Friday, 10 February 2017

மின்னணு உலகிலிருந்து விலகி, உண்மை உலகிற்குச் செல்லும் வழியில்…!

மின்னணு உலகிலிருந்து விலகி,                                                   உண்மை உலகிற்குச் செல்லும் வழியில்…!
ம.செந்தமிழன்

 

நண்பர்களே,
வணக்கம். நவீனக் கருவிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்ற எனது நீண்ட கால விருப்பத்தின் அடுத்த நிலையை நோக்கி நகர்கிறேன்.

தொலைக்காட்சி இணைப்புகளைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டில் நீக்கிவிட்டோம். அலைபேசிப் பயன்பாட்டினை நான் பெருமளவு குறைத்துவிட்டேன். செம்மை பொறுப்பாளர்கள், குடும்பத்தவருடன் மட்டும் அலைபேசியைப் பயன்படுத்துகிறேன். சமூக வலைதளங்களில் முகநூலை மட்டும் கூடுதலாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளேன்.
இப்போது அதிலிருந்தும் விடுபடுகிறேன்.

இப்போதைய சூழலில் சமூக வலைதளங்கள் நல்ல பங்களிப்புகளுக்குப் பயன்படுகின்றன. இவற்றை முற்றிலும் தவிர்ப்பது, உடனடிச் சாத்தியமல்ல. ஆனாலும், எனது நேரம், திறன் ஆகியவை வலைதளங்களைக் காட்டிலும் நிலத்திற்கும் மனிதர்களுக்கும் சக உயிரினங்களுக்கும் தேவைப்படுகின்றன. செம்மை வனத்துப் பணிகளில் தேக்கம் உள்ளது. எனது பயணங்கள் குறைந்துவிட்டன. மனிதர்களுடன் உறவாடுவது, உரையாடுவது குறைந்துவிட்டது.


இந்த மின்னணு உலகில் இருந்து, எனது அறிவையும் உடலையும், உண்மை உலகிற்குக் கடத்திச் செல்ல விழைகிறேன். நான் உண்மை உலகில்தான் கற்றுக்கொள்கிறேன், வாழ்கிறேன். மின்னணு உலகில் எனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன், கற்றுக்கொள்வதில்லை.
என் கருத்துகளைப் புத்தகங்களாக்கி வெளியிடுவதில் நானும் என் சக மனிதர்களும் நல்ல நிலைகளை எட்டியுள்ளோம். நிறைய நூல்கள் விற்பனை ஆகின்றன. அவற்றைப் படிப்போர் பலர் தமது வாழ்க்கைப் போக்கையே மாற்றிக்கொண்டு எம்முடன் இணைந்துகொள்கிறார்கள். 

இனி, எனது கருத்துகளை நூல்கள் வழியாக மட்டும் எழுத உள்ளேன்.

எனது இந்த முகநூல் பக்கத்தை முடக்கப் போகிறேன். இந்தச் செய்தி பலரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக சில மணி நேரம் இப்பக்கம் நீடிக்கும். எனது கட்டுரைகள், செய்திகள் தேவைப்படுவோர் அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஐயா நம்மாழ்வார் எந்த ஊடகத்தையும் நம்பிப் பணியாற்றவில்லை. அவர் மக்களோடும் நிலத்தோடும் பிணைந்துகொண்டிருந்தார். அவரைக் கேலி செய்தவர்களும் இப்போது அவர் தந்த இயற்கை உணவை உண்பதைப் பார்க்கிறேன். 20 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் தனித்தமிழ் இயக்கம் நடத்தி, நம் மொழியை மீட்டெடுத்த மறைமலை அடிகளும் அவரது வழித்தோன்றல்களும், எந்த ஊடகத்தை நம்பிப் பணியாற்றினார்கள்?
ஏறத்தாழ 700 ஆண்டுகளாக அந்நிய அரசுகளின் கீழ் இருந்து போராடி, மொழியை, பண்பாட்டைக் காத்த நாயன்மாரும் ஆழ்வார்களும் சித்தர்களும் இறையை நம்பினர், மக்களோடு நின்றனர். ’ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற ஒரே ஒரு நூல் வழியாக உலகிற்கே வெளிச்சம் பாய்ச்சிய மசானபு புகோகா, ஊடகத்தை நம்பவும் இல்லை, அலைபாயவும் இல்லை. 

உண்மை வலிமையானது. அது எல்லாச் சக்திகளையும் தன்னை நோக்கி ஈர்க்கும். நான் உண்மையைப் பேசுகிறேன், கடைபிடிக்கிறேன், வாழ்கிறேன். என்னால், இந்தப் புவியின் மாற்றத்தில் மிகத் தெளிவான பங்களிப்புகளைச் செய்ய முடியும்; செய்வேன்.

இதுவரை அவ்வப்போது எழும் சிக்கல்களுக்கு எனது கருத்துகளை வெளியிட்டேன். உங்களில் பலர் அக்கருத்துகளைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறீர்கள். இனி அவ்வாறு செய்யப்போவதில்லை. அடிப்படைகளைப் புரிந்துகொண்டால், அவ்வப்போது சந்தேகம் எழாது.
நாம் வாழும் இந்தக் காலம், நவீனத்தின் சுழலில் எல்லா உயிரினங்களையும் சிக்க வைத்துள்ளது. நவீனம்தான் சரி என்போர் பெரும்பான்மையாகத்தான் இருப்பார்கள். அந்த எண்ணிக்கையைக் கண்டு கலங்காதீர்கள். மந்தையை வழிநடத்தும் ஆடுகள் ஒன்றிரண்டுதான். 


நமது பூமி, நமது வாழ்க்கை நிலைக்க வேண்டும். நஞ்சில்லா உணவு, நீர், உடல் நலம் வேண்டும். நிறுவனங்களிடம் நமது உடல்நலனை ஒப்படைக்கக் கூடாது. குறிப்பாக, நமது பிள்ளைகள் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும். வேதிப் பொருட்களின் பிடியிலிருந்து காற்று, நீர், நிலம் ஆகிய பூதங்கள் தம்மை விடுவித்துக்கொள்ளும் காலம் வரும். அப்போது மனிதர்களின் நிலை மோசமடையும். இப்போது உருவாகும் புயல், பெருவெள்ளம், நில நடுக்கங்கள், ஆழிப் பேரலைகள், காற்று நஞ்சாகுதல் போன்றவை பூமியில் நிகழ்த்தும் மாற்றங்களை மனிதர்களால் இப்போதே தாங்க முடியவில்லை. 

வறட்சி காரணமாக மனிதர்கள் மரணமடைவதும் கால்நடைகள் அழிவதும் உங்கள் கண்ணெதிரே நடக்கின்றன. இவற்றைத் தடுக்க நவீனம் என்ன செய்யும் என்று பார்த்துக்கொண்டிருக்காதீர்கள். உங்களால் இயன்றளவுக்கு நவீனத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுங்கள், மற்றவர்களை விடுவியுங்கள். இந்தக் கருத்துகள் தொடர்பாக விவாதம் செய்துகொண்டிருக்காதீர்கள். நவீனத்தின் பிள்ளைகள் நமது ஆற்றலை, நேரத்தை விவாதம் செய்துதான் விரயம் செய்வார்கள். ஏனெனில் அவர்கள் சொந்தமாக எதையும் உற்பத்தி செய்வதில்லை. நிறுவனங்களின் உற்பத்தியை இவர்கள் சந்தைப்படுத்துகிறார்கள். அதற்கான ஊதியத்தைப் பெறுகிறார்கள். நாம், உற்பத்தியில் ஈடுபட வேண்டியுள்ளது, இயற்கைச் செல்வங்களைக் காக்க வேண்டியுள்ளது. நமக்கு வேலைகள் அதிகமாக உள்ளன.

இப்போதும் இரசாயன வேளாண்மைதான் சரி என்போர் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசும் நேரத்தில், ஒரு பிடி சாணத்தை அள்ளி தோட்டத்தில் வீசுங்கள். அதுதான் நமக்குத் தேவையான செயல். ஏனெனில் நம்மை இகழ்வோருக்கும் நாம்தான் நஞ்சில்லா உணவு தர வேண்டும். நமக்குச் செயல் தேவை; விவாதங்கள் அல்ல.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை என்ற முடிவை நான் எடுத்தபோது நண்பர்கள், வருந்தினார்கள். அதன் பின்னர் நான் ஆற்றி வரும் களப் பணிகளைக் கண்டு அவர்கள் புரிந்துகொண்டனர்.
தை எழுச்சியிலும் நான் மக்களோடுதான் நின்றேன். மீனவர் குப்பங்களில் காவல்துறை தாக்குதல் என்ற சேதி பரவிய அந்த நள்ளிரவிலும் நானும் என் தோழர்களும் குப்பங்களுக்கு ஓடிச் சென்று, விடியும் வரை அங்குதானிருந்தோம். ஆகவே, ஊடகங்களில் தலைகாட்டாதிருப்பது, மக்களிடமிருந்து விலகும் போக்கு அல்ல. மாறாக, மக்களுடன் கூடுதலாக நெருங்கும் வழி.

இன்றும் செம்மை மக்களும் பிற தன்னார்வர்களும் மீனவர்களின் சந்தையில் அழிந்துபோன தராசுகள், மீன்கூடைகள் ஆகியவற்றை வாங்கித் தருவதற்காகக் களத்தில் நிற்கிறார்கள். முகம் காட்டாத பலர் எவ்வளவு வேண்டும் எனக் கேட்டு நிதி தருகிறார்கள். 

‘குறுகலான பாதைகளைத் தேர்வு செய்யுங்கள். ஏனெனில், அகலமான பாதைகள் அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன; அந்த வழிகளில்தான் அதிகமானோர் செல்கிறார்கள்’ (மத்தேயு விவிலியம்) என்றார் என் மனம் கவர்ந்த ஆசான்களில் ஒருவரான இயேசு.
‘சிற்றம்பலத்து நடனமே பேரம்பலமாக விரியும்’ என்பது தமிழ் மறையின் கருத்து. ஆகவே, பெரும்பான்மையை நோக்கிய தளங்களில் நீடிப்பதும், நிலைப்பதும் நல்ல மாற்றங்களைத் தரும் என நினைக்க வேண்டாம். ஒரு சின்னஞ்சிறு குழுவினரின் கருத்து, பெரும்பான்மையை வழி நடத்தி இட்டுச் செல்லும். 

எந்தப் பின்புலத்தையும் எனது அடையாளமாக, கவசமாக வைத்துக்கொள்ளாமல் செயலாற்றத் துவங்கினேன். இப்போது எனது பெயரும், செம்மை என்ற சொல்லும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் குறியீடுகளாக மாறியுள்ளன. 

மேலும் என்னைக் குறுக்கிக்கொள்கிறேன். மேலும் என்னை வலுப்படுத்திக்கொள்கிறேன். மேலும் ஆற்றல் பொங்கப் பணியாற்றுவேன்.
நேர்மறையாகவும் எதிர்மறையாகவும், முகநூல் வழியாக என்னுடன் உறவுகொண்டிருப்போர் அனைவருக்கும் நன்றி.

குறிப்பு:
எனது உரைகள், காணொளிகள் அவ்வப்போது தரவேற்றப்படும். இவற்றை https://www.facebook.com/Semmaivanam/
என்ற இணைப்பில் பெறலாம்.

புத்தகங்களைப் பற்றிய தகவல்களை https://www.facebook.com/Semmai-Publications-243952049110…/…
என்ற இணைப்பில் காணலாம்.
ஊர் சந்தை குறித்த தகவல்கள், அறிவிப்புகளை https://www.facebook.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%A…/
என்ற இணைப்பில் அறிந்துகொள்ளலாம்.

இந்தப் பக்கங்களைத் தொடர்ந்தால், எனது செயல்பாடுகள் செம்மை செயல்பாடுகளை அறிந்துகொள்ளலாம்.
செம்மை சமூகத்தவர், என் கருத்துகளைப் பின்பற்றுவோர் - இந்த இணைப்புகளைப் பலர் அறியச் செய்தால் நல்லது.

No comments:

Post a Comment