Friday, 10 February 2017

உடலின் பருவநிலை மோசமாக மாறிக்கொண்டுள்ளது!

உடலின் பருவநிலை மோசமாக மாறிக்கொண்டுள்ளது!
ம.செந்தமிழன்

நுரையீரல் நோய்களின் பெருக்கம் இன்னும் சில ஆண்டுகளில் கணக்கிட இயலாத அளவை எட்டிவிடும் என்பது என் உள்ளுணர்வின் அறிவுறுத்தல்.
கடந்த ஆண்டு மழைக் காலத்திற்கு முன், உடல் சூட்டினால் நோயுற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இப்போதோ சளி நோயாளிகளின் எண்ணிக்கை கற்பனைக்கெட்டாத வகையில் பெருகிவிட்டது.இந்த மாற்றம் சில ஆபத்தான சேதிகளை உள்ளடக்கியுள்ளது.
உடலின் இயக்கத்தில் உள்ள சிறப்புகளில் ஒன்று, ’எதிர்ச்சுழல் இயக்கம்’ என்பதாகும்.

வெளியே குளிர் இருந்தால், உடலின் உள்ளே வெப்பம் உருவாகும். வெளியே வெப்பம் இருந்தால், உள்ளே குளிர் உருவாகும். இவ்வாறான செயல்பாட்டினைத்தான் ‘எதிர்ச்சுழலியக்கம்’ என்று அழைக்கிறேன். இந்த இயக்கம் இல்லையென்றால், வெப்பம் மிகுந்த சூழலில் உடலும் வெப்பமடைந்து வெந்துபோகும். குளிர் சூழலில் உடலும் குளிர்ந்து உறைந்துபோகும்.

எதிர்ச் சுழலியக்கம் என்பது நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. மனிதர்களும் பிற உயிரினங்களும் தாம் வாழும் நிலத்திற்கேற்ற வகையில் உணவு மற்றும் வாழ்க்கைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். நிலத்தில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் காற்று, வெப்பம், நீர் ஆகியவை நிலத்தின் அடிப்படையில்தான் தேவைப்படுகின்றன. பாலை வனத்தில் வாழ்வோருக்கும் குளிர்க் காற்று வீசும் மலைக் காடுகளிலில் வாழ்வோருக்கும் ஒரேவகையிலான காற்று, வெப்பம், நீர் படைக்கப்படவில்லை.

குளிர்ப் பகுதிகளில் வாழ்வோருக்கான உணவுகளை, வெப்பப் பகுதிகளில் வாழ்வோர் உண்டால், அதற்கான விளைவுகள் உடலின் உள்ளே உருவாகும். நிலத்திற்கும் உடலுக்குமான உறவை உறுதி செய்வதில் உணவுகளுக்கு முதன்மைப் பங்கு உண்டு. கோடையில் பனை மரங்கள் நுங்கு மற்றும் பதநீர் தருவது இவ்வாறான உறவினால்தான்.

எந்தப் பருவத்திற்கு எது தேவை என்பதை அந்தந்த நிலத்தில் வாழும் உயிரினங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளன. இந்த மரபினை மீறி, உணவுப் பொருட்களை உட்கொள்ளும்போது, நிலத்திற்கும் புறச் சூழலுக்குமான உறவு மீறப்படுகிறது. விளைவாக, உடலின் எதிர்ச் சுழலியக்கம் கெட்டுப்போகிறது.
வாழும் நிலத்தில் விளையும் உணவுகளை மட்டும் உட்கொண்டால், உடல் தனக்குத் தேவையான காற்று, வெப்பம், நீர் ஆகியவற்றைச் சேகரிக்கிறது. பருவநிலைகளுக்கேற்ப இந்த ஆற்றல்களைப் பயன்படுத்துகிறது. கள்ளிச் செடிகள் மழை நீரை மட்டும் பருகி, சேமித்துக் கொள்கின்றன. கடும் வறட்சியில் அவற்றின் பசுமை மாறுவதில்லை, சதைப் பற்றும் குறைவதில்லை. வேப்ப மரங்கள் கோடையில் இளம் தளிர்களை உருவாக்கி வெப்ப ஆற்றலை உள் வாங்கிக் கொள்கின்றன. குளிர், மழைக் காலத்தில் இலைகளை உதிர்த்துவிட்டு, வெப்ப சேமித்து வைத்த வெப்ப ஆற்றலைக் கொண்டு வாழ்கின்றன.

இயற்கையான நிலங்களில் மேயும் கால்நடைகள் அந்தந்தப் பருவங்களில் முளைக்கும் தாவரங்களை உணவாகக் கொள்கின்றன. பருவம் மாறும்போது, சேமித்து வைத்த ஆற்றல் வெளிப்பட்டு அவற்றைப் பராமரிக்கின்றது.
எதிர்ச் சுழலியக்கம் செயலாற்ற வேண்டுமெனில், உடலின் உள்ளே இருக்கும் காற்று, வெப்பம், நீர் ஆகிய மூன்றும் சீரான அளவில் இருக்க வேண்டும். சீரான அளவு, தேவையான அளவு ஆகியவற்றை எல்லாம் நாம் கணிக்க இயலாது என்பதை மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், நிலத்திற்கேற்ற உணவு மற்றும் வாழ்வியலைக் கடைபிடிக்க வேண்டும்.

இப்போது, உணவுகள் எல்லாம் சத்துகளின் அடிப்படையில் உட்கொள்ளப்படுகின்றன. இது மிக மோசமான நடைமுறை. அமெரிக்காவில் வாழும் மனிதர்களுக்கான உணவும் தமிழ்நாட்டு மனிதர்களுக்கான உணவும் நிச்சயமாக வேறுவேறானவை. சத்துகளின் அடிப்படையில் உணவைப் பகுப்பது, முழுக்க முழுக்க வணிக நோக்கங்களுக்கானது. ஒருபக்கம் உணவுப் பொருட்கள் விற்பனை, மறுபக்கம் இந்த உணவுகளால் உருவாகும் நோய்களுக்கான மருத்துவ விற்பனை என சமகாலச் சூழல் சதிவலைகளால் பின்னப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலம் தாண்டிய உணவுகளை உட்கொள்வதால், ஆற்றல் சீர்கேடுகள் உருவாகின்றன. இப்போதைய உணவுப் பழக்கங்கள் நிலத்திற்கு ஒவ்வாதவையாக மாறியுள்ளன. இதனால், உடலின் உள் ஆற்றல்கள் மிகையாக செலவழிக்கப்படுகின்றன. கோதுமையைச் செரிப்பது அது விளையும் நிலத்தில் வாழும் உடல்களுக்கு எளிதானது. தமிழகம் போன்ற நிலங்களில் வாழ்வோருக்கு அதே கோதுமையைச் செரிமானம் செய்ய, உடல்கள் கடினப் பணி செய்ய வேண்டும். குறிப்பாக, அதிகமான வெப்ப ஆற்றலைச் செலவழித்துத்தான் கோதுமையைத் தமிழகத்து உடல்கள் செரிக்க வேண்டியுள்ளது. இதேபோல ஒவ்வொரு உணவு வகையையும் பட்டியலிடுங்கள். அயல் உணவுகளின் எண்ணிக்கை, நிறுவனங்களால் தயாரிக்கப்படும் உணவுகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சாக்லெட், ஐஸ்க்ரீம் ஆகிய இரண்டை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் இவ்விரு உணவுகளுக்காகவும் உடல் வெளிப்படுத்தும் வெப்ப ஆற்றல் மிக அதிகமானது. ஒவ்வொரு முறை ஐஸ்க்ரீம் உண்ணும்போதும் அதன் மிகைக் குளிர்ச்சியைச் சமாளித்து சீரான வெப்பநிலையை உருவாக்குவதற்காக உடல் தன்னை வெப்பமாக்கிக் கொள்கிறது. இந்த வெப்பம், உடலுக்குத் தேவையற்ற கூடுதலானது மட்டுமல்ல உடலின் உள்ளுறுப்புகளின் பருவநிலையைச் சிதைப்பதுமாகும்.
இவ்வாறான திடீர் வெப்ப உருவாக்கங்களின்போது நுரையீரல் மிக அதிகமாக வெப்பமடைகிறது. ஏனெனில், உடலின் குளிர்ச்சியைப் பராமரிக்கும் பணியில் நுரையீரலுக்குத்தான் முதன்மைப் பங்கு உள்ளது. நுரையீரல்தான் உடலின் மரம். புறத்தில் உள்ள மரங்களின் மூச்சுக் காற்றை உள்வாங்கும் நுரையீரல், உடலின் அகத்தில் மரங்களின் பணியைத்தான் முதன்மையாகச் செய்கிறது.
உணவு மற்றும் பழக்கவழக்கங்களால் உடலின் வெப்பம் செயற்கையாக அதிகமாகும்போது நுரையீரல் சூடாகி, ஒட்டுமொத்த உடலின் பருவநிலையையும் மாற்றிவிடுகிறது. இதனால், கல்லீரல், கருப்பை, விந்துப் பை, சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் தமது இயல்பான பருவநிலையை இழக்கின்றன. இந்த நிலை நீடித்தால் உடலின் செயல்பாடுகள் முடங்கிப் போகும். மூளை நரம்புகளின் திடீர் செயலிழப்பிற்கும் கூட இவ்வாறான மிகை வெப்பம் ஒரு காரணம்.

இந்த நிலையைச் சமாளிப்பதற்காக, உடலின் செல்களில் இருக்கும் நீர்மம் உடனடியாக வெளியேற்றப்படுகிறது. இந்த நீர்மம், உடலின் கோடானு கோடி செல்களிலும் உறைந்திருப்பதுதான். வியர்வை, கோழையாக வெளியேறும் எச்சில், அதிகமான சிறுநீர் அகிய மூன்றும் இந்த நீர்ம வெளியேற்றத்தில் முதன்மையானவை. சளி வெளியேற்றம், தும்மல், மூச்சிரைப்பு, மாதவிலக்குச் சீரின்மை (அடிக்கடி உதிரம் தேங்கிவிடுதல்), உடலுறவு உறுப்புகளில் சோர்வு ஆகியவை இந்த நிலையின் வெளிப்பாடுகளில் முதன்மையானவை. மூச்சிரைப்பு, தோல் தொல்லைகள், விந்தணுக்களின் உயிர்த்தன்மைக் குறைபாடு, உடலின் உள்ளும் புறமும் உருவாகும் கட்டிகள் ஆகியவை இச்சிக்கலின் நீண்டகால விளைவுகளில் முதன்மையானவை.
மீண்டும் ஒரு கருத்தினை நினைவூட்ட விரும்புகிறேன். இவை யாவும் உடலின் இயற்கையான செயல்பாடுகளின் விளைவுகள் அல்ல. மாறாக, செயற்கையான உணவு மற்றும் பழக்கங்களால் உருவாகும் எதிர்ச் சுழல் விளைவுகள்.

இப்போதுள்ள உணவுப் பழக்கங்களின் பெரும்பாலானவை இவ்வாறான உடல் வெப்பத்தைத் தூண்டக் கூடியவைதான். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட எல்லா உணவுகளும் உடல் வெப்பத்தைத் தூண்டுபவைதான். நிறுவனத் தயாரிப்புகள் அனைத்தும் உடலின் உள் சூட்டினைச் செயற்கையாக அதிகரிக்கச் செய்பவைதான்.

இதன் விளைவுகளைத்தான் இப்போதைய சமூகம் பல்வேறு நோய்களாக அனுபவிக்கிறது. அதாவது ஒவ்வொரு நாளும் உடலுக்குள் செலுத்தப்படும் முறையற்ற உணவுகள், மருந்துகள் ஆகியவை சேர்ந்து உடலின் இயல்பான பருவநிலையை மாற்றிக்கொண்டுள்ளன. நுரையீரல் வெப்பம் மிகுந்துகொண்டுள்ளது.

இவை தவிர காற்று மாசுபாட்டின் அளவும் தீவிரமும் கணக்கிலடங்காத நிலைக்குச் சென்றுவிட்டது. மாநகரங்களில் வீசும் காற்றில் கரிமம் மிகுந்துவிட்டதால், நுரையீரல் கொதித்துக்கொண்டுள்ளது. குளிர்சாதனப் பயன்பாடும் உடல் வெப்பத்தை மிக அதிகமாகத் தூண்டுகிறது. இன்னும் ஏராளமான காரணிகள் இதுபோல உள்ளன.

உடலின் செயற்கை வெப்பத்தைக் குறைக்க செல்கள் வெளியேற்றும் நீர்மம் தொடர்ந்து வெளியேறினால், அது செல்களின் இயக்கத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.

இப்போதைய நிலையில் மிகப் பெரும்பாலானோருக்குச் சளி பாதிப்பு இருப்பதை என்னால் காண முடிகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, கடந்த ஆண்டு மழைக்கு முன் இருந்ததைக் காட்டிலும் இப்போது சளியின் தாக்கம் மிக மிக அதிகமாக உள்ளது.

கடந்த மழைக் காலம் நமது உடல்களில் முக்கியமான மாறுதலைச் செய்துவிட்டுச் சென்றுள்ளது. பெரும்பாலான உடல்களைக் குளிர்ச்சிமிக்கதாக மாற்றிவிட்டது அது. இன்னும் சில காலத்தில் குழந்தைப் பேறு குறைவதற்கான சூழல் உருவாகியுள்ளது என்பது என் கருத்து. ஏனெனில் இப்போதைய உடல்கள் மிகுதியாகக் குளிர்ந்துகொண்டுள்ளன.

உணவுப் பழக்கங்களும் வாழ்க்கை முறைகளும் இந்தக் குளிர்ச்சி நிலையை மேலும் மேலும் தூண்டுவனவாக உள்ளன. வெப்பமூட்டும் வகையிலான உணவுகளை உட்கொண்டு, உடலின் எதிர்ச் சுழலியக்கத்தைத் தூண்டி உடலைக் குளிர்ச்சியடையச் செய்வது இன்றைய சமூகத்தின் அன்றாடமாகிவிட்டது.

இக்காலத்துக் குழந்தைகள், சிறுவர் வாழ்க்கைமுறையில் தீய விளைவுகளைத் தரும் உணவுகள் மலிந்துகிடக்கின்றன. இரவு கண்விழித்தல், நெடுநேரம் செல்பேசிகள் மற்றும் கணினி விளையாட்டுகளில் ஈடுபடுதல் ஆகியவையும் உடலின் வெப்பத்தைத் தேவைக்கதிகமாக அதிகரிக்கும் செயல்கள்.

இதனால்தான், சிறுவர்களின் சளித் தொல்லைகள் அடுத்தடுத்த நிலைக்கு வளர்ந்துகொண்டே இருக்கின்றன.

எந்த முறையில் மருத்துவம் பார்த்தாலும், மேற்கண்ட வாழ்வியல் கொள்கைகளைப் புரிந்துகொள்ளாமல் விடுதலை அடைய முடியாது என்பது என் அழுத்தமான கருத்து.

புற்றுநோய் என்றழைக்கப்படும் உடல் தொல்லைக்கும் இந்த நிலைக்கும் நேரடியான உறவு உண்டு என்பதை மருத்துவம் அறிந்தவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும். உடலின் உள் சூடு மிகுந்து, செல்களின் இயக்கத்தில் சீரற்ற நிலை உருவானால் புற்று உருவாகும். இப்போது தேவை வாழ்வியல் கொள்கைதானே தவிர, வித விதமான மருத்துவமுறைகள் அல்ல. ஏனெனில், வாழ்வியல் கொள்கையை இழந்ததால் உருவாகும் உடல் தொல்லை அது.
உடலின் பருவநிலை இயல்பாக இருந்தால் எந்த உடல் தொல்லையும் எளிதில் விலகும்.

  • நமது மரபுவழி உணவுப் பழக்கங்களைக் கடைபிடித்தல்
  • இரவில் இளைப்பாறுதல்
  • பசிக்கும்போது மட்டும் உண்ணுதல்
  • தாகத்திற்காக மட்டும் நீர் அருந்துதல்
  • அன்றாடம் தண்ணீரில் குளித்தல் ( வெந்நீரில் குளிக்கக் கூடாது)
  • குளிர்சாதனப் பெட்டிகளைத் தவிர்த்தல்
  • மரங்கள் சூழ்ந்த இடங்களில் வாழ்தல்
ஆகியவை உடனடியாகக் கடைபிடிக்க வேண்டிய செயல்முறைகள்.
இவற்றை எல்லாம் செய்தால், சுற்றுச் சூழலில் உள்ள மாசுபாடுகள் குறையத் துவங்கும். இயன்றோர் எல்லோரும் மாநகரங்களை விட்டு அவரவர் ஊர்களுக்குத் திரும்புகள். இயலாதோர் அவ்வாறான வாழ்க்கை வேண்டும் என விரும்புங்கள். நியாயமான எல்லா விருப்பங்களும் இறையால் நிறைவேற்றப்படும்.

பதிவு செய்த நாள் : 02/08/2016

No comments:

Post a Comment