Tuesday, 7 February 2017

காவிரி வரலாற்றுக் காணொளிகள் வெளியீடு

காவிரி வரலாற்றுக் காணொளிகள் வெளியீடு :
பெரும் பணியின் சிறிய துவக்கம் இது!
ம.செந்தமிழன்



ஏறத்தாழ நூறு பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் ஏவப்பட்டன. 90 வயது மூதாட்டியை வீட்டிற்குள் பூட்டி வைத்து, வீட்டோடு கொளுத்தினார்கள். ஒன்றரை இலட்சம் பேர் அகதிகளாக விரட்டப்பட்டனர். குடிக்க நீரின்றி, உணவின்றி, ஒதுங்க வீடின்றி காடுகளில் பதுங்கிக் கிடந்தனர் பல்லாயிரம் மக்கள். கடைகள், வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. இவ்வளவும் தமிழர்கள் மீது கன்னட இன வெறியர்கள் நடத்திய தாக்குதல்கள். 1991 ஆம் ஆண்டு டிசம்பர், 1992 ஜனவரி ஆகிய இருமாதங்களில் இந்தக் கொடுமைகள் அரங்கேறின.

‘தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தர வேண்டும்’ என்ற காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பிற்குக் கன்னடர்கள் ஆற்றிய எதிர்வினைகள் மேலே உள்ளவை.

இவையெல்லாம் உங்கள் கவனத்திற்கு வந்தனவா எனத் தெரியவில்லை. இவற்றைப் பற்றி நீங்கள் தீவிரமாகச் சிந்தித்திருந்தால்கூட, இந்த 25 ஆண்டுகளில் காவிரி நதி மீதான தமிழர் உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கும்.
போராட்டம் என்பது விடுதலைக்கான வழிமுறைகளில் ஒன்று. போராட்டம் மட்டுமே தீர்வு தரும் என நான் நினைக்கவில்லை. போராட்டம் எனும் வழியைத் தேர்ந்தெடுக்கும் முன், ‘நமக்குத் தீர்வு வேண்டும்’ என்ற விருப்பம் உருவாக வேண்டும். அந்த விருப்பம் தெள்ளத் தெளிவானதாகவும் அழுத்தமானதாகவும் இருந்தால், எல்லா விடுதலைகளும் சாத்தியமாகும்.
மிக நீண்ட காலமாக காவிரி நதியின் மீது அலட்சியம் காட்டியுள்ளோம். நாம் செய்வதற்கு நிறைய பணிகள் உள்ளன. அவற்றிற்கெல்லாம் முன்னர், காவிரியின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். வரலாறுதான் மரபுகளைத் தாங்கியுள்ள வேர். வேரை உணராத மரங்கள் இற்றுவிழுகின்றன. நம் வேர் இன்னும் உயிர்ப்போடுள்ளது. நாம் அதை உணர்ந்தால் போதும், தேவையான ஆற்றல் நம் கிளைகளுக்கு வழங்கப்படும்.

காவிரிக்கும் நமக்குமான வரலாற்று உறவு, இக்காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் இக்காணொளியைப் பொறுமையாக உள்வாங்குங்கள். பின்னர், இக்காணொளி இணைப்புகளையும் இவற்றில் உள்ள தகவல்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். ’காவிரி நதி உயிர்ப்போடு மீண்டு வர வேண்டும்’ என்ற விருப்பத்தை மனதில் நிலைநிறுத்துங்கள். நாம் செய்ய வேண்டிய அனைத்துச் செயல்களுக்கும் அந்த விருப்பம் வழிகாட்டும்.
காவிரி நீர் உரிமையை நிலைநாட்டுவதற்கு, ‘எதிர்வினையாற்றாதீர்கள், மறுவினையாற்றுங்கள்’ என்று ஏற்கெனவே எழுதினேன். அக்கட்டுரையில், ‘காவிரியின் வரலாற்றினைத் தொகுத்து வெளியிடுவோம்’ என உறுதியளித்திருந்தேன். அதன்படி, கடந்த இரு மாதங்களாக இப்பணியில் ஈடுபட்டோம்.

https://www.facebook.com/directorsenthamizhan/posts/10208613230145963

செம்மைக் குடும்பத்தினரான ஆனந்த் செல்லையா, கலாநிதி, நளினி, காந்திமதி ஆகியோரின் மிகக் கடுமையான உழைப்பு இப்பணியில் உள்ளது.
காவிரி ஓட்டப் பாதையில் உள்ள காடுகளுக்கு என்னுடன் பயணித்து, ஒளிப்படங்கள் பதிவு செய்தார் பால் க்ரிகோரி.
இக்காணொளிகளை உங்கள் பிள்ளைகளுக்குக் காட்டி, பொறுமையாக விளக்குங்கள்.

காணொளிக் காட்சிகள் ஐந்து பகுதிகளாக உள்ளன. வரிசைப்படி காணுங்கள். தரவிறக்கம் செய்வதற்காக, youtube இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
காணொளிப் பகுதிகளின் தலைப்புகள்:

1. தமிழர் வரலாற்றில் காவிரி
2. 1991: கறை படிந்த காலம்
3. தீர்ப்புகளும் அத்துமீறல்களும்
4. காவிரிப் போராளிகள்
5. உண்மையான அன்புதான் உரிமை பெற்றுத் தரும்.
மேற்கண்ட வரிசைப்படி காணொளிகளைக் காணுங்கள்.

செம்மைவெளியீட்டகப் பக்க இணைப்பு:
https://www.facebook.com/Semmai-Publications-2439520491109…/

Published on : 01/11/2016

No comments:

Post a Comment