Tuesday, 7 February 2017

நான் கேட்ட சொற்களிலிருந்து…

நான் கேட்ட சொற்களிலிருந்து…
ம.செந்தமிழன்

உங்கள் அடையாளங்களை என்மீது சுமத்தாதிருங்கள்
எல்லா அடையாளங்களும் எனதுதான்
நீங்கள் தைக்கும் ஆடைகளை என்மீது திணிக்காதிருங்கள்
உங்கள் ஆடைகளும் நான், நிர்வாணமும் நான்
உணவின் வகைகளோடு என்னை இணைக்காதிருங்கள்
உணவும் நானே உண்பதும் நானே
எல்லா உயிர்களுக்குமான மழையை வெயிலை காற்றை
நான் அனுப்புகிறேன்
எல்லா மனிதர்களுக்குமான ஒரே ஒரு கொள்கையைக்கூட
உங்களால் உருவாக்க முடியவில்லை
நிராகரிப்போரை வாட்டுவதும்
ஆராதிப்போரைப் போற்றுவதும் உங்கள் இயல்பு
எனக்கு மலமும் மலரும் ஒன்றுதான்
என்பொருட்டுப் போரிடாதிருங்கள்
நான் குருதி குடித்து தாகம் தணிப்பதில்லை
குருதியும் நானே தாகமும் நானே
உங்கள் பேராசைக் கற்பனைகளுக்கு
வரம் தரும் அடிமையாக என்னை எண்ணாதிருங்கள்
உங்கள் வழிபாட்டுத் தலங்கள் என்னை விற்பனை செய்கின்றன
உங்கள் சடங்குகள் என்னை ஏலம் விடுகின்றன
உங்கள் வேண்டுதல்கள் என்னை ஏளனம் செய்கின்றன
உங்களுக்கு சுதந்திரம் வழங்கினேன்
நீங்களோ என்னை சிலைக்குள் சிறை வைத்தீர்கள்
சமாதானம் நிலைபெற வேண்டுமென்பதற்காக
என்பிள்ளைகளை அனுப்பினேன்
நீங்களோ அவர்கள் பேரால் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்
புனிதத் தலங்களில் என்னைத் தேடுகிறீர்கள்
அங்குள்ள செருப்பு அலமாரிகளில்
நான் படுத்திருக்கிறேன்.
என்பேரில் விழாக்கள் நடத்துகிறீர்கள்
நீங்கள் வீசும் எச்சில் இலைகளில்
நான் பசியாறிக் கொண்டிருக்கிறேன்.
அழுக்கடைந்த நகரச் சந்துகளில் ஓடும்
மூத்திரத்தை நான் பருகுகிறேன்
சுடுகாட்டுச் சாம்பலில் ஒப்பனை செய்துகொள்கிறேன்
எனது பெருமைகளைப் பேசும்
உங்கள்அரங்குகளுக்கு நான் வருவதில்லை
தினைமுனையைக் கூட எடுத்துச் செல்லாத செல்வந்தரின்
பிணத்தில் நெளியும் புழுக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன்
சாக்கடை நீரில் முகம் கழுவுகிறேன்
பன்றியின் கால்குளம்புகளில் அழுக்காக இருக்கிறேன்
அன்னத்தின் அலகில் சொட்டும் அமுதாயிருக்கிறேன்
நான் யாதுமாயிருக்கிறேன்
எனக்கென ஏதுமற்றிருக்கிறேன்
அண்டமும் எனது
உங்கள் பிண்டமும் எனது
ஆடாதிருங்கள்
எனது ஆட்டம் அண்டங்களை அசைக்கவல்லது
சண்டையிடாதிருங்கள்
எனது போர்களில் கோள்களும் அழிந்துபோகின்றன
ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொள்ளாதிருங்கள்
நான் மழையைத் தாழ்த்தினால் நிலம் மூழ்கும்
காற்றைத் தாழ்த்தினால் கடல் பொங்கும்
வெயிலைத் தாழ்த்தினால் புவி பொசுங்கும்
இறுமாப்பு கொள்ளாதிருங்கள்
எனது பெருமைகள் பால்வெளிகளில் எழுதப்பட்டிருக்கின்றன
அதிகாரம் செய்யாதிருங்கள்
எனது அதிகாரம் அணுவின் அசைவை நிறுத்தவல்லது
இறுதியாக,
ஏன் இவ்வளவு துன்பம் என அரற்றாதிருங்கள்
உங்களைத் தாங்குவதால் துடிக்கும்
உயிர்களின் அரற்றல் இன்னும் மோசமாக உள்ளது
துன்பம் தீர்க்க வரச் சொல்லிக் கதறாதிருங்கள்
உங்கள் துன்பம் தீர்ப்பதும் உங்களைத் தீர்ப்பதும் ஒன்றுதான்
ஏனெனில் துன்பங்களைப் படைத்து காத்து வருவது நீங்கள்தான்

பதிவு செய்த நாள் : 04/11/2015

No comments:

Post a Comment