Tuesday, 7 February 2017

அழிந்த நாட்டின் ஆபாசப் பாடல்!

அழிந்த நாட்டின் ஆபாசப் பாடல்!
- எதிர்காலத்தில் எழுதப்பட்ட கதை
ம.செந்தமிழன்
முன்னொரு காலத்தில் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டுக்கு என்ன பெயர் என்பதைக் கூட இப்போது தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்த நாட்டில் எப்படிப்பட்ட மக்கள் வாழ்ந்தனர், என்ன தொழில்கள் செய்யப்பட்டன போன்ற தகவல்கள் கூட கிடைக்கவில்லை. அந்த நாடு அவ்வளவு மோசமாக அழிந்துபோனது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் அந்த நாட்டில் மக்கள் வாழ்ந்த வீடு ஒன்று கண்டறியப்பட்டது. அதில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையை திருமணம் ஆனவர்கள் மட்டுமே படிக்க வேண்டும். சிறுவர்களோ, பதின்வயது இளைஞர்களோ கண்டிப்பாகப் படிக்கக் கூடாது.

புதைந்து கிடந்த அந்த வீட்டில் வசித்தவர் எழுதி வைத்த பதிவுகளை அடிப்படையாக வைத்து ஓரளவு அந்தக் காலத்துச் சமூகம் எப்படி வாழ்ந்தது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

அந்த நாட்டில் வாழ்ந்த மனிதர்கள் பல்வேறு முகங்களை உடையவர்களாக இருந்தனர். இதுதான் நம்மை வியக்க வைக்கும் கண்டுபிடிப்பாக உள்ளது.
ஒரு மனிதருக்கு ஒரு முகம் என்ற இயற்கைக்கு மாறாக, அக்கால மனிதர்களுக்குப் பல தலைகளும் முகங்களும் இருந்திருக்கின்றன.
அவர்களது ஒருமுகம், ஒழுக்கத்தைப் பற்றிப் பேசும் , இன்னொரு முகம் பாலுறவுக் காட்சிகளை வெட்ட வெளியில் ஒட்டப்பட்ட விளம்பரங்களில் கண்டு மகிழும், மற்றொரு முகம் குழந்தைகளிடம் ஒழுக்கத்தை வலியுறுத்தும், வேறொரு முகம் குழந்தைகளுடன் அமர்ந்து உடலுறவுக்கு ஒப்பான பாலுறவுக் காட்சிகளை வேடிக்கை பார்க்கும்.
அந்த மக்கள் தமது சுய அறிவைக் காட்டிலும் தொலைக்காட்சி, பத்திரிகைகள், திரைப்படம் ஆகியவற்றைச் சார்ந்து வாழ்ந்தனர்.

தொலைக்காட்சிகள் எனப்படுபவை, முழுக்க முழுக்க நடிப்புக் கலையை வளர்த்த சாதனங்களாக இருந்தன. ஒரு நிகழ்ச்சியில் பெண்களை இழிவு செய்த இளைஞர்களைப் பற்றிய செய்திகள் ஒளிபரப்பாகும். மற்றொரு நிகழ்ச்சியில் தொடையும் இடையும் தெரியும் ஆடைகளுடன் பெண்கள் தோன்றி உரையாடுவார்கள்.

ஒரு நிகழ்ச்சி, ’பெண்களுக்கு எதிரான வன்முறை’ என்ற வார்த்தையை வணிகம் செய்யும். அந்த நிகழ்ச்சியில் அந்தத் துறை சார்ந்த வல்லுனர்கள் வாதிடுவார்கள். மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறுமிகள் கூட பாலியல் அசைவுகளுடன் கூடிய பாடல்களைப் பாடுவார்கள், ஆடுவார்கள்.
அந்தக் காலத்து மக்கள் இவை எல்லாவற்றையும் களிப்புடன் கண்டனர்.
இவ்வாறான காட்சிகளைக் காணும்போது, ‘ஒழுக்கம்’ எனப் பெயரிடப்பட்ட தலையைக் கழட்டி வைத்துவிடுவார்களாம்.

அந்த நாட்டில் இருந்த திரைப்படங்கள் ‘ஊதாரித்தனத்தை’ வளர்த்தெடுத்ததாக இந்தக் குறிப்பை எழுதியவர் குறிப்பிட்டுள்ளார். ‘ஊதாரித்தனம்’ என்ற வார்த்தைக்கான அர்த்தம் நமது காலத்தில் ஒருவருக்கும் தெரியவில்லை.
மேலும் அந்தக் காலத்து திரைப்படங்களில் பெரும்பாலானவை, ‘கொச்சையான, வக்கிரமான, அருவருப்பான’ கதாநாயகர்களையும் நாயகிகளையும் போற்றி வளர்த்தனவாம். மேற்கண்ட மூன்று சொற்களுக்கும் கூட நமது காலத்தில் விளக்கம் கிடைக்கவில்லை.
பெண்களை அவர்களது பிறப்புறுப்பை வைத்து அழைத்து வசைபாடுவது பொதுவாகவே அந்தக் காலத்து ஆண்களின் வழக்கமாக இருந்ததாம். அந்த உறுப்பை பல்வேறு வகைகளில் சுற்றி வளைத்து இழிவாகப் பேசுவதும் அந்த நாட்டு ஆண்களின் குணம் என்கிறது அந்த ஆய்வு.

மனிதர்களுக்கு ஒரு தலை மட்டுமே இருக்க முடியும் என்ற நமது கருத்து, இப்போது கிடைத்துள்ள ஆய்வில் பொய்யாகியுள்ளது. பலதலைகள் இருந்ததால், இந்த வேறுபட்ட கருத்துகளைக்கூட அவர்கள் மிக எளிதாக உள்வாங்கிக் கொண்டார்களாம்.

ஒரு திரைப்பட நாயகன் பெண்களின் பாலுறுப்பைக் கொச்சைப்படுத்திப் பாடிய பாடல் ஒன்று மிகவும் பிரபலமடைந்ததாகவும், அந்தப் பாடல் வெளியானபோதும் மக்களின் பல முகங்களும் அப்பாடலை வெவ்வேறு விதமாக எதிர்கொண்டதாகவும் ஒரு குறிப்பு பதிவாகியுள்ளது.

அந்தப் பாடல் வெளியானபோது, மக்களின் ஒரு முகம் அதைக் கடுமையாக எதிர்த்தது, மற்றொரு முகத்தில் இருந்த காதுகள் அப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டன. அப்பாடல் மிகக் குறுகிய காலத்தில் பல இலட்சம் மக்களால் கேட்கப்பட்டது என்பதற்கான ஆதாரமும் நமக்குக் கிடைத்துள்ளது. அந்தப் பாடல் வரிகளைப் படித்துப் பார்த்த நமது ஆய்வாளர்கள் அவற்றில் உள்ள பெரும்பாலான வார்த்தைகளுக்கு அர்த்தமே தெரியவில்லை என்கின்றனர்.

அந்தப் பாடலுக்கு இசையமைத்தவன் ஓர் இளைஞன் என்றும் அவன் மிகவும் ஒழுக்கமான குடும்பப் பின்புலத்தில் வளர்க்கப்பட்டவன் என்றும், பதிவுகள் கூறுகின்றன. அந்தப் பாடலைப் பாடியவனது தந்தை மிக மிக ‘ஒழுக்கமானவர்’ என்று மக்களால் பாராட்டப்பட்டவராம். அந்தக் காலத்து மக்கள் ‘ஒழுக்கம்’ என எதைக் குறிப்பிட்டார்கள் என்பது புரியவில்லை.

மேலும் அந்தப் பாடலை எழுதிப் பாடிய நாயகனும் அதை இசைத்தவனும் அந்தக் காலத்தில் மிக உயர்ந்த பள்ளிகளில் படித்தவர்களாம். ஆங்கிலம் எனும் ஒரு மொழியையும் சமஸ்கிருதம் எனும் ஒரு மொழியையும், இந்தி எனும் ஒரு மொழியையும் படித்தால் மிக உயர்ந்த அறிவு கிடைக்கும் என்பது அக்கால மக்களின் நம்பிக்கையாக இருந்தது. இந்த இருவரும் அந்த மொழிகளையெல்லாம் கற்றுத் தந்த பள்ளிகளில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆபாசப் பாடல்’ என்று இந்தப் பாடல் அழைக்கப்பட்டது. ‘ஆபாசம்’ என்றால் என்ன எனத் தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்கின்றனர். இந்தச் சொல்லும் இப்போது வழக்கத்தில் இல்லை.

அந்தக் காலத் திரைப்படங்களில் நடித்த பெரும்பாலான நாயகர்கள் பெண்களின் ஆடைகளை உரிப்பதையும், முலைகளையும் தொடைகளையும் வருடுவதையும் வயது பேதமில்லாமல் மக்கள் வீட்டுக்குள் அமர்ந்து பார்ப்பார்கள் என்ற செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

அப்போது இருந்த சிறுவர்களும் குழந்தைகளும் இவ்வாறான செயல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த இடத்தில் ஒரு முக்கியமான செய்தியைக் குறிப்பிட வேண்டும். அந்தக் காலத்தில் பிறக்கும்போது குழந்தைகளுக்கு ஒரே ஒரு முகம்தான் இருக்கும். அவர்கள் வளர வளர புதிய தலைகள் முளைத்து, தலைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்.

குழந்தைகளும் சிறுவர்களும் ஒரே ஒரு தலையுடன் இருக்கும்போது, பல தலைகள் வளர்ந்த பெரியவர்களின் நடவடிக்கைகளால் வழிநடத்தப்பட்டனர். பெற்றோரின் ஒரு தலை மேற்கண்ட ‘ஆபாசப் பாடல் குறித்து கோபம் அடைந்தது. மற்றொரு தலை, அப்பாடலைப் போன்ற வேறு பல பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தது. வேறொரு தலை, அப்பாடலுக்கு இசையமைத்தவனது மற்ற பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தது. இன்னொரு தலை அப்பாடலைப் பாடியவனது மற்ற நடனங்களை, நடிப்புகளைக் கண்டு களித்தது.
சில குழந்தைகள் அக்காலப் பெரியவர்களிடம் ‘இந்த நாயகனையும் இசையமைப்பாளனையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தால் என்ன?’ எனக் கேட்டபோது, ‘திறமை வேறு, கொள்கை வேறு. ஒரு பாடலில் தவறு செய்தாலும், அவர்களின் திறமையை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்’ என்று பெரியவர்கள் விளக்கம் அளித்தனர். அதே நேரத்தில் அதே பெரியவர்களின் மற்ற முகம், ‘இவனுங்க ---- அறுத்து விடணும். அப்போதான் அடங்குவானுங்க’ என்று பேசிக்கொண்டிருந்தது. (கோடிட்ட இடத்தில் ஆண்குறிக்கான அந்தக் காலத்து வசவுச் சொல் இருந்தது).
குழந்தைகளும் சிறுவர்களும் ‘திறமையுடன் இருந்தால் போதும். எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும்’ என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டனர். ஆக,சிறுவர்களுக்கு திறமை என்று ஒரு தலை, கொள்கை என்று வேறொரு தலை முளைத்தது.

பத்திரிகைகளுக்கும் அக்காலத்தில் எண்ணற்ற முகங்கள் இருந்தன. ‘ஆபாசப் பாடல்’ குறித்த மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த பத்திரிகைகள், மற்றொரு பக்கத்தில் அரைகுறை ஆடையுடன் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆண் பெண் படங்களை வெளியிட்டன.

மேலும், ‘ஆபாசப் பாடல்’ நாயகனின் அடுத்த திரைப்படங்களுக்கான விளம்பரப் பணிகளையும், அந்த நாயகனின் நேர்காணல்களையும் வெளியிட்டு அவனை வளர்த்தெடுக்கும் கடமைகளை அவை செவ்வவே செய்தன.

இசையமைப்பாளனது மற்ற திரைப்பட இசையைப் போற்றித் துதித்து அவனையும் மீண்டு வரச் செய்தன பத்திரிகைகள்.
அக்காலத்துக் குழந்தைகளும் சிறுவர்களும் ஒரு தலையுடன் இருந்தவரைக்கும் இவற்றை எல்லாம் கண்டு நொந்துபோனார்கள். அவர்களுக்கும் பல தலைகளும் முகங்களும் முளைக்கத் துவங்கிய பின்னர் அவர்களுக்கு எல்லாம் பழகிப் போயின.

அந்த நாடும் மக்களும் அழிந்துபோனதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக, அவர்களது தலைகளின் எண்ணிக்கை கூறப்படுகிறது.
இயற்கைக்குப் புறம்பான எந்தச் செயலையும் படைப்பின் ஆற்றல் அனுமதிப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். ஒரு சமூகம் பல முகங்களுடன் இருப்பது இயற்கைக்குப் புறம்பானது அல்லவா.
அந்தக் காலத்தில் பெண்கள் நடத்தப்பட்ட விதம் மிக மோசமானதாக இருந்ததும் இயற்கைக்குப் புறம்பானதுதான் அல்லவா. இந்த இரு செயல்களும் படைப்பின் கோபத்தைத் தூண்டின என்றும், அந்தக் கோபமே அவர்களை அழித்தது என்றும் நமது மூத்தவர்கள் கதையாகக் கூறுவதுண்டு.
அந்தக் காலத்தில் இருந்த வசைச் சொற்களில் மிகப் பெரும்பாலானவை பெண்களின் உடல் உறுப்புகளைக் குறிப்பனவாம். இவ்வளவு மோசமாக பெண்கள் இழிவு செய்யப்படும் நாட்டில் வெள்ளமும் நிலநடுக்கமும் வரத்தான் செய்யும் என்பதை இப்போது நாம் அறிவோம். பாவம், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இது தெரியவில்லை.

‘பெண்களும் இயற்கையும் ஒன்றுதான். இரண்டின் மீதும் ஆதிக்கம் செய்தால் மனிதகுலமே அழிந்துபோகும்’ என்ற வாசகமும் அந்த புதைந்த வீட்டில் இருந்தது. ஆனால், இந்த வாசகத்தைச் சொன்னவர்களை எல்லாம் அந்தக் காலத்து மக்கள் ‘மூடநம்பிகையாளர்கள்’ என்ற வார்த்தையால் இழிவு செய்துள்ளனர்.

பதிவு செய்த நாள்: 24/12/2015

No comments:

Post a Comment