Monday, 6 February 2017

அதிகாரம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, நீங்கள் ஏன் நிராகரிக்கிறீர்கள்?

அதிகாரம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, நீங்கள் ஏன் நிராகரிக்கிறீர்கள்?


’இந்தச் சமூகம் எப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்’ என்ற கேள்விக்குப் பதில் சொல்லத் தெரிந்தவர்களுக்கான கட்டுரை இது. அரசியல் என்பது தேர்தலுடன் தொடர்புடையதுதான். ஆனால், அரசியல் என்றால் தேர்தலுக்குள் அடங்கி ஒடுங்கிக் கிடக்கும் அடிமைக் கருத்து அல்ல. உங்கள் விருப்பப்படியான சமூகம் அமைய வேண்டுமானால், அந்தச் சமூகத்தை நீங்கள் இப்போதே அமைக்கத் துவங்கலாம். அதற்கும் தேர்தலுக்கும் அதிகமான உறவுகள் இல்லை.

அரசியல் எனும் சொல்லை, தேர்தல் அதிகாரத்துடன் மட்டுமே பிணைத்து வைக்க வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு உள்ளது. உங்களுக்கு அப்படி எந்தத் தேவையும் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
சற்று நேரம் அமைதியாக அமருங்கள். அறைக் கதவுகளைச் சாத்திவிடுங்கள். எந்த ஓசையும் இல்லாத அமைதியை உணர்ந்தவாறு, சில சேதிகளை உள்வாங்குங்கள். இன்றைக்கு இந்த சமூகம் அனுபவிக்கும் மிகச் சிறந்த கொள்கைகளை முதன் முதலில் வகுத்தவர்களில் எத்தனை பேர் தேர்தல் அரசியலில் ஈடுபட்டவர்கள் என்ற கேள்வியுடன் உங்கள் பயணம் துவங்க வேண்டும்.

பேரரசர்கள் ஆட்சி செய்த காலத்தில், அரசுக்கு வெளியே இருந்து அறக் கொள்கைகளை வலியுறுத்திய நம் முன்னோர் அந்தணர் எனப்பட்டனர். தமிழ் மரபில் எந்தக் குலத்தவரும் அந்தணராக மாற இயலும். தொல்காப்பியர், அவ்வையார், கபிலர், திருவள்ளுவர்போன்ற ஆசான்கள்தான் சமூகத்தை வழிநடத்தியவர்கள்.

அவர்களது கருத்துகளைத்தான் இப்போதும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. பேரரசர்கள் அறம் தவறி நடந்தால் அவர்களை நோக்கி ‘அறம்பாடும்’ வலிமை அந்தணர்களுக்கு உண்டு. அவர்கள் அறம் பாடினால் பேரரசுகள் அழியும். ஆனால், அந்த வல்லமையை ஆட்சியைக் கைப்பற்றும் ஆயுதமாக மாற்றாதவர்கள் நம் முன்னோர்.

அயலவர் ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழியை அழிக்கும் செயல்கள் நடந்தேறியபோது, நாயன்மாரும் ஆழ்வாரும் சமூகத்தை வழிநடத்தினர். வடமொழிக் கலப்போடு தமிழ் எழுதுவதுதான் ‘ஓசை இனிமை’ தரும் என்று கூறி ‘மணிப்பிரவாளம்’ எனும் புதிய கலப்பு மொழி உருவாக்கப்பட்டது. அந்தக் காலத்தில்தான் திருமுறைப் பாடல்களும் ஆழ்வார் பாசுரங்களும் அழகு தமிழில் இயற்றப்பட்டன. இன்றைக்கும் நீங்கள் செல்லும் கோயில்களில் நாயன்மாரும் ஆழ்வாரும் சிலைகளாக வீற்றிருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இந்தச் சமூகம் செலுத்தும் நன்றிக் கடன் அது.

இந்த நாட்டின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றில் காலத்தில் நிலைத்த பேரரசர்களை விட, அந்தணர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம் என்பதை மறந்துவிடாதீர்கள். சிவவாக்கியச் சித்தர் இயற்றிய பாடல்கள் இப்போதும் படிக்கப்படுகின்றன. அவர் காலத்தில் வாழ்ந்த மன்னன் யார் என்று எவருக்கும் தெரியாது.

திருமூலர் வாழ்ந்த இடங்கள் இப்போதும் வழிபாட்டுக்குரியவை. அவர் காலத்தில் அரசாண்ட அதிகார வர்க்கத்தினரின் எந்தத் தடயமும் இப்போது இல்லை. அரசு அதிகாரம் மிக்கது என நீங்கள் நம்பினால், நான் உங்களுக்குச் சொல்ல விரும்பும் சேதி, ‘அறத்தின் வலிமை அரசுகளை அழிக்கும் வல்லமை கொண்டது’.

இயேசு எனும் எளிய மனிதன் மீது கை வைத்த பின்னர் மாபெரும் ரோமப் பேரரசு முற்றிலும் அழிந்துபோனதுதான் வரலாறு. நபிகளின் கொள்கைகளைக் கேலி செய்த அரசுகள் அவர் காலத்திலேயே அழித்தொழிக்கப்பட்டதும் வரலாறுதான்.

’அரசியலில் பிழை செய்தால் அறம் கூற்றாக வந்து அழிக்கும்’ என்று அழுத்தமாகப் பதிவு செய்த மரபு நம்முடையது என்பதை மனதில் பதித்துக்கொள்ளுங்கள். இந்தப் பதிவை இயற்றிய இளங்கோவடிகள் ஓர் இளவரசர். அரச குடும்பத்தில் பிறந்தும், அரசர்களை விட, எளியோரின் அறச் சீற்றத்திற்கு வலிமை உண்டு என்ற உண்மையைப் பதிவு செய்தவர் அவர். அவர் வழி வந்த பிள்ளைகளா அரசுகளிடம் எல்லா அதிகாரங்களும் உள்ளன என்று மயங்கித் திரிவது?

அரசு அதிகாரம் மிக்கது என்றால், படைத்தவரின் அதிகாரம் அரசுகளை அழிக்கும் வலிமை கொண்டது. எவராக இருந்தாலும் அவர் செய்த செயல்தான், படைத்தவரால் தீர்ப்பிடப்படும். அரியணையின் வலிமையினால் வினைப்பலனைத் தவிர்க்க முடியாது. சோழகுலத்தவர் வாழ்ந்த அரண்மனைகளின் இடிந்த கற்களின் தூசி கூட இப்போது இல்லை; பெருவுடையார் கோயில் ஆயிரம் ஆண்டுகளாக அருள் வழங்கிக்கொண்டுள்ளது. கரிகாலனது இயற்பெயரைக் கூட அறுதியிட்டுக் கூற இயலவில்லை, அவர் கட்டிய கல்லணை இன்றைக்கும் சோறு போடுகிறது.

செயல்கள்தான் எக்காலத்திற்கும் தேவை, அதிகாரம் அல்ல. நற்செயல்களைச் செய்வதற்கு அதிகாரம் தேவை என்ற பாடத்தை உங்களுக்கு நடத்திக்கொண்டுள்ளது இன்றைய அரசியல்.
உண்மை என்ன தெரியுமா? எவர் ஒருவர் செயல்பட வேண்டுமென விரும்புகிறாரோ அவருக்கு அதிகாரம் இறையாற்றலால் வழங்கப்பட்டுவிடுகிறது. ’நம்மாழ்வார் பேரில் வேளாண் கொள்கை வகுப்போம்’ என கட்சிகள் அறிக்கை தருகின்றன. அவருக்கு என்ன அரசியல் அதிகாரம் இருந்தது? தான் வாழும் காலத்திலேயே பல்லாயிரம் மனிதர்களை இயற்கை வாழ்வியலை நோக்கித் திருப்பிய அந்தத் திருப்பிறப்பாளருக்குப் படைத்தவர் அதிகாரம் அளித்திருந்தார். அரசியல் அதிகாரம் இன்றைக்கு அவர் பெயரைப் பயன்படுத்திக்கொள்கிறது.

நம்மாழ்வார் தேர்தலில் நின்றிருந்தால் என்னவாகியிருக்கும் எனச் சிந்தித்துப் பாருங்கள். உங்களால் ஏதேனும் நல்ல காட்சியைக் கற்பனை செய்ய முடிகிறதா?

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் பணியாற்றிய இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர் போன்ற முன்னோர்களின் பணிகளை இப்போதும் சமூகம் நினைத்துப் பார்க்கிறது. அவர்களுக்கு என்ன அதிகாரம் இருந்தது என நினைக்கிறீர்கள்! சூரிய நாராயண சாஸ்திரி என்ற தன் பெயரை, ‘பரிதிமாற் கலைஞர்’ என மாற்றிக்கொண்டவர்தான் தமிழ் மொழியை இருபதாம் நூற்றாண்டில் பாதுகாக்கும் பணியைச் செய்தார். மறைமலை அடிகள், திரு.வி.க, பாவாணர், அப்பாதுரையார், பெருஞ்சித்திரனார், சாலை இளந்திரையனார் உள்ளிட்ட அறிஞர்களை உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியுமோ, அவர்கள்தான் இருபதாம் நூற்றாண்டில் தமிழைக் காத்த மாமனிதர்கள் என்பதுதான் உண்மை.

அரசியல் அதிகாரம் தீண்டத்தகாதது அல்ல. இந்தச் சமூகத்தை நிர்வகிப்பதற்கான ஓர் ஏற்பாடுதான் தேர்தல் வழி அரசியல். உங்களுக்கு அதன் மீது நம்பிக்கை இருப்பதை நான் நிராகரிக்கவில்லை. அது உங்கள் நம்பிக்கையாகவே இருக்கட்டும். ஆனால், அதன் மீது பற்றுகொள்ளாதீர்கள் என்பது எனது அறிவுரை. ஏன் பற்று கொள்ளக் கூடாதென்றால், அந்த அமைப்பு தானாக எந்த நல்ல மாற்றத்தையும் கொண்டுவரும் தகுதி இல்லாதது. பேரரசர்கள் காலம் முதல் இந்தக் காலம் வரைக்கும், அரசுகளின் தலைமைக்கும் அறக்கொள்கைகளுக்கும் இடைவெளிதான் அதிகம் என்பது மனிதகுல வரலாறு. பேரரசர் இராசராசர் கூட கருவூரார் எனும் சித்தர் வழி நடந்தவர்தான். அதிகாரத்தில் எவர் இருந்தாலும், அறக் கொள்கைகளை வகுப்பது, வழிநடத்துவதும் அரசுக்கு வெளியே இருப்போர்தான்.
அரசுக்கு வெளியே முன்வைக்கப்படும் அறக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான் அரசின் கடமை. ஓர் அரசு அறத்திற்குப் புறம்பாக செயல்பட்டால், அதன் அதிகாரம் அழிக்கப்படும். அதன் அதிகாரத்தைச் சுவைத்தவர்களின் வாழ்க்கை சீர்குலையும், குடும்பம் ஒழியும், பிணி பெருகி முடங்கும் நிலை நேரும். இவையெல்லாம் எக்காலத்திற்கும் பொருத்தமான வினைப் பலன்கள்.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோரைக் கண்டு கலங்காதீர்கள், அவர்களுக்கான தீர்ப்புகள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன.
நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் விருப்பத்தில் நிலைபெறுவதுதான். இந்தச் சமூகம் மாற்றம் பெற வேண்டுமென்ற உங்கள் விருப்பத்தை மாற்றிக்கொள்ளாதீர்கள். பெரும்பான்மைச் சிந்தனை எப்போதுமே சீரழிந்ததாகத்தான் இருக்கும். ’குறுகலான பாதைகளைத் தேர்ந்தெடுங்கள். அவைதான் உங்களுக்கு கர்த்தரால் வழங்கப்பட்டவை’ என்றார் இயேசு. சத்தியமான வாசகம் இது.

உங்கள் பாதை குறுகலாக இருக்கட்டும், உங்களுடன் இருப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கட்டும், பயணத்தை நிறுத்தாதீர்கள். ஏனெனில், உங்கள் கால்களுக்கு வல்லமை வழங்கப்படுகிறது. உங்கள் வழி இருள் மிக்கதாக இருக்கட்டும் பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில், பாதையில் இருள் இருந்தாலும் உங்கள் கண்களில் ஒளி வழங்கப்படுகிறது. உங்கள் கடல் சீற்றமாக இருக்கலாம், படகு சிறியதாக இருக்கலாம். பயணத்தைத் தொடருங்கள். உங்களைச் சுற்றிலும் அலைவீசாதவகையில் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.

மலை பெரிதாக இருந்தால் என்ன, அதன் உச்சியை எட்டும் விருப்பம் உங்களுக்கு இருந்தால், மலையைக் காட்டிலும் மிகுந்த வல்லமை உங்கள் பாதங்களுக்கு அல்லவா வழங்கப்படுகிறது!

இப்போது நீங்கள் பிறரை நம்பி வாழ்கிறீர்கள். உங்கள் விருப்பங்களை வேறு எவரிடமோ ஒப்படைத்துவிட்டு அவர்களின் வெற்றிக்காக அழுகிறீர்கள். இது நிச்சயமாக படைத்தவருக்குப் பிடிக்காத குணம். இவ்வாறு நீங்கள் செய்யும்போது உங்கள் நம்பிக்கைக்குரியவரின் அனைத்துப் பாவங்களுக்கும் நீங்களும் பொறுப்பேற்கிறீர்கள்.

உங்களை அறியாமல், அவர்களது தவறுகளில் பங்கெடுக்கிறீர்கள். இங்கே நிகழ்த்தப்படும் எல்லா அநீதிகளிலும் அவர்களுக்குப் பங்கு உண்டு. நாளை நிகழ்ப் போகும் எல்லா அநீதிகளுக்கும் அவர்கள் பொறுப்பாளிகள்தான். அந்தப் பாவங்களில் நீங்கள் பங்கெடுக்காதிருங்கள். ஆனால், அந்த அமைப்புமுறைக்கு வெளியே, அறம் கொண்ட கொள்கையுடன் வாழ்ந்தவர்களின் வரலாறு காத்திருக்கிறது, உங்களுக்காக. தேர்தல் எனும் அமைப்பிற்கு வெளியே, இந்த மண்ணை, மரங்களை, மொழியை, பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் உண்மையான செயல்வீரர்கள் எண்ணற்றோர் காத்திருக்கிறார்கள்.

தேர்தலில் வாக்களிப்பது உங்கள் உரிமை, கடமை அல்ல. அது ஒரு செயல்முறை, நிச்சயமாக அது உங்கள் விதியைத் தீர்மானிக்கும் அமைப்புமுறை அல்ல.

இங்கேதான் தெய்வமாக வாழ்ந்த மனிதர்களும், மனிதர்களாக வந்துபோன தெய்வங்களும் இருக்கிறார்கள். ஆம், இப்போதும் அவர்கள் இருக்கிறார்கள். நமது ஆலயங்களில், நமது மலைக் காடுகளில், நமது மலைக் குகைகளில் அவர்கள் ஆற்றலாக இருக்கிறார்கள். நீங்கள் இன்னும் எட்டிக்கூடப் பார்க்காத நினைவகங்களில் இந்தச் சமூகத்தைப் பாதுக்கப் போராடிய மனிதர்களின் வாழ்க்கை புதைந்து கிடக்கிறது. நீங்கள் வாசிக்காமலேயே செல்லரித்துப் போன புத்தகங்களில் தமிழுக்காகவும், சமூக அமைதிக்காகவும் வாழ்ந்து மடிந்துபோன முன்னோர்கள் ஒடுங்கிக் கிடக்கிறார்கள்.

தேர்தல் வழியாக இந்தச் சமூகத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை நான் கேலி செய்யவில்லை. ஆனால், அந்த மாற்றத்திற்கு நீங்கள் கண்டறிந்துள்ள பாதை முற்றிலும் பொருத்தமற்றது என்கிறேன். மலைகளை வெட்டி விற்பனை செய்யும் பிரமுகர்களிடம் பணம் வாங்காத கட்சி, மணல் கொள்ளையர்களிடம் பேரம் பேசாத கட்சி, எந்த வகையிலும் சாதிபேதம் பாராமல் வேட்பாளர்களை அறிவிக்கும் கட்சி, உண்மையான கொள்கைவாதிகளைத் தவிர வேறு எவருடனும் கை குலுக்காத கட்சி, ஒரு சொட்டு மதுவைக் கூட தேர்தல் பணிகளில் பயன்படுத்தாத கட்சி இருப்பதாக நினைக்கிறீர்களா? ஒருவேளை அப்படி ஒரு கட்சி இருந்தால், இந்தத் தேர்தல் அமைப்பிற்கே தகுதி இல்லாத கட்சி அல்லவா அது!

’சில சமரசங்களைச் செய்தால்தான் ஆட்சியைக் கைப்பற்ற முடியும்’ என்ற பொய்யை நம்புகிறீர்கள். அதிகாரத்திற்கு வரத் துடிக்கும் அனைவருக்குமான வேதம் இது. ஒருவேளை இந்த வேதத்தை ஓதுபவர்கள் தேவதூதர்கள் என நீங்கள் நம்பினாலும் அது தேர்தல் நேரத்து மந்திரம் மட்டும்தான் என்பதையாவது புரிந்துகொள்ளுங்கள்.

இந்தச் சமூகத்தில் மாற்றம் வர வேண்டுமெனில், நீங்கள்தான் செயலாற்ற வேண்டும். உங்கள் ஆற்றல் முழுவதும் தலைவர்களை உருவாக்குவதில் விரயமாகிக்கொண்டுள்ளது. அதை நிறுத்துங்கள்.

எவை தேவை என நினைக்கிறீர்களோ அவற்றைச் செய்யுங்கள், எவை தேவையில்லையோ அவற்றை நிராகரியுங்கள். தலைவர்கள் எப்போதும் தம்மை வளர்த்துக்கொள்வார்கள். அவர்களை வளர்க்க, உங்களைச் சிதைத்துக்கொள்ளாதிருங்கள்.

நீங்கள் செய்வதற்கு நிறைய வேலைகள் உள்ளன. உங்கள் பிள்ளைகளில் பெரும்பாலானோருக்கு தமிழ் தெரியாது, வேளாண்மை தெரியாது. இவற்றைக் கற்றுத் தாருங்கள். தாய்மொழியையும் தாய் நிலத்தையும் பாதுகாக்காதவர்களுக்கு வாழும் தகுதி இருக்காது.

ஒத்த கருத்து உள்ளவர்கள் ஒன்று கூடுங்கள். செயல்திட்டங்களை வகுத்துக்கொள்ளுங்கள். நிதானமாக அவற்றைச் செயலாக்குங்கள். ஆனைமலை எனும் மலையை வெட்டி அழிக்க முயற்சிகள் நடந்தபோது, அந்த முயற்சியை முறியடித்தவர்களின் பெயர்கள் வெளியே தெரியாது. ஆனால், அந்த ஆனைமலை இப்போதும் கம்பீரமாக நிற்கிறது. அதுதான் செயல். தாமிரபரணியில் மணல் கொள்ளை நடப்பது தடுக்கப்பட்டதும், குளிர்பான ஆலைகள் விரட்டப்பட்டதும், இன்றுவரை மீத்தேன் திட்டம் தடுத்துவைக்கப்பட்டிருப்பதும், எத்தனையோ ஏரிகளும் குளங்களும் மீட்டெடுக்கப்பட்டதும் தேர்தலுக்கு வெளியே நடந்த மாற்றங்கள்தான்.
இந்த மாற்றங்களில் தேர்தல் அரசியல்வாதிகள் ஈடுபட்டால், அவர்களையும் அரவணைத்துச் செல்லுங்கள். ஒருபோதும் அவர்களின் அரவணைப்பிற்குள் நீங்கள் சென்றுவிடாதீர்கள். நமக்காகத்தான் அவர்கள், அவர்களுக்காக நாம் அல்ல.

அரசியல் என்பது அரசின் கொள்கைகளை வகுப்பதும், நடைமுறைப்படுத்துவதும்தான். கொள்கைகளைச் சட்டமன்றத்திற்கு வெளியே வகுக்க முடியும், அவற்றை நம்மால் நடைமுறைப்படுத்தவும் முடியும். எந்தத் தனிமனிதரிடமும் இந்தச் சமூகத்தின் நலன்களை ஒப்படைத்துவிடாத உறுதியும் திறனும் உங்களுக்கு இருந்தால், நீங்களே சிறந்த தலைவர்தான்.

No comments:

Post a Comment