Friday, 10 February 2017

நாய் இனப்பெருக்க மையத்திற்கே இதுதான் நிலைமை

தமிழக அரசின் நாய் இனப்பெருக்க மையத்திற்கே       இதுதான் நிலைமை!
ம.செந்தமிழன்

 

மரபு உயிரினங்களை அழிப்பது, பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு வழி அமைப்பது – இவை இரண்டும் அவர்களின் கொள்கைகள். இந்தக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக அவர்கள் கையாளும் உத்திகள் எண்ணற்றவை. அவற்றில் ஒன்று ‘ஜீவகாருண்யம்’ என்பது. மண்ணின் மைந்தரையும், உயிரினங்களையும் அடக்கி, ஒடுக்கி பன்னாட்டு அமைப்புகளின் முன் மண்டியிடச் செய்வது அவர்களின் வேலைத் திட்டம். இந்த வேலைத் திட்டத்தின் செயல் தந்திரங்களில் ஒன்று, ‘சைவ உணவுக்கு மாறுங்கள்’ என்பது.

உணவு படைக்கும் மரபுச் செயலை, ‘உணவு உற்பத்தி’ என்ற பேரால் முழு வணிகமாக்குவது அவர்கள் இலக்கு. இதைச் சாதிக்க அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களில் ஒன்று, ‘விலங்குகளின் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம்’ என்பது.

தம் பேராசைகளை நிறைவேற்றுவதற்காக எதையும் செய்வார்கள் அவர்கள். பசுக்களின் பிறப்புறுப்புகளை விந்து ஊசியால் அவமதிப்பார்கள். காளைகளின் ஆண்குறிகளில் பாலிதீன் பைகளைக் கட்டி விந்து எடுப்பார்கள். மாட்டிறைச்சி ஏற்றுமதியைப் போற்றி வளர்ப்பார்கள். சின்னஞ்சிறு சந்துபோன்ற இடத்திற்குள் மாடுகளை வரிசையாக அனுப்பி, அந்தச் சந்தின் இறுதிக்குச் சென்ற மாடு அடுத்து என்ன செய்வதெனத் திகைத்துக் கத்தும்போது, அதன் உச்சந்தலையில் ஓர் ஊசி குத்தப்படுகிறது. மறு நொடி அந்த மாடு செத்து விழுகிறது. அடுத்த நொடி வேறொரு எந்திரம் அதன் தலையைத் துண்டாக்கி வீசுகிறது.

இவ்வாறான கொலைக் கூடங்களின் பின்னணியில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் அவர்களுக்கு, ‘சைவமாக மாறுங்கள்’ எனும் பரப்புரைக்குக் கூலி கொடுக்கின்றன. அவர்களுக்கென மானம், வெட்கம் ஏதும் இல்லை. நிர்வாணமாக நின்றுகொண்டு, ‘சைவத்துக்கு மாறுங்கள்’ என அழைப்பார்கள். ஆணும் பெண்ணும் அம்மணமாகக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ‘விலங்குகளை வதைக்காதீர்கள்’ என்பார்கள். நடிகர்களை அழைத்து விருது கொடுப்பார்கள், வேறு வகை விருந்து கொடுப்பார்கள். மரபு விலங்குகளை அழிப்பதற்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் செய்வார்கள்.

பீட்டா (PETA) மட்டுமல்ல, இந்திய விலங்கு நல வாரியத்தையும் உள்ளடக்கிய மாபெரும் சதிக் கும்பல் அந்த ‘அவர்கள்’ எனும் சொல்லுக்குப் பின் ஒளிந்துள்ளது. நாம் அனைவரும் ஏறுதழுவலைக் காப்பதற்காகக் களத்திற்கு அணிதிரண்டபோது, சென்னை உயர்நீதிமன்றம் ஓர் உத்தரவை வழங்கியது.
‘தமிழக அரசு நடத்தும் நாய் இனப்பெருக்க மையம் இழுத்து மூடப்படட்டும். இனி அது இயங்கக் கூடாது’ என்பது அவ்வுத்தரவு. தமிழ்நாட்டின் மரபு நாய் வகைகளை இனப்பெருக்கம் செய்யும் மையம் அது. சிப்பிப்பாறை, இராஜபாளையம் உள்ளிட்ட நாய்வகைகளும் சில அயல் நாய் வகைகளும் அந்த அரசு மையத்தில் இருந்தன. அவையெல்லாம் இனப்பெருக்கம் செய்யப்பட்டு மக்களுக்கு விற்கப்பட்டன.

’இந்த மையத்தில் நாய்கள் துன்புறுத்தப்படுகின்றன’ என வழக்குத் தொடுத்தது பீடா. இந்திய விலங்கு நலவாரியம் (Animal Welfare Board of India) இந்த வழக்கை ஆதரித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது. உயர்நீதிமன்றம் தமிழக அரசின் நாய்கள் இனப்பெருக்க மையம் இனி இயங்கக் கூடாது என தீர்ப்பு வழங்கிவிட்டது.

பீடா, இந்திய விலங்கு நலவாரியத்தின் குற்றச்சாட்டுகளில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்:

1. இலாபநோக்கத்துடன் நாய்களை விற்பதும், அவற்றை நோயாளிகளாகப் பராமரிப்பதும் தவறு.
2. நாய்கள் எப்போதும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தன.
3. நாய்களுக்கு தமிழக அரசின் அந்த மையம் ஊட்டச்சத்து உணவு தரவில்லை.
4. பாண்டி என்ற பேர் கொண்ட சிப்பிபாறை நாய் மன அழுத்தத்தில் இருந்தது.
5. நாய்களுக்கு உண்ணி எடுக்கும் வேலையை அந்த மையம் சரியாகச் செய்யவில்லை.
6. மரபணுச் சிக்கல்களை உருவாக்கும் இனப்பெருக்கம் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.
7. நாய்கள் குட்டி ஈன்ற விவரங்களை, அவற்றின் மரபுவகையுடன் கூடிய ஆவணங்கள் அம்மையத்தில் இல்லை.
8. சீமை நாய்களின் இறப்பு விகிதம் ‘அனுமதிக்கப்பட்ட’ விகிதத்தை விட அதிகமாக இருந்தது.

மேற்கண்ட காரணங்களை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம், அரசு நடத்தும் ஒரு இனப்பெருக்க மையத்தையே முடக்கிவிட்டது.

நாட்டுக் காளைகளைப் பொலிகாளைகளாகப் பராமரிக்க எவரேனும் நினைத்தால் அவர்கள் மீதும் இதே பீடாவும், விலங்கு நலவாரியமும் பாயும். ஏனெனில், மரபுவிலங்கினங்களை அழிக்கும் அவர்களது செயல்திட்டங்களுக்கான வலிமையான ஆயுதங்கள்தான் மேற்கண்ட காரணங்கள்.

இந்திய - தமிழக அரசுகளின் கால்நடை இனப்பெருக்கக் கொள்கை (Cattle Breeding Policy), ஜெர்சி, பிரீசியன் ஆகிய இரு அயல் மாடுகளைத்தான் முன்னிலைப்படுத்துகின்றன. மலைப்பகுதிகளில் பிரீசியன், சமவெளிகளில் ஜெர்சி என்பதுதான் இக்கொள்கையின் இலக்கும், நோக்கமும்.
எவரேனும் நாட்டு மாடுகளை வைத்து ‘பொலிகாளை’ மையம் நடத்தினால், பீடா போன்ற அமைப்புகள் அந்த மையத்தின் மீது புகார் எழுப்பும். இந்திய விலங்கு நல வாரியம், அந்தப் புகாரை ஆதரித்து வழக்கில் தன்னை இணைத்துக்கொள்ளும். நீதிமன்றம் பொலிகாளை மையத்தைத் தடை செய்யும்.

இந்த நெருக்கடி நிலைமையை ஏற்கெனவே, தமிழக அரசின் கால்நடைத் துறையும், பால்வளத் துறையும் உருவாக்கி வைத்துள்ளன. ’பொலிகாளை மையம் வைக்கக் கூடாது’ என்று சட்டம் இல்லை. ஆனால், பொலிகாளை மையத்தை முடக்கும் விதிகள் உள்ளன. ‘நாங்கள் சென்றபோது அங்கிருந்த காளை மாடு மன அழுத்ததில் இருந்தது’ என்று அவர்கள் கூறினால் போதும். பொலிகாளை மையத்திற்குத் தடை விதிக்கப்படும்.

’ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது’ என்று சட்டம் இல்லை. ஆனால், அதை முடக்குவதற்கான விதிகள் உள்ளன. அவற்றைக்கொண்டுதான் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கினார்கள். மோசடி செய்து சட்டத்தை ஏமாற்றுவதும், மோசடியான திட்டங்களையே சட்டமாக இயற்றுவதும் அவர்களுக்குத் தெரிந்த வித்தைகள்.

இந்திய – தமிழக அரசுகளின் சீமை மாடுகள் இனப்பெருக்க மையங்களில் உள்ள காளைகள் எவ்வளவு குரூரமாகத் துன்புறுத்தப்படுகின்றன என்பதை பீடாவும், விலங்கு நலவாரியமும் கண்டுகொள்ளமாட்டா. அந்தக் காளைகளுக்குச் செயற்கையான முறையில் பாலுணர்ச்சி தூண்டப்படுகிறது. அவற்றின் எதிரே பசுமாட்டு பிறப்புறுப்பு போல, பாலிதீன் பை வைக்கப்படுகிறது. காளைகள் அந்தப் பைக்குள் ஆண் குறியைச் செலுத்தித் துன்பப்படுகின்றன. பீய்ச்சப்படும் விந்துவைச் சேகரித்து கோடிக் கணக்கான பணத்தைச் சம்பாதிக்கின்றன பன்னாட்டு அமைப்புகளும், இந்திய அரசுத் துறைகளும்.

இவற்றையெல்லாம் அவர்கள் ஆதரிக்கிறார்கள். மரபுச் செல்வங்களை அழிக்கும் நோக்கத்திற்காக எதுவும் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள்.
நாட்டுக் காளைகள், பசுக்கள் உள்ளிட்ட மரபு உயிரினங்களை இயற்கையான முறையில் இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். காளை, நாய் வளர்ப்போர் தமக்குள் தொடர்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். சீமை மாடுகளும் நாய்களும் கூட இயற்கையான உறவுகொள்வதை நாம் ஊக்குவிக்க வேண்டும். காங்கேயம், உம்பளச் சேரி போன்ற நாட்டு மாடுவகைகளைக் கூட விந்து ஊசி வழியாகப் பரப்பும் வேலையை நாட்டுக் காளை வளர்க்கும் பலர் செய்துகொண்டுள்ளனர்.

நாட்டு மாடுகளை வணிகப் பண்டமாகப் பார்ப்பவர்களுக்குத்தான் அவற்றின் விந்து நீரையும் விற்பனை செய்யும் சிந்தனை வரும். நாம் தமிழரின் அறம் போற்றுவோம்.

’எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே’- எனப் பாடிய தாயுமானவரின் மரபினர் நாம்.

மரபுச் செல்வங்களைக் காப்போம். எல்லா உயிரினங்களின் உணர்வுகளை மதிப்போம்.

பதிவு செய்த நாள்: 25/01/2017

Image may contain: dog

No comments:

Post a Comment