நிரந்தரத் தீர்வு:
இந்திய விலங்கு நல வாரியச் சட்டத்திலிருந்து காளைகளை நீக்கச் செய்வோம்!
ம.செந்தமிழன்
ஏறுதழுவல் மட்டுமல்ல, தமிழகத்தின் கால்நடை வளர்ப்பும், வேளாண்மையும்
முற்றிலும் இந்திய அரசின் பிடிக்குள் உள்ளன. ‘ஜல்லிக்கட்டுக்கான அவசரச்
சட்டம்’ பிறப்பிக்கப்பட்டாலும் நம்மால் நிரந்தரமாக ஏறுதழுவல் நடத்த இயலாமல்
போகும் வாய்ப்புகளே அதிகம். இந்தப் பரபரப்பான சூழலில் அடிப்படைச் செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
இந்திய விலங்கு நல வாரியம் (animal welfare board of india) வகுத்துள்ள விதிமுறைகள், மாடு, ஆடு, கோழி வளர்ப்பைக் குரூரமான வழிகளில் தடுக்கின்றன. மாடுகளைச் சந்தைக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்லக் கூட அவ்வமைப்பு பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. ஒருவர் தனது மாடுகளைச் சந்தைக்கு ஏற்றிச் சென்றாலும் சில விதிகளைக் காட்டி அவரைக் குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்திக் கைது செய்யவும், தண்டத் தொகை விதிக்கவும் விலங்கு நல வாரியச் சட்டம் வழிவகுக்கிறது.
சிறப்புச் சட்டம் வழியாக நாளைக்கே ‘ஜல்லிக்கட்டு’ நடத்தினாலும் விலங்கு நல வாரியத்தின் உறுப்பினர்கள் அந்த நிகழ்வைக் கண்காணிக்க வருவார்கள். ‘ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்பட்டன’ என்ற அறிக்கையை அவர்கள் உச்சநீதி மன்றத்தில் அளிப்பார்கள். உச்சநீதி மன்றம் உடனடியாக தடை விதிக்கும். இதுதான் கடந்த ஆண்டுகளில் நடந்தது. இனியும் இதுதான் நடக்கும் சூழல் உள்ளது.
நமக்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமானால், ‘இந்திய விலங்கு நல வாரியத்தின் கண்காணிப்பிலிருந்து முற்றிலும் நமது கால்நடைகளை’ விலக்க வேண்டும். அவ்வமைப்பின் பிரதிநிதிகளும், பீடாவின் அங்கத்தவரும் இணைந்து செயல்படுகிறார்கள். பீடாவுக்கென சட்டப்படியான அதிகாரம் ஏதும் இல்லை. ஆனால், விலங்கு நல வாரியம் சட்டப்படியான அதிகாரங்களைக்கொண்ட அமைப்பு. சின்னி கிருஷ்ணா, மேனகா காந்தி, ராதா ராஜன் போன்ற இந்துத்துவ அரசியல் புள்ளிகள் இந்திய விலங்கு நல வாரியத்தை வழிநடத்திக் கொண்டுள்ளார்கள்.
தமிழக நாட்டு மாடுகளை அழிக்கும் வரை இவர்கள் ஓயப் போவதில்லை. எனது மனதில் இருக்கும் விருப்பம் ஒன்றுதான். நம் மண்ணில் நாம் நடத்தும் கால்நடைத் திருவிழாக்களைக் கண்காணிக்க இந்திய அரசின் எந்த அமைப்பும் வரக் கூடாது. அவ்வாறு வந்தால், அவர்கள் நம்மைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக்கொண்டுதான் இருப்பார்கள்.
பீடா, கோக், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவன்ங்கள் நமது மரபுக் கால்நடைச் செல்வங்களை அழித்து, பால் உற்பத்தியிலும் கால்நடை மருத்துவத்திலும் கொள்ளை அடிக்கத் துடிக்கின்றன. இந்தச் சதியில் பெரும்பகுதியை நிறைவேற்றிவிட்டார்கள். மீதமிருக்கும் மரபுச் செல்வங்களைக் காக்க வேண்டுமானால், இவர்கள் அனைவரையும் புறந்தள்ள வேண்டும், விரட்ட வேண்டும்.
இந்திய விலங்கு நல வாரியம்தான் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்கான சட்டப் பாதுகாப்பை வழங்கிக்கொண்டுள்ளது. நமது முதல் எதிரி, இந்திய விலங்கு நல வாரியம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய அரசை எக்கட்சி ஆண்டாலும் இந்திய விலங்கு நல வாரியத்தைப் போற்றிப் பாதுகாக்கின்றன. குறிப்பாக, இந்துத்துவ அமைப்புகளும் கட்சிகளும் தமிழர்கள் மீதுள்ள வன்மத்தினால், விலங்கு நல வாரியத்தின் வழியாகத் தீவிரச் செயல்பாடுகளில் இறங்கியுள்ளன.
தமிழகத்தில் உள்ள எண்ணற்ற பார்ப்பனச் சமூகத்தவர் நாட்டு மாடுகளைப் பாதுகாக்கிறார்கள், ஏறு தழுவலை ஆதரிக்கிறார்கள். எனது குற்றச்சாட்டு அவர்களை நோக்கியது அல்ல. மாறாக, இந்திய தேசியம், பாரதப் பண்பாடு என்ற போலி அடையாளங்களோடு திரியும் இந்துமத அமைப்பினரை நேரடியாகக் குற்றச் சாட்டுகிறேன். இவர்கள் நினைத்தால், இந்திய விலங்கு நல வாரியத்தின் சட்ட்த்தில் இருந்து காளைகளை அகற்ற முடியும்.
சு.சாமியும் மோடியும் இதைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். பாஜகவின் தமிழகப் பொறுப்பாளர்கள் இந்திய விலங்கு நல வாரியத்தின் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று இதுவரை கூறவில்லை. அவர்களுக்கு நமக்கெதிரான உள்நோக்கம் உள்ளது.
இந்தப் போராட்டத்தை நாம் முறையாக எடுத்துச் செல்கிறோம். ‘அவசரச் சட்டம்’ என்ற பெயரில் அரைகுறையாக எதையாவது முன்வைத்து போராட்டத்தை மழுங்கடிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
‘இந்திய விலங்கு நல வாரியத்தின் சட்டத்தில் இருந்து காளைகளை நீக்கு’ என்ற முழக்கம் முன்வைக்கப்பட வேண்டிய நேரம் இது. இது ஒன்றுதான் தீர்வு. இதைச் செய்யாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், மீண்டும் தடை விதிக்க சட்டப்படி வழி உண்டு.
போராட்டத்தை நிறுத்தச் செய்வதற்காக ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்துவார்கள். ஆனால், உச்ச நீதி மன்றம் தலையிட்டு, ‘இது சட்டப்படி செல்லாது’ என்று அறிவிக்கும். ஆகவே, சட்ட்த்தைத் திருத்துவதுதான் தேவை.
இந்திய விலங்கு நல வாரியம் தனது சேட்டைகளை நிறுத்திக்கொள்ளாவிட்டால், தமிழர்களாகிய நாம் அவ்வமைப்பைத் தமிழகத்தில் செயல்படாத வண்ணம் தடுக்க வேண்டும். இத்தகவல்களை மக்களிடம் எடுத்துச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பதிவு செய்த நாள்: 21/01/2017

No comments:
Post a Comment