தோழர் ம.செந்தமிழன் பேட்டி:
ம.செந்தமிழன், தமிழ் சின்னத்திரையில் குறிப்பிடத்தக்க, திரைக்கதை ஆசிரியர்.
பல லட்சக் கணக்கில் வருமானம் ஈட்டி வந்த அந்த தொழிலை தூக்கி எறிந்துவிட்டு, இயற்கை விவசாயம் செய்ய சென்றவருக்கு; ஆவணப்பட, முழுநீளத் திரைப்பட இயக்குனர்; மரபு வழி சிகிச்சையாளர்; நூலாசிரியர் என, பல்வேறு முகங்கள். மருத்துவமனை வாசலையே மிதிக்காமல் வாழ விரும்புவோருக்கு, குடும்ப நலக் கூடல் என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அலோபதி மருத்துவ முறைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வணிக அரசியலை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
அவருடன் பேசியதில் இருந்து.....
* உடம்பில் உள்ள சர்க்கரை குறைபாட்டை, நோய் என பிரசாரம் செய்வதற்கு பின்னால், வணிக நோக்கங்கள் இருப்பதாக எப்படி கருதுகிறீர்கள்?
இதில், பன்னாட்டு மொத்த மருந்து உற்பத்தியாளர்களின் சதி இருக்கிறது. நம் நாட்டில் உள்ள அலோபதி மருத்துவமனைகள், அவற்றின் கண்ணிகள். குறிப்பிட்ட மனிதரின் உடம்பில், இத்தனை அளவு சர்க்கரை இல்லை எனில், அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் என, எந்த கணக்கீட்டின் வழி மதிப்பிடுகின்றனர் என்பது புரியவில்லை. அதற்கு ஆய்வுகள் உண்டா, உண்டு எனில், எந்த கணக்கீட்டின்படி ஆய்வு நடத்தப்பட்டது? ஒவ்வொரு பகுதிகளிலும், தட்பவெப்பம், கால நிலை, வாழ்விடம் இவற்றைப் பொறுத்தே, சர்க்கரை யின் அளவு மாறுபடும். மலைப்பகுதிகளில் வாழ்வோர், காய்கறிகளை அதிகளவிலும், அரிசியை சிறிதளவும் பயன்படுத்துவர். அவர்களுக்கு சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். ஆனால், மாநகரங்களில் வசிப்போர், அதிகளவில் அரிசி உணவை உண்கிறவர்களுக்கு சர்க்கரையின் அளவு குறைந்திருக்கும். இதை எல்லாம் கணக்கில் எடுக்காமல், பொத்தாம் பொதுவாக சர்க்கரை அளவை கணக்கிடுவதற்குப் பின்னால், வணிக நோக்கமே எஞ்சி நிற்கிறது.
* தொடர்ச்சியாக மாத்திரை, மருந்து, இன்சுலின் உட்கொள்வதால் என்னென்ன பின் விளைவுகள் ஏற்படுகின்றன?
அமெரிக்காவின், பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக தொற்றுநோயியல் துறையை சேர்ந்த, இரு பேராசிரியர்கள், இன்சுலின் பயன்படுத்தும் சர்க்கரை குறைபாட்டாளர்களின் ஆயுட்காலம் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். 'இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய் மரணங்கள்' என்பது அவர்களது ஆய்வு. ''கடந்த 1920களில், இன்சுலின் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோயாளிகள் மரணம் அடையும் விதத்தில், அதிசயிக்கத்தக்க அளவில் மாற்றம் ஏற்பட்டது. இன்சுலினுக்கு முன்பு, சர்க்கரை நோயாளிகள் கோமா நிலைக்கு சென்று மரணம் அடைந்தனர். இன்சுலின் அறிமுகப்படுத்தப்பட்ட பின், அதை பயன்படுத்தியோர், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதயநோய் ஏற்பட்டு மரணம் அடைவது அதிகரித்து விட்டது. இன்சுலின் பயன்படுத்தும் நோயாளி களின் மரண எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குழந்தை பருவ இன்சுலின் நோயாளிகளைப் பொருத்தவரை, தற்போது இன்சுலின் பயன்படுத்துவோரில், 15 சதவீதத்திற்கு அதிகமானோர், அவர்களது 40 வது வயதிலேயே மரணம் அடைவர். அந்த நேரத்தில், நாட்டின் இறப்பு விகிதம் இப்போது இருப்பதை காட்டிலும், 20 மடங்கு அதிகமாக இருக்கும்,'' என, குறிப்பிட்டுள்ளனர். தொடர்ச்சியாக, இன்சுலினை பயன்படுத்துவதால், உடல்நிலை சீரழியும் என்பதை அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் சுகாதார துறைகளே வெளிப்படையாக அறிவித்துள்ளன. ஆனால், இந்த உண்மைகள் நம் நாட்டில் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்துவதால், உடல் பருமன் அதிகரிப்பு, சிறுநீரக செயல் இழப்பு, ரத்த அழுத்த அதிகரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும்
'பயோக்ளைட்டோசோன்' என்ற மாத்திரையை தொடர்ச்சியாக உட்கொள்வதால், சிறுநீரக செயல் இழப்பு, ரத்தக் கொதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என, பல நாடுகள் தடை செய்துள்ளன. நம் நாட்டில் கூட, கடந்த ஆண்டு ஜூன் மாதம் தடை செய்யப்பட்டது. பின் மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் போராடியதன் விளைவாக தடை நீக்கப்பட்டது. மருந்தின் மேல் அட்டையில், அதன் பின் விளைவுகள் குறித்து அச்சடிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டது. அதையும் செய்ய மறுத்து, மருந்து பெட்டியின் உள்ளே ஒரு சின்ன சீட்டில் அச்சிட்டு வழங்கப்படுகிறது. அதனால், யாருக்கு என்ன விழிப்புணர்வு வந்து விடப் போகிறது?
* மருந்துகளால் சர்க்கரை குறைபாட்டை போக்க முடியாதா?
இந்திய அரசின் மருந்து மற்றும் அழகுப் பொருள் சட்டம் -1940, 1945, 1995, அட்டவணை, 'ஜெ' பிரிவில், 51 நோய்களை வகைப்படுத்தி உள்ளது. 'இந்த நோய்களை குணப்படுத்த முடியும் என்றோ, தடுக்க முடியும் என்றோ, அவ்வாறான எண்ணங்களை வேறு ஏதேனும் வகையிலோ, மக்களுக்ககு அளிக்க கூடாது' என்கிறது அந்த சட்டம். இந்த 51 நோய்களின் பட்டியலை பார்த்தால், நாட்டில் வரும் பெரும்பாலான நோய்களுக்கு அலோபதி மருந்துகளை வாங்கவே தேவையில்லை என்பது புரிந்து விடும். அந்த பட்டியலில், 14வது நோயாக, சர்க்கரை நோயும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், சர்க்கரை குறைபாட்டை முன்வைத்து, பல நூறு பொருட்கள், வணிக சந்தைக்கு வந்து விட்டன. மருந்து, மாத்திரைகளில் துவங்கி, ஊட்டச்சத்து பொருட்கள், உடற்பயிற்சி கருவிகள், செருப்புகள், வெளிநாட்டு தானியங்கள் என, எவ்வளவு பொருட்கள் சந்தையில் விற்கப்படுகின்றன என்பதை பார்த்தாலே போதும்; அதற்குப் பின் இருக்கும் வணிக நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். இதில் பெருங்கொடுமை என்னவென்றால், இவ்வளவு பொருட்கள் பயன்படுத்தினாலும், குறைபாடு குணமாகாது.
* எனில், இந்தப் பிரச்னைக்கு என்ன தான் தீர்வு?
மேற்கத்திய கலாசாரத்தையும், உணவு முறையையும் பின்பற்றுவதால் வரும் வினை இது. கண்ணை மூடிக் கொண்டு, அலோபதி மருத்துவ முறையின் பக்கம் செல்வதை நிறுத்த வேண்டும். அதுவே உங்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்தும். நம் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு திரும்ப வேண்டும். இதை திட்டமிட்டு மறைப்பதன் மூலமாகவே, அலோபதி வணிக சந்தைகள் கொழுத்து திரிகின்றன.
* இதே போன்ற உளவியல் ரீதியிலான அச்சுறுத்தல் தான், கர்ப்ப காலத்திலும் சொல்லப்படுகிறதா?
பெண்களின் பேறுகாலத்தை முன் வைத்தே, அதிகளவிலான நாகரிக கொள்ளை இங்கு நடந்து வருகிறது. குழந்தையின் எடை இவ்வளவு இருக்க வேண்டும். அதன் வளர்ச்சி இவ்வாறு இருக்க வேண்டும் என, நூற்றுக்கணக்கான மருந்து, மாத்திரைகளை வழங்குகின்றனர். மருத்துவமனைகள் வழங்கும் மருந்து, 'சிரப்' போன்றவற்றால், பெண்களுக்கு, வெள்ளைப்படுதல், மாதவிலக்கில் பிரச்னை, மார்பக புற்றுநோய், கல்லீரலில் பிரச்னை போன்ற பின் விளைவுகள் ஏற்படுகின்றன. பிறக்கும் குழந்தைக்கு, சளி தொல்லை, மூச்சுத் திணறல், மனநலம் பாதிக்கப்படுதல், மனச்சிதைவு போன்ற நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக, பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால், கண்ணாடி போட்டே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர்.
* எல்லா காலத்திலும் மூளை வளர்ச்சி குன்றியோர், மன நலம் பாதிக்கப்பட்டோர் இருந்திருக்கின்றனரே, அதற்கு ஏன் அலோபதி மருத்துவ முறையை குற்றம் சாட்ட வேண்டும்?
அதன் விகிதாசாரத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் மட்டும், 30 சதவீத குழந்தைகள் பார்வை குறைபாடு உள்ளவர்களாக உள்ளனர். உடம்பில் பல்வேறு குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, பல லட்சங்களை தாண்டி விட்டது. வீதி தோறும் மருத்துவமனைகள், சாலைதோறும் மருந்தகங்கள் என, நாளுக்கு நாள் அலோபதி மருந்து வணிகம் விரிவடைந்து செல்வது எதைக் காட்டுகிறது?
- அ.ப. இராசா
No comments:
Post a Comment