும் நன்றி.

பதிவு செய்த நாள்: 29/01/2017
Image may contain: 3 people, people standing
Image may contain: 12 people, outdoor
Image may contain: 6 people, people standing and outdoorImage may contain: 1 person, standing and outdoor

நாய் இனப்பெருக்க மையத்திற்கே இதுதான் நிலைமை

தமிழக அரசின் நாய் இனப்பெருக்க மையத்திற்கே       இதுதான் நிலைமை!
ம.செந்தமிழன்

 

மரபு உயிரினங்களை அழிப்பது, பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு வழி அமைப்பது – இவை இரண்டும் அவர்களின் கொள்கைகள். இந்தக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக அவர்கள் கையாளும் உத்திகள் எண்ணற்றவை. அவற்றில் ஒன்று ‘ஜீவகாருண்யம்’ என்பது. மண்ணின் மைந்தரையும், உயிரினங்களையும் அடக்கி, ஒடுக்கி பன்னாட்டு அமைப்புகளின் முன் மண்டியிடச் செய்வது அவர்களின் வேலைத் திட்டம். இந்த வேலைத் திட்டத்தின் செயல் தந்திரங்களில் ஒன்று, ‘சைவ உணவுக்கு மாறுங்கள்’ என்பது.

உணவு படைக்கும் மரபுச் செயலை, ‘உணவு உற்பத்தி’ என்ற பேரால் முழு வணிகமாக்குவது அவர்கள் இலக்கு. இதைச் சாதிக்க அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களில் ஒன்று, ‘விலங்குகளின் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம்’ என்பது.

தம் பேராசைகளை நிறைவேற்றுவதற்காக எதையும் செய்வார்கள் அவர்கள். பசுக்களின் பிறப்புறுப்புகளை விந்து ஊசியால் அவமதிப்பார்கள். காளைகளின் ஆண்குறிகளில் பாலிதீன் பைகளைக் கட்டி விந்து எடுப்பார்கள். மாட்டிறைச்சி ஏற்றுமதியைப் போற்றி வளர்ப்பார்கள். சின்னஞ்சிறு சந்துபோன்ற இடத்திற்குள் மாடுகளை வரிசையாக அனுப்பி, அந்தச் சந்தின் இறுதிக்குச் சென்ற மாடு அடுத்து என்ன செய்வதெனத் திகைத்துக் கத்தும்போது, அதன் உச்சந்தலையில் ஓர் ஊசி குத்தப்படுகிறது. மறு நொடி அந்த மாடு செத்து விழுகிறது. அடுத்த நொடி வேறொரு எந்திரம் அதன் தலையைத் துண்டாக்கி வீசுகிறது.

இவ்வாறான கொலைக் கூடங்களின் பின்னணியில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் அவர்களுக்கு, ‘சைவமாக மாறுங்கள்’ எனும் பரப்புரைக்குக் கூலி கொடுக்கின்றன. அவர்களுக்கென மானம், வெட்கம் ஏதும் இல்லை. நிர்வாணமாக நின்றுகொண்டு, ‘சைவத்துக்கு மாறுங்கள்’ என அழைப்பார்கள். ஆணும் பெண்ணும் அம்மணமாகக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ‘விலங்குகளை வதைக்காதீர்கள்’ என்பார்கள். நடிகர்களை அழைத்து விருது கொடுப்பார்கள், வேறு வகை விருந்து கொடுப்பார்கள். மரபு விலங்குகளை அழிப்பதற்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் செய்வார்கள்.

பீட்டா (PETA) மட்டுமல்ல, இந்திய விலங்கு நல வாரியத்தையும் உள்ளடக்கிய மாபெரும் சதிக் கும்பல் அந்த ‘அவர்கள்’ எனும் சொல்லுக்குப் பின் ஒளிந்துள்ளது. நாம் அனைவரும் ஏறுதழுவலைக் காப்பதற்காகக் களத்திற்கு அணிதிரண்டபோது, சென்னை உயர்நீதிமன்றம் ஓர் உத்தரவை வழங்கியது.
‘தமிழக அரசு நடத்தும் நாய் இனப்பெருக்க மையம் இழுத்து மூடப்படட்டும். இனி அது இயங்கக் கூடாது’ என்பது அவ்வுத்தரவு. தமிழ்நாட்டின் மரபு நாய் வகைகளை இனப்பெருக்கம் செய்யும் மையம் அது. சிப்பிப்பாறை, இராஜபாளையம் உள்ளிட்ட நாய்வகைகளும் சில அயல் நாய் வகைகளும் அந்த அரசு மையத்தில் இருந்தன. அவையெல்லாம் இனப்பெருக்கம் செய்யப்பட்டு மக்களுக்கு விற்கப்பட்டன.

’இந்த மையத்தில் நாய்கள் துன்புறுத்தப்படுகின்றன’ என வழக்குத் தொடுத்தது பீடா. இந்திய விலங்கு நலவாரியம் (Animal Welfare Board of India) இந்த வழக்கை ஆதரித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது. உயர்நீதிமன்றம் தமிழக அரசின் நாய்கள் இனப்பெருக்க மையம் இனி இயங்கக் கூடாது என தீர்ப்பு வழங்கிவிட்டது.

பீடா, இந்திய விலங்கு நலவாரியத்தின் குற்றச்சாட்டுகளில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்:

1. இலாபநோக்கத்துடன் நாய்களை விற்பதும், அவற்றை நோயாளிகளாகப் பராமரிப்பதும் தவறு.
2. நாய்கள் எப்போதும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தன.
3. நாய்களுக்கு தமிழக அரசின் அந்த மையம் ஊட்டச்சத்து உணவு தரவில்லை.
4. பாண்டி என்ற பேர் கொண்ட சிப்பிபாறை நாய் மன அழுத்தத்தில் இருந்தது.
5. நாய்களுக்கு உண்ணி எடுக்கும் வேலையை அந்த மையம் சரியாகச் செய்யவில்லை.
6. மரபணுச் சிக்கல்களை உருவாக்கும் இனப்பெருக்கம் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.
7. நாய்கள் குட்டி ஈன்ற விவரங்களை, அவற்றின் மரபுவகையுடன் கூடிய ஆவணங்கள் அம்மையத்தில் இல்லை.
8. சீமை நாய்களின் இறப்பு விகிதம் ‘அனுமதிக்கப்பட்ட’ விகிதத்தை விட அதிகமாக இருந்தது.

மேற்கண்ட காரணங்களை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம், அரசு நடத்தும் ஒரு இனப்பெருக்க மையத்தையே முடக்கிவிட்டது.

நாட்டுக் காளைகளைப் பொலிகாளைகளாகப் பராமரிக்க எவரேனும் நினைத்தால் அவர்கள் மீதும் இதே பீடாவும், விலங்கு நலவாரியமும் பாயும். ஏனெனில், மரபுவிலங்கினங்களை அழிக்கும் அவர்களது செயல்திட்டங்களுக்கான வலிமையான ஆயுதங்கள்தான் மேற்கண்ட காரணங்கள்.

இந்திய - தமிழக அரசுகளின் கால்நடை இனப்பெருக்கக் கொள்கை (Cattle Breeding Policy), ஜெர்சி, பிரீசியன் ஆகிய இரு அயல் மாடுகளைத்தான் முன்னிலைப்படுத்துகின்றன. மலைப்பகுதிகளில் பிரீசியன், சமவெளிகளில் ஜெர்சி என்பதுதான் இக்கொள்கையின் இலக்கும், நோக்கமும்.
எவரேனும் நாட்டு மாடுகளை வைத்து ‘பொலிகாளை’ மையம் நடத்தினால், பீடா போன்ற அமைப்புகள் அந்த மையத்தின் மீது புகார் எழுப்பும். இந்திய விலங்கு நல வாரியம், அந்தப் புகாரை ஆதரித்து வழக்கில் தன்னை இணைத்துக்கொள்ளும். நீதிமன்றம் பொலிகாளை மையத்தைத் தடை செய்யும்.

இந்த நெருக்கடி நிலைமையை ஏற்கெனவே, தமிழக அரசின் கால்நடைத் துறையும், பால்வளத் துறையும் உருவாக்கி வைத்துள்ளன. ’பொலிகாளை மையம் வைக்கக் கூடாது’ என்று சட்டம் இல்லை. ஆனால், பொலிகாளை மையத்தை முடக்கும் விதிகள் உள்ளன. ‘நாங்கள் சென்றபோது அங்கிருந்த காளை மாடு மன அழுத்ததில் இருந்தது’ என்று அவர்கள் கூறினால் போதும். பொலிகாளை மையத்திற்குத் தடை விதிக்கப்படும்.

’ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது’ என்று சட்டம் இல்லை. ஆனால், அதை முடக்குவதற்கான விதிகள் உள்ளன. அவற்றைக்கொண்டுதான் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கினார்கள். மோசடி செய்து சட்டத்தை ஏமாற்றுவதும், மோசடியான திட்டங்களையே சட்டமாக இயற்றுவதும் அவர்களுக்குத் தெரிந்த வித்தைகள்.

இந்திய – தமிழக அரசுகளின் சீமை மாடுகள் இனப்பெருக்க மையங்களில் உள்ள காளைகள் எவ்வளவு குரூரமாகத் துன்புறுத்தப்படுகின்றன என்பதை பீடாவும், விலங்கு நலவாரியமும் கண்டுகொள்ளமாட்டா. அந்தக் காளைகளுக்குச் செயற்கையான முறையில் பாலுணர்ச்சி தூண்டப்படுகிறது. அவற்றின் எதிரே பசுமாட்டு பிறப்புறுப்பு போல, பாலிதீன் பை வைக்கப்படுகிறது. காளைகள் அந்தப் பைக்குள் ஆண் குறியைச் செலுத்தித் துன்பப்படுகின்றன. பீய்ச்சப்படும் விந்துவைச் சேகரித்து கோடிக் கணக்கான பணத்தைச் சம்பாதிக்கின்றன பன்னாட்டு அமைப்புகளும், இந்திய அரசுத் துறைகளும்.

இவற்றையெல்லாம் அவர்கள் ஆதரிக்கிறார்கள். மரபுச் செல்வங்களை அழிக்கும் நோக்கத்திற்காக எதுவும் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள்.
நாட்டுக் காளைகள், பசுக்கள் உள்ளிட்ட மரபு உயிரினங்களை இயற்கையான முறையில் இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். காளை, நாய் வளர்ப்போர் தமக்குள் தொடர்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். சீமை மாடுகளும் நாய்களும் கூட இயற்கையான உறவுகொள்வதை நாம் ஊக்குவிக்க வேண்டும். காங்கேயம், உம்பளச் சேரி போன்ற நாட்டு மாடுவகைகளைக் கூட விந்து ஊசி வழியாகப் பரப்பும் வேலையை நாட்டுக் காளை வளர்க்கும் பலர் செய்துகொண்டுள்ளனர்.

நாட்டு மாடுகளை வணிகப் பண்டமாகப் பார்ப்பவர்களுக்குத்தான் அவற்றின் விந்து நீரையும் விற்பனை செய்யும் சிந்தனை வரும். நாம் தமிழரின் அறம் போற்றுவோம்.

’எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே’- எனப் பாடிய தாயுமானவரின் மரபினர் நாம்.

மரபுச் செல்வங்களைக் காப்போம். எல்லா உயிரினங்களின் உணர்வுகளை மதிப்போம்.

பதிவு செய்த நாள்: 25/01/2017

Image may contain: dog