Tuesday, 7 February 2017

இட பாகம் – நூலிலிருந்து சில பத்திகள்

இட பாகம் – நூலிலிருந்து சில பத்திகள்
-ம.செந்தமிழன்

எந்த உயிரில் ஆண் தன்மை மிகுந்துள்ளதோ அது ஆண் என்றும், பெண் தன்மை மிகுந்த உயிர் பெண் என்றும் அறியப்படுகிறது. ஆனால், இரு தன்மைகளும் கலந்த நிலைதான் எல்லா உயிர்களுக்கும் உள்ளது என்பதை அழுத்திக் கூற விரும்புகிறேன்.

நமது மரபு மெய்யியலில் இதை, சிவம் – சக்தி என்றழைக்கிறோம். சிவம் - ஆண்மையையும், சக்தி – பெண்மையையும் குறிக்கிறது. ஆனால், சிவமும் சக்தியும் தனித்தனியாக இருப்பதே இல்லை.

இறையின் இட பாகம் பெண்மை, வலப் பக்கம் ஆண்மை என்பது கருவுரு மெய்யியலின் சாரம். ’எனக்கு வலப்பக்கத்தில் இருப்பவரே…உமக்கு ஸ்தோத்திரம்’ என்பது விவிலியத்தின் வாசகங்களில் ஒன்று. கர்த்தராகிய தந்தையை நோக்கி இவ்வாசகம் கூறப்படுகிறது. 

வலப்பக்கம் இருப்பவர் தந்தை என்பதை ஆதி கிறித்தவம் கூறியது. தமிழர் மரபில், இடது, வலது பக்கங்களை முறையே பெண், ஆண் என்று பதிவு செய்துள்ளனர்.

ஆண்மை, பெண்மை ஆகிய இரண்டும் கலந்த நிலைதான் அனைத்து உயிர் வடிவங்களும் ஆகும். ஓர் உயிரில் எந்தத் தன்மை மிகுந்துள்ளதோ அந்தப் பாலினமாக அவ்வுயிர் உணர்கிறது, அறியப்படுகிறது. 


ஆண் வேறு பெண் வேறு என்பதெல்லாம் அறிவுசார்ந்த அடையாளங்கள்தான்.
ஆண்கள் என்றால் போர்த் தொழிலுக்குப் போகின்றவர்கள், பெண்கள் என்றால் வீட்டு வேலை செய்பவர்கள் என்ற புரிதல் சமீப காலத்தில் உருவானது. வரலாற்றில் இப்படியான நிலைமை இருந்ததில்லை.

நம்முடைய கோயில்களின் சிற்பங்களில் உடைவாளைச் செருகிக் கொண்டு நிற்கும் பெண்களைப் பார்க்கலாம். தெய்வங்களில் கொற்றவை, காளி ஆகிய வடிவங்கள் ஈவிரக்கமின்றி தீமைகளை அழிக்கும் இயல்பு கொண்டவைதான். பொதுவாகவே பெண் தெய்வங்கள் அனைவரும் வீரம் செறிந்தவர்கள்தான் என்பதை அவர்களின் உருவங்களைக் கண்டாலே புரிந்து கொள்ளலாம்.
எனவே, பெண்தன்மை என்பது ’அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு மூட நம்பிக்கைகளை உடையது’ என்ற கருத்தை முதலில் ஆண்கள் தூக்கிப்போட்டு உடைக்க வேண்டும்.
…………..

பெண்கள் ஏன் கருப்பையை நீக்கும் அளவிற்கு மருத்துவமுறைகளை நோக்கித் துரத்தப்படுகிறார்கள் என்பதுதான் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டிய, கூடுதலாகப் பெண்களும் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி.
மாதவிலக்கு நாட்களில் ஓய்வு எடுக்க வேண்டும். ஏன் என்றால் உதிரப்போக்கு என்பது மலம் கழிப்பது போன்ற நிகழ்வு இல்லை. உதிரப்போக்கை ’கழிவு’ என்று சொல்லக்கூடிய கொள்கையும் இப்போது இருக்கின்றது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. உதிரப்போக்கு என்பது நிச்சயமாகக் கழிவு கிடையாது.
உதிரத்தின் வழியாக வெளியேறுபவை யாவும் உயிரணுக்கள். உணவில் கிடைக்கும் ஆற்றலை உயிரணுக்களாக மாற்றும் பணி கருப்பை மண்டலத்தில் நிகழும். உயிரணுக்கள் உருவாக வேண்டுமானால் ஒட்டுமொத்த உடலின் பருவநிலையும், ஆற்றல் மண்டலங்களும் சீராக இருக்க வேண்டும். 

மாதவிலக்கு நாட்களில் வெளியாகும் உதிரத்தில் கணக்கிட இயலாத உயிரணுக்கள் உள்ளன. அவை எல்லாம், மனித உயிரணுக்கள் என்று தெளிவாகக் கூற இயலாத நிலையில் உள்ளவை.

சாப்பிட்ட பிறகு சிலமணி நேரத்தில் அது மலமாகி வெளியேறி விட்டது என்பது போன்ற செரிமான வேலையை அது செய்யவில்லை. உயிர் ஆற்றலை, உயிர் அணுக்களை, சுரப்பிகளைத் தூண்டி, சீர் செய்துவிட்டு, தன்னுடைய சுத்திகரிப்பு பணியை முடித்துவிட்டு, தேவைக்கு அதிகமான உயிர் ஆற்றலையும் தக்க வைத்துக் கொள்வதுதான் கருப்பை. நிச்சயமாக அது ஆசனவாய் கிடையாது. சிறுநீரகம் கிடையாது. 

கருப்பை என்பது உயிர்களைத் தாங்கி வளர்க்கும் உறுப்பு. இதைத் தயவுசெய்து மனதில் புரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அது கழிவு அல்ல. கழிவு என்று புரிந்து கொண்டதன் விளைவாகத்தான், ஏதோ மலம் கழிப்பதைப் போல அதைப் பற்றிய அணுகுமுறை இந்தச் சமூகத்தில் உருவாக்கப்பட்டு, அதற்கெல்லாம் எதற்கு ஓய்வு என்ற திமிர் பிடித்த மனோநிலை இப்போது உருவாக்கப்பட்டு உள்ளது. 

அதனால்தான் மாதவிலக்குக் காலத்தில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். 

இவ்வாறு ஓய்வு எடுக்கும் முறையில், குறுக்கே உலக்கையைப் போட்டு வைப்பது, யாரும் தொடக்கூடாது எனக் கட்டுப்பாடு விதிப்பது ஆகியவை போன்ற மூட நம்பிக்கைகள் பிற்காலத்தில் பெருகிவிட்டன. இவை எல்லாம் பெண்களுக்கு எதிரான சிந்தனையும்கூட, தொட்டால் தீட்டு, கோவிலுக்குப் போகக்கூடாது என்பவையெல்லாம் ஒழித்துக் கட்டப்படவேண்டிய பழக்கவழக்கங்கள். ஆனால் இந்தப் பழக்கவழக்கங்களை வைத்துக்கொண்டு நமது மரபு அறிவியலை நிராகரிக்க முடியாது. 


மாதவிலக்குக் காலத்தில் ஓய்வு எடுக்கும் பழக்கத்தை நிறுத்திய பிறகுதான் கருப்பை மருத்துவமனைகள் பெருகத் தொடங்கின.

கருப்பைக்கென்று மருத்துவ நிபுணர்கள் எப்பொழுது உருவானார்கள்? நாப்கின் அறிமுகத்திற்குப் பின்புதான். கருப்பைக்கென்று ஸ்கேன் எந்திரங்கள் இங்கே வந்தன. நாப்கின்களுடைய வருகைக்கு முன்பு அதெல்லாம் இங்கு கிடையாது.

உதிரப்போக்கு நாளில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று, அன்புள்ளம் கொண்ட ஒருவரால் கூற முடியும். தொழில் நிறுவங்களை நடத்தும் முதலாளிகள் அப்படிச் சொல்ல முடியுமா? அவர்களுக்கு பெண்கள் பணிக்கு வர வேண்டும்; தொழிற்சாலைக்கு வர வேண்டும்; எடுபிடி வேலைக்கு வர வேண்டும்; அலுவலகத்திற்கு வரவேண்டும். அவர்கள் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் விடுப்பு எடுப்பதை ஒரு முதலாளியால் சகித்துக் கொள்ள முடியாது. 

நான் முன்வைக்கும் கருத்து, முதலாளிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல; மனிதர்களுடைய பக்குவமற்ற அன்பற்ற சிந்தனைகளுக்கு எதிரானது. எவராக இருந்தாலும், ’உங்களுக்குச் சோர்வாக உள்ளதா? ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்’ என்கிறேன். இது தத்துவமல்ல மிக எளிமையான சொல்தான். இதைச் சொல்வதற்குக் கூட மனமில்லாத சமூகத்தில் பிறந்த பெண்கள் இன்று கருப்பை நோயால் அவதிப்படுகிறார்கள்.
…………..

நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளில் படுக்கை அறைகளுக்கு முக்கியத்துவம் இல்லை. பல வீடுகளில் கணவன் மனைவி படுப்பதற்கெனத் தனி அறையே இல்லை. அக்காலத்தில், பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தன. ஆணும் பெண்ணும் நீண்ட காலம் நலமாகவும் வாழ்ந்தனர்.
இப்போது வீடுகளின் முதல் தகவல் அறிக்கையிலேயே, எத்தனைப் படுக்கை அறைகள் என்ற விவரம் உள்ளது. அந்தப் படுக்கையறைகளில் என்ன விதமான கற்கள் பதிக்கப்பட வேண்டும், என்ன வண்ணம் பூசப்பட வேண்டும், எந்தத் திசையில் இருக்க வேண்டும் என்பவை போன்ற கவனங்களும் உள்ளன. ஆனால், குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் இப்போதுதான் பெருகியுள்ளன. இந்தப் படுக்கையறைகளில் என்னதான் நடக்கிறது?
……………..

‘உன்னால் எனக்கு என்ன பயன். வேலைக்குச் சென்றால் என்ன பயன், வேலைக்குச் செல்லாவிட்டால் என்ன பயன்?’ என்று யாராவது கேட்டால் அவர் மனிதன் என்ற பிறவிக்குத் தகுதி அற்றவர். ஒன்று அவர் திருந்த வேண்டும் அல்லது அவரை நீங்கள் விலக்க வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி .
எந்த உறவாக இருந்தாலும் ’ஆணும் பெண்ணும் இணைந்து இருக்க வேண்டும்’ என்பதை நோக்கியவையாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் அவ்வாறு இன்புறும் வகையில்தான் படைக்கப்பட்டுள்ளோம். என்னுடைய ஒருபாதி பெண் மறுபாதி ஆண். நாம் பிரிந்து இருப்பதற்கு வாய்ப்பில்லை, தேவையுமில்லை.

பணிநிமித்தமாக, பொருளாதார நிமித்தமாக வெளிநாடுகளில் வாழக்கூடிய உங்கள் கணவர்களை நீங்கள் அழைக்க வேண்டும். ’எங்களுடன் வந்து வாழவேண்டும்’ என்று நீங்கள் முதலில் விரும்ப வேண்டும். பொருளாதாரத்திற்காகப் பிரிந்திருப்பது இருவருக்குமான தண்டனை. பொருளாதாரத்தின் பொருட்டு தயவு செய்து பிரிந்து இருக்காதீர்கள்.
’பொருள்வயின் பிரிதல்’ என்று ஒரு தலைப்பு தொல்காப்பியத்திலே உள்ளது. குறிஞ்சி நிலத்திலிருந்து பொருளுக்காகச் சென்றவன் திரும்பி வருவதற்குள்ளாக அந்தப் பெண்கள் அனுபவித்த துன்பங்களை எல்லாம், பாலைத் திணைப் பாடல்கள் பதிவு செய்துள்ளன. அகத்திணையில் ’பாலை’ என்பது தலைவன் – தலைவி பிரிவைப் பற்றியது. 

பிரிந்து சென்ற கணவர்களைப் பற்றி அந்தப் பெண்கள் முன்வைத்த கருத்துகள் பாலைத் திணைப் பாடல்களில் உள்ளன. சற்று ஆழ்ந்து படித்தால் அவை எல்லாம் பொருளாதாரக் கோட்பாடுகள் என்பது புரியும். 

பொருள் என்றால் என்ன? பொருளாதாரம் எதற்காக வேண்டும்? ஒரு சமூகத்தின் பொருளாதாரம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் சங்ககாலப் பெண்கள் பாடி வைத்தார்கள். அதிலே அந்தப் பெண்கள் வழக்கமாக சொல்லக்கூடிய வாசகம் என்னால் மறக்க முடியாத வாசகம். அவர்களில் ஒருத்தி கேட்கிறாள், ‘பொருள்தான் பெரிது என்று என்னை விட்டுப் பிரிந்து சென்ற என் தலைவா, என்னுடைய உடலை விடப் பெரிய பொருளை நீ எங்கே கண்டுபிடிப்பாய்?’ என்று.
ஒரு மாத காலம் இரண்டு மாத காலம் கணவனைப் பிரிந்திருந்த பெண்கள் கேள்வி கேட்டார்கள், கண்டித்தார்கள். ‘பொருள் பெரிது அல்ல. வந்து என்னுடன் குடும்பம் நடத்து. கட்டிப்பிடித்துக் கொண்டு என்னுடன் தூங்கு’ என்று நேரடியாகச் சொன்ன பாடலை இப்பொழுதும் நீங்கள் படிக்கலாம். சங்க இலக்கியத்தில் அவை உள்ளன.
…..

கல்லீரல் இல்லாமல் நுரையீரல் இயங்க முடியாது. அதுபோல ஆண்கள் இல்லாமல் பெண்கள் இயங்க முடியாது. பெண்கள் இல்லாமல் ஆண்கள் இயங்க முடியாது. ஒருவருக்கு ஒருவர் எதிரிகளோ, போட்டியிடும் பாலினங்களோ இல்லை. ஒன்றாகவே இருப்பதற்காகப் படைக்கப்பட்டவர்கள். ’ஒன்றாகவே இருங்கள், இன்பமாகவே இருங்கள்’ என்பதற்காகப் படைக்கப்பட்டவர்கள்.
…………..
இட பாகம் (மகளிர் நலம்)
- நூல் விலை ரூ.50/-

செம்மை வெளியீட்டகம் தொடர்புகளுக்கு:
விஜயன் கதிர்வேல்: 73588 87896
விற்பனைப் பொறுப்பாளர்.

வனம் மாத இதழ், ‘ஆவணி- புரட்டாசி இரட்டை இதழாக வெளியாகிறது. ஊர் சந்தையில் கிடைக்கும். சந்தாதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் கிடைக்கும்.
அட்டைகள் வடிவமைப்பாளர்: கலாநிதி பவேஸ்வரன்

No comments:

Post a Comment