நம்மாழ்வார் எனும் திருப்பிறப்பாளர்
ம.செந்தமிழன்
(ஏப்ரல் 6, நம்மாழ்வார் பிறந்த நாள்)
நீண்ட கால மரபுச் செழுமையும் அறக் கொள்கைகளும் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் திருப்பிறப்பாக வந்தவர் நம்மாழ்வார். புராணங்களில் அவதாரம் எனும் கருத்து உண்டு. நம் தமிழ் மரபில் புராணங்களுக்கு மதிப்பில்லை, வரலாற்றுக்கே அங்கீகாரம் உண்டு.சமூகம் நெருக்கடிகளைச் சந்தித்த எல்லாக் காலங்களிலும் திருப்பிறப்பாளர்கள் தோன்றியுள்ளனர். சங்ககாலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், களப்பிரர் பல்லவர் காலம் தமிழகத்தில் உருவானது. தமிழ் எனும் சொல்லைக் கூட திரித்து, ‘த்ரமிள’ என எழுதி வைத்தனர் களப்பிரச் சங்கத்தினர். ஆட்சிமொழியாக வடமொழியும், சமய மொழியாக பாலி மற்றும் வேறு சில அயல் மொழிகளும் திணிக்கப்பட்டன. தமிழ்ச் சமயங்கள் துடைத்தெறியப்பட்டன. பல்லாயிரம் ஆண்டுகால தொல் மரபுகளைத் தாங்கி வந்திருந்த தொல்காப்பியம் தடை செய்யப்பட்டது.
சாதி வேறுபாடுகளை நிலைநிறுத்தும் நூலான, ‘ஆசாரக் கோவை’ அக்கால அரசவைச் சங்கத்தில் அதிகாரப்பூர்வமாக அரங்கேற்றப்பட்டது.
தீண்டாமையை நியாயப்படுத்தும் முதல் நூல், தமிழர் வரலாற்றில் ஆசாரக் கோவைதான். ‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’ என்ற அறத்தை வலியுறுத்திய திருவள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் ஆசாரக் கோவைக்குப் பின்னர் புறந்தள்ளப்பட்டது. இப்போதும் ஆசாரக் கோவையை ‘நீதி நூல்கள் வரிசையில்’ வைத்திருக்கிறது இந்தக் கால அறிவுச் சமூகம்.
கி.பி 2ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழக வரலாற்றைப் படிக்க வேண்டுமானால், வடமொழியும் தெலுங்கும் தெரிந்திருக்க வேண்டும். அரசு அறிவிப்புகள் எல்லாம் அம்மொழிகளில்தான் எழுதப்பட்டன. அக்காலச் செப்பேடுகளின் பெரும்பகுதி அயல் மொழிகளில் இருப்பதை இப்போதும் உங்களால் காண முடியும்.
பவுத்தமும், சமணமும் மட்டுமே அரசு சமயங்களாக அங்கீகரிக்கப்பட்டன. இச்சமயங்கள்தான் சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டின. ஆசாரக்கோவை என்பதே சமண நூல்தான். அதை அரங்கேற்றியவர் வச்சிர நந்தி எனும் சமண ஆசான்தான். பிராமணிய சாதி ஆதிக்கத்தின் அனைத்துக் கூறுகளையும் போற்றிப் பாதுகாத்த காலம், களப்பிரர் பல்லவர் காலம் என்பதை அக்காலக் கல்வெட்டுகள் இப்போதும் கூறி நிற்கின்றன.
பல்லவர்கள் தம்மை, ‘பரத்வாஜ கோத்திரத்தார்’ என்றுதான் அழைத்துக்கொண்டனர். அவர்களது கல்வெட்டுகளில் இந்தக் குறிப்பு தெள்ளத் தெளிவாக உள்ளது. பரத்வாஜ கோத்திரம் என்பது, ஆரியத்தின் பிராமணப் பிரிவு ஆகும். இப்போது, இந்த வரலாறு தலைகீழாகச் சொல்லித் தரப்படுகிறது.
இந்தப் பின்புலத்தில்தான் திருமூலர் எனும் திருப்பிறப்பாளர் தோன்றினார். தமிழ்ச் சமயத்தின் ஆதி ஆகமங்களை மீட்டெடுத்து, இறைமைக்கும் தமிழ்ச் சமூகத்திற்குமான பிணைப்பை உறுதி செய்தவர் ஆசான் திருமூலர்.
மனிதர்களைக் கடந்த பேருண்மைகளைத் தமது திருமந்திரத்தில் பதித்த இறையருள் முனிவர் திருமூலர். ஆசான் திருமூலரை அடியொற்றியும் அவரது சமகாலத்திலும் நாயன்மார்கள் தோன்றினர். ஏறத்தாழ 700 ஆண்டுகாலம் தமிழகத்தில் சிவனியம் இடைவிடாது பணியாற்றியது.
இதேகாலத்தில், மாலியம் (வைணவம்) ஆழ்வார்களை உருவாக்கியது. பூதத்தாழ்வார் தம்மை ‘பெருந்தமிழன்’ என்று அழைத்துக்கொண்டவர்.
நாயன்மார்களும் ஆழ்வார்களும் இணைந்து நிகழ்த்திய சமூகப் புரட்சியில் தமிழர்களின் மரபுகள் மீட்டெடுக்கப்பட்டன. தமிழ் மொழி தேவாரம், திருவாசகம், திருப்பாவை, ஆழ்வார் பாசுரங்கள் உள்ளிட்ட சமய இலக்கியங்களால் செழுமை பெற்றது. இச்சமய இலக்கியங்கள் யாவும் வெற்றுச் சமய கூக்குரல்கள் அல்ல, இவையாவும் பேரண்டக் கொள்கைகளையும் அணுக் கொள்கைகளையும் விரித்து உரைக்கும் மெய்யறிவுப் பெட்டகங்கள்.
சித்தர்கள் யாவரும் சமூகத்தின் நெருக்கடியான காலங்களில் தோன்றிய திருப்பிறப்பாளர்கள்தான். அதனால்தான் அவர்களது பாடல்கள் சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சாடுகின்றன.
இருபதாம் நூற்றாண்டில் வள்ளலார் தோன்றி தமிழ்ச் சமூகத்தை வழிநடத்தும் கொள்கைகளை முன்மொழிந்தார். அவர் திருப்பிறப்பாளர்தான்.
அவருக்குப் பின்னர் நானறிந்த வகையில் ஐயா நம்மாழ்வார் ஒரு திருப்பிறப்பாளர். இயற்கை அறத்தை அழித்துக் கொண்டிருந்த இந்தச் சமூகத்தைக் கேட்க ஆளில்லாமல் இருந்த காலத்தில் நம்மாழ்வார் பணி செய்யத் துவங்கினார்.
இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு, நிலம் இரசாயன உரங்களால் சீரழிக்கப்பட்டு, பலகோடி உயிரினங்களும் நஞ்சுகளால் கொலை செய்யப்பட்ட காலத்தில், நம்மாழ்வார் இயற்கை வாழ்வியலை முன்மொழிந்தார். அவர் பேசத் துவங்கிய காலத்தில் அவரை அடியொற்றியோர் மிகக் குறைவானோர்.
அரசுகளுக்கு எதிராக, பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்பட்ட தலைவர் அவர். எந்தக் கட்சிப் பின்புலமும், சாதி, சமயப் பின்புலமும் இல்லாமல் தன்னந்தனியராக ஒரு மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தியவர் நம்மாழ்வார். அவருக்குப் பிறகான இந்தக் காலத்தில் அவருடைய பணிச் சிறப்புகளை என்னால் கற்பனை செய்தும் பார்க்க இயலவில்லை.
தனக்கென பொருளாதாரப் பின்புலம் கூட இல்லாதோர் சமூகப் பணிகள் செய்யும்போது உருவாகும் இடர்ப்பாடுகளைச் சொல்லி மாளாது. நம்மாழ்வார் உடலைவிட்டுப் பிரிந்தபோது அவரது ரொக்க இருப்பு இருபத்து மூன்றாயிரம்.
நம்மாழ்வாரின் செயல்களை மட்டுமே உற்று நோக்கினால், அவர் சந்தித்த இடர்கள் எவையும் தென்படா. ஏனெனில் அவர் தனது சிக்கல்களைப் பற்றிப் பேசவே இல்லை, சமூகத்தின் சிக்கல்களைப் பற்றி மட்டும்தான் பேசினார்.
இயற்கை உணவு, இயற்கை வேளாண்மை, இயற்கை மருத்துவம் என்றெல்லாம் இப்போது உரையாடல்கள் நிகழ்கின்றன. இது நம்மாழ்வார் நிகழ்த்திய மாற்றம். அவர் உரையாடத் துவங்கிய காலத்தில், இயற்கையைப் பற்றிப் பேசுதல் முட்டாள்தனத்தின் அடையாளமாக இருந்தது. அவர் முட்டாள் பட்டத்தைச் சுமந்துகொண்டுதான் ஊர் ஊராகப் பயணித்து இயற்கையைப் பற்றிப் பேசினார்.
மனித சமூகத்தின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றில் உணவைக் கூட நஞ்சாக மாற்றிய காலம் நாம் வாழும் காலம்தான். உணவு நஞ்சாகிறது என்றால், இயற்கையின் சூழலே சீரழிந்துவிட்டது என்று பொருள். இயற்கை வழி வேளாண்மை என்பது வெறும் உடல்நலக் கொள்கை அல்ல; மனிதர்கள் தாங்கிப் பிடிக்க வேண்டிய அறக் கொள்கை. அந்த அறம்தான் மனிதர்களையும் சக உயிரினங்களையும் பிணைக்கும் சங்கிலி. அறம் தாழ்ந்து போகும் சமூகத்தில் மனிதர்கள் தனித்துவிடப்படுவார்கள்.
சக உயிரினங்கள் ஒவ்வொன்றாக மறைந்து போகும்.
மனிதர்கள் தம்மைத் திருத்திக்கொண்டு அறம் நோக்கித் திரும்ப வேண்டும். மாறாக, மேலும் தமது சுயநல வெறிப் போக்கில் தொடர்ந்தால், மனிதர்கள் கடும் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள். அந்தத் தண்டனைக்கு அவர்கள் இயற்கைச் சீற்றங்கள், கொள்ளை நோய்கள், போர்கள், கலவரங்கள் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்வார்கள்.
அறம் கொன்ற சமூகத்திலிருந்து அறத்தைப் போதிக்கும் மனிதர்களைத் தெரிவு செய்து அனுப்பும் அன்புதான் இறைமையின் தனித்தன்மை. அவர்கள்தான் திருப்பிறப்பாளர்கள் என்பது என் கருத்து.
நம்மாழ்வார், தற்செயலாகத் தோன்றிய வேளாண் நிபுணர் அல்லர். அவர் இந்தச் சமூகத்தின் தேவைக்காகவே தோன்றிய உன்னதம்.
நம்மாழ்வாரின் கொள்கைகளைத் தமது சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் வணிகக் கூட்டம் இப்போது உருவாகியுள்ளது. இயற்கை வாழ்வியலை அவர் வலியுறுத்தினார். இயற்கையின் பேரால் வணிகம் செய்து செல்வம் குவிப்பதை அவர் ஏற்கவில்லை.
தற்சார்பான, எளிமையான வாழ்வியலைத்தான் நம்மாழ்வார் முன்வைத்தார். அவரது தோற்றமே எளிமையின் குறியீடுதானே!
இயற்கை வேளாண்மை இப்போது நிறுவனங்களின் பிடிக்குள் சென்றுகொண்டுள்ளது. செல்வக் குவிப்பில் வெறிகொண்டோர் பலர் இயற்கை வேளாண்மைத் துறையில் நுழைந்துகொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு உணவு நிறுவனங்களுக்கு இயற்கை விளைபொருட்களை வாங்கிக் கொடுக்கும் தரகு வேலை இப்போது மும்முரமாக நடந்தேறி வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் நம்மாழ்வாரின் உருவத்தைப் பதித்துக்கொண்டு செயல்படுகிறார்கள்.
4=u74து இந்தச் சமூகத்தின் அவலம்தான். எந்த உன்னதத்தையும் வணிகமாக்கிவிடும் புத்திசாலிகளின் காலம் இது. நம்மாழ்வார் இயற்கை வேளாண் நிபுணர் அல்லர், அவர் ஓர் வாழ்வியல் ஆசான்.
அவர் இயற்கையோடு இயைந்த எளிமையான வாழ்வியலை நமக்கு போதித்தார். அந்த வாழ்க்கையில் நிறுவனமயமான எந்தச் செய்ல்பாடுகளுக்கும் இடமில்லை, தரகு வேலைகளுக்கு வாய்ப்பில்லை.
நம்மாழ்வாரின் அருமைகளை உணர்ந்தோருக்கு எனது சொற்களில் உள்ள மறைபொருள் புரியும்.
நான் அவரது உண்மையான தொண்டர்களைக் காண்கிறேன். அவர்களது செயல்பாடுகள் தன்னலமற்றவையாக இருக்கின்றன, இயற்கையின் மீது அன்புகொண்டவையாக இருக்கின்றன. அவரது மெய்த் தொண்டர்கள் இறையியலின் உன்னத வடிவங்களைத் தேடுகின்றனர், சாதி – சமய சடங்குகளுக்கு அப்பாற்பட்ட வாழ்வியலை நாடுகின்றனர், செல்வக் குவிப்பில்லாத சமூகத்தை மனக் கண்களில் நிறுத்திக் கொண்டு அதை அடைவதற்கு ஓடுகின்றனர்.
நம்மாழ்வாரின் கொள்கைப் பிள்ளைகளின் விருப்பத்தில் ஒரு பெரிய காடு உள்ளது. அதில் அழிந்துபோன உயிரினங்களும் வாழ்ந்துகொண்டுள்ளன. இந்தப் பிள்ளைகள் எல்லா உயிரினங்களுக்கும் செல்லப் பெயர் வைத்து அழைக்கிறார்கள். அந்தக் காட்டில் மனிதர்களும் மற்றுமோர் உயிரினமாக வாழ்கிறார்கள். அந்தக் காடு காடாக மட்டுமே இருக்கிறது. அங்கே செல்வமும் இல்லை, ஏழ்மையும் இல்லை. அந்தக் காட்டில் நஞ்சும் இல்லை, அமுதமும் இல்லை.
இது வெறும் கனவுதான் என்போர் எப்போதும்போல் இப்போதும் இருக்கிறார்கள். எனக்குத் தெரியும் இது கனவல்ல, விருப்பம்.
அன்பையும் அறனையும் தாங்கிய எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும் எம் இறையாற்றல், இவ்விருப்பத்தையும் நிறைவேற்றும். இந்தக் கூட்டத்தில் இணைந்துகொள்ள விரும்பும் அனைவரும் அறம் தாங்கும் சமூகத்திற்கான விருப்பத்தில் நிலைபெறுங்கள்.
நமக்கு முன்னே எண்ணற்ற திருப்பிறப்பாளர்கள் வழிகாட்டியுள்ளனர். நம்மாழ்வார் எனும் திருப்பிறப்பாளர் இக்காலத்திற்கான பாதைகளைச் செப்பனிட்டுச் சென்றுள்ளார். அவரை ஆற்றலாக உணர்ந்து பாருங்கள், உங்களோடு உரையாட அவர் விருப்பத்துடனிருக்கிறார்.
(வானகம்’ இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை இது)
பதிவு செய்த நாள் : 05/04/2016
No comments:
Post a Comment