Friday, 10 February 2017

ஓர் ஊரின் தாகம் தணிக்க முன்வாருங்கள்!

*ஓர் ஊரின் தாகம் தணிக்க முன்வாருங்கள்!*

*ம. செந்தமிழன்*

 

நண்பர்களே,
இராமநாதபுரம் மாவட்டத்தின் வறட்சியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒருகாலத்தில், முல்லை நிலமாக இருந்த பகுதி அது. புதர்க் காடுகளும் குறுமரக் காடுகளும் நிறைந்திருந்த நிலப் பகுதிதான் இராமநாதபுரம். மேய்ச்சல் தொழில் செய்யும் மக்கள் அதிகமாக வாழ்ந்த நிலம் அது. ஒருபக்கம் கடற்கரைப் பட்டிணங்கள் மறுபக்கம் புதர்க் காடுகள் என இயற்கையின் அமைப்பில் எந்தக் குறையும் இருக்கவில்லை. கடந்த ஐம்பதாண்டுகளாக, அம்மாவட்டத்தில் தலைதூக்கியுள்ள நவீனச் செயல்பாடுகள், மிக மோசமான வறட்சியைக் கொண்டு வந்துள்ளன.
சீமைக் கருவேல மரங்களின் ஆதிக்கம், இராமநாதபுரம் வறட்சிக்கு மிக அடிப்படையான காரணம். இயற்கையான மேய்ச்சல் காடுகள், புதர்களை சீமைக் கருவேல மரங்கள் அழித்துவிட்டன. இப்போது எங்கு பார்த்தாலும் அம்மரங்கள்தான் நிறைந்துள்ளன. விளைவாக, நிலம் வறண்டுவிட்டது. நிலத்தின் மேல் பகுதியில் உப்புத்தன்மை மிகுந்துள்ளது. சீமைக் கருவேல மரங்கள் மிகுந்த எல்லா நிலங்களிலும், வறட்சியும் உப்புத்தன்மையும் விளைவதைக் காணலாம்.

பனைத் தொழில் செழிப்பாக இருந்த மாவட்டம் இராமநாதபுரம். கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடை, பனைத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட தொழில் இழப்புகள் ஆகியவற்றால் பனை மரங்கள் குறைந்துள்ளன. குறிப்பாக, நெகிழிப் பொருட்கள் வருகைக்குப் பின்னர் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட முறம், கூடை, வடி தட்டுகள் போன்ற பனைப் பொருட்களின் விற்பனை சரிந்துவிட்டது. நவீன ஒட்டு வீடுகளின் எண்ணிக்கை, பனை ஓலை வீடுகளையும் நசுக்கி விட்டது. பனைவெல்லத்திற்கான தேவை இப்போது உயர்ந்துள்ளதால், ஓரளவுக்கு நிலைமை மாறியுள்ளது. பனை ஏறும் மனிதர்களின் எண்ணிக்கை குறைவதால், பல்லாயிரம் பனை மரங்கள் இப்போது செங்கல் சூளைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

புதர்க் காடுகள், பனைமரங்கள் ஆகிய இரண்டின் வீழ்ச்சி அப்பகுதியின் நிலவளத்தினைக் குறைத்துள்ளது. விளைவாக, மழைவளமும் குன்றியது. ’உயிர்களுக்காகத்தான் மழை பொழியும், உயிர்களால் அல்ல’ என்று நான் தொடர்ந்து கூறிவருவதைக் கவனித்தவர்களுக்கு, இவ்வாறான நிலைமைகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அங்கே நல்ல உயிரினங்கள் குறைந்துவிட்டன. காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன, புதர்கள் யாவும் கனரக எந்திரங்களின் இரும்புப் பற்களால் வேரோடு பிடுங்கி வீசப்பட்டுவிட்டன.
தொண்டி வழியாகச் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலை, இப்போதுவரை செழிப்பாக உள்ளது. பல நூறு குளங்கள் அங்கே இருப்பதைக் கடந்த ஆண்டு கண்டேன். இனி அக்குளங்களும் இருக்காது. அந்தக் கிழக்குக் கடற்கரைச் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றும் பணிகள் துவங்கிவிட்டன. இன்னும் சில காலம் கழித்து அந்தக் குளங்களின் கல்லறைகள் மீது அதிவேகமாகப் பயணம் செய்யலாம். ஏதேனும் ஓர் ஏரிக் கரையின் மீது சுங்கச் சாவடி இருக்கும். அருகே, இருந்த தாமரைக் குளங்கள் மூடப்பட்டு, அதன் மேல் ‘உயர்தர சைவ /அசைவ உணவகங்கள்’ அமைக்கப்பட்டிருக்கும்.
ஏற்கெனவே ஏராளமான காடுகளும் வயல்களும் நீர்நிலைகளும் அழிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தவாறு, சுங்கக்கட்டணமும் கொடுத்துச் செல்லும் சமூகத்திற்கு இவையெல்லாம் பழகிய பாவங்கள்.
இவற்றின் ஊடாக, அங்கே வாழும் மக்களின் குடிநீர் குறித்தாவது சிந்திக்கும் கடமை நமக்குள்ளதாக நினைக்கிறேன். கடந்த ஆண்டு, விகடன் ’அறம் செய்ய விரும்பு’ திட்டத்தின் கீழ் இராமநாதபுரத்தின் ஒரு கிராமத்திற்கு மழை நீர் சேமிப்பு செய்ய நினைத்தேன். விகடன் குழுவும் இத்திட்டத்திற்கு ஒத்திசைவு அளித்திருந்தது. சென்னை, கடலூர் பெருவெள்ளப் பணிகளில் பெரும் நிதியை விகடன் குழுமம் ஈடுபடுத்த வேண்டியிருந்ததால், அத்திட்டம் முடங்கிவிட்டது.

இந்த மழைக் காலத்திலாவது அப்பணியைச் செய்துவிட வேண்டும் என்ற விருப்பம் எனக்குள்ளது. செம்மைப் பொறுப்பாளர்களுடன் கடந்த மாதம் இதைப் பற்றி உரையாடினேன். அனைவரும் ஒத்திசைந்தனர்.
இராமநாதபுரத்தின் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள எளியோர் வீடுகளுக்கு மழைநீர் சேமிப்பு அமைப்பை உருவாக்கித் தருவது எங்கள் திட்டம். இதற்கு,’செம்மை அகல்’ எனப் பெயரிட்டுள்ளோம். ‘அகல்’ என்றால் அகல் விளக்கையும் குறிக்கும், முக்காலமும் விரிந்துகொண்டே செல்லும் தன்மையையும் குறிக்கும். மனம் என்பதே அகல்தான்.
இத்திட்டத்தின் பணிப் பொறுப்பாளராக கலாநிதி செயலாற்றுகிறார். பொருளாதாரப் பொறுப்பாளராக, இராஜேஸ்வர் இருக்கிறார். கட்டுமானப் பணிகளை செம்மைக் குடும்பத்தைச் சேர்ந்த திரு.சேகர் மேற்கொள்கிறார். மழை நீர் சேமிப்பிற்கான தொழில் நுட்ப ஆலோசனைகளை, திரு.சிவபிரகாசம் வழங்கினார்.

ஒருங்கிணைப்புப் பணிகளை இராஜேஸ்வர், பாலாஜி இணைந்து மேற்கொள்கிறார்கள்.

செம்மையின் எந்த நடவடிக்கையும், நன்கொடைகளைப் பணமாக வாங்கும் வகையில் இருப்பதில்லை. பெருவெள்ளக் காலத்தில் மட்டும் விதிவிலக்காக அவ்வாறு செயலாற்ற வேண்டியிருந்தது.
இராமநாதபுரம் பணிகளுக்கென நன்கொடையைப் பணமாக அனுப்ப வேண்டாம். எந்த வங்கிக் கணக்கையும் நாங்கள் முன்வைக்கவில்லை. இப்பணியில் ஈடுபட விரும்புவோர் செய்ய வேண்டியவை:

1. முதலில் உங்களைத் தன்னார்வராக இணைத்துக்கொள்ளுங்கள்.
2. எந்தக் காலகட்டத்தில் பணிகள் நடக்கும் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பார்கள். அந்தக் காலத்தில் எத்தனை நாட்கள் உங்களால் அங்கு வர முடியும் என்பதைத் தெரிவியுங்கள்.
3. பணிகள் நிகழும் கிராமத்திற்கு வந்து ஓரிரு நாட்களாவது தங்கி பணியாற்றுங்கள்.
4. கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்களை நீங்கள் வரும்போது தெரிவிப்போம். அவற்றுக்கான தொகையை அங்கே வந்து செலுத்துங்கள். அல்லது நீங்களே பொருட்களை வாங்கி அனுப்புங்கள்.
5. நேரில் வரவே இயலாதவர்கள், ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசி, தேவையான பொருட்களை வாங்கித் தருவதற்கு ஒத்துழைப்பு நல்குங்கள்.
6. இயன்றவரைக்கும் களப்பணியாற்ற முன்வாருங்கள்.

இம்மழைக்காலத்திற்குப் பின்னர் நாம் பணியாற்றும் கிராம மக்கள், குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் நிம்மதியாக தாகம் தணிக்க இணைவோம் வாருங்கள்.
செம்மை அகல் பணிகள் நிறைவேற்றப்பட்ட பின்னர், இத்திட்டத்தை முன்மாதிரியாகக்கொண்டு வேறுபல அறச் சிந்தனையாளர்களும் இக்களத்தில் இறங்க வேண்டும். வாய்ப்புள்ள அனைவரும் ஒன்றுகூடினால், வறட்சியில் வாடும் உயிர்களுக்கு மழைநீர் வார்க்க முடியும்.
இப்பணிக்கான தொழில்நுட்பச் சோதனைகளைக் கடந்த இரு மாதங்களாகச் சென்னையில் மேற்கொண்டோம். இதற்கெனக் குழு அமைக்கப்பட்டிருந்தது. திருமுருகன், ஆனந்த் செல்லையா ஆகிய இருவரும் கடுமையான அலைச்சல், பணிச் சுமைகளின் ஊடாகச் செயலாற்றிக்கொண்டுள்ளனர்.
இத்திட்டத்தைப் பொறுத்தவரை, ஒரு வீட்டிற்கு எவ்வளவு செலவாகும் என்ற கணக்கு பொருந்தாது. வீட்டின் அமைப்பு மற்றும் வசதிக்கேற்ப செலவு மாறும். ஆகவே, பணக் கணக்கினைச் சிந்திக்காமல், இயன்றதைச் செய்வோம் என்ற மனக் கணக்குடன் வாருங்கள். ஒரே ஒரு மூட்டை சிமெண்ட் வாங்கித் தந்தால் கூட, அது அம்மக்களுக்கான உதவிதான்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட வீடுகளுக்கு, நிரந்தரமாகக் குடிநீர் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். மழைக் காலம் மட்டுமல்லாது, எல்லாக் காலங்களிலும் தாகம் தணிக்கும் வகையில் கட்டுமானங்களை எழுப்ப உள்ளோம்.

செம்மைச் சமூக உறுப்பினர்கள், செம்மையின் ஆதரவுக் குடும்பத்தினர் மற்றும் அறச் சிந்தனை கொண்ட அனைவரையும் இப்பணிக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பதிவு செய்த நாள்:25/10/2016

No comments:

Post a Comment