Tuesday, 7 February 2017

தாகம் தணிக்க வாரீர்!

தாகம் தணிக்க வாரீர்!

ம.செந்தமிழன்


சேறும் சகதியுமாகக் கலங்கிக் கிடக்கும் நீரைப் பருகுவதற்காக, காத்து நிற்கும் குழந்தைகளை நேரில் கண்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
இருபது அடி ஆழத்திற்குக் குழி வெட்டி, அதன் கீழே சொட்டு சொட்டாக ஊறிவரும் உப்பு நீரை வரிசையில் நின்று இறைத்துச் செல்லும் மனிதர்களைக் காணும்போது, உங்கள் மனம் என்ன சொல்லும்?
எப்போதாவது ஒருமுறை ஊருக்குள் வந்து செல்லும் குடிநீர் விற்பனை வாகனத்தைக் கண்டதும், கூட்டம் கூட்டமாக ஓடிச் சென்று மோதும் மக்களைப் பார்த்தால் என்ன நினைப்பீர்கள்?
ஒரு குடம் குடிநீர் ஐந்து ரூபாய் விலைக்கு விற்கப்படுவதையும், அந்த நீரும் மணல் வாடையுடன் கலங்கி இருப்பதையும் நேரில் பார்க்கையில் உங்கள் மனசாட்சி எப்படித் துடிக்கும்?
இந்த மக்கள் வாழும் நிலம் நிலம் யாவும் சீமைக் கருவேல மரங்கள் பல்கிப் பெருகிவிட்டதையும், அங்கே இருந்த இயற்கையான புதர்ச் செடிகள் அழிந்தே போய்விட்டதையும் காணும்போது உங்கள் சிந்தையில் எவ்வளவு ஆவேசம் தோன்றும்?

சாக்கடைபோல் தேங்கிக் கிடக்கும் சேற்று நீரில், மயில்கள் நீர் பருகுவதைக் காணும் அவலம் உங்களுக்கு வேண்டாம். நேற்று அந்த அவலத்தையும் நாங்கள் கண்டோம்.
மயில்களின் அழகும் கம்பீரமும் அவற்றை தெய்வத்தின் வாகனமாகச் சித்தரிக்க வைத்தவை. மயில்களைக் கண்டால் பரவசமடைந்து வணங்கும் மனிதர்கள் வாழும் மண் இது. இந்த நிலத்தின் ஒருபகுதியில் மயில் குஞ்சுகள் சீமைக் கருவேல முட்களின் ஊடாக தத்தித் தத்தி வசிக்கின்றன. வயல்களில் பொறுக்குவதற்குக் கூட புழு பூச்சிகள் இல்லை. கொஞ்சமாவது, ஈரம் மண்ணில் இருந்தால்தானே புழுக்கள் வாழும்!

இராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், மழை வரும் என்ற நம்பிக்கையில், வயல்களில் விதை தூவி விடுவார்கள். அதன் பின்னர் வரும் மழையில்தான் நெற்பயிர்கள் முளைக்கும். மழைக்குப் பின் விதைப்பவர்களை அறிந்திருப்பீர்கள். மழைக்கும் முன் விதைப்பவர்களை அங்கு நாங்கள் கண்டோம்.
இம்முறை, இதுவரை மூன்று முறை விதைக்கப்பட்டுவிட்டது. ஒருமுறையும் மழை வரவில்லை. வயல்கள் காய்ந்து கிடக்கின்றன. எல்லா வயல்களிலும் நெல் விதைகள் உயிர் நீருக்காகக் காத்துக் கிடக்கின்றன. சீமைக் கருவேல மரங்களோ மீதமிருக்கும் ஈரத்தையும் உறிஞ்சி செழிக்கின்றன.

இணைப்பில் உள்ள முதல் படத்தைப் பாருங்கள். ஒரு குழியில் சிறிதளவு நீர் ஊறுகிறது. மக்கள் அந்த நீரைச் சேறுடன் இறைக்கிறார்கள். அதுதான் அவர்களின் ஒரே குடிநீர் ஆதாரம். அந்தக் குழிக்குள் சீமைக் கருவேல மரத்தின் வேர்கள் நீண்டு கொண்டுள்ளன. தாகம் தணிக்க ஊறும் அந்தக் கலங்கிய நீரை உறிஞ்சுவதிலும் சீமைக் கருவேல மரங்கள் முந்துகின்றன.

நேற்று நானும் கலாநிதியும் அப்பகுதிகளுக்குச் சென்றிருந்தோம். இன்னும் ஒரு வாரத்தில் பணிகளைத் துவக்க இருக்கிறோம்.

’இராமநாதபுரம் பகுதிகளில் நல்ல மழை பெய்யட்டும்’ என வேண்டுங்கள். உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லையெனில், ‘அங்கே நல்ல மழை பெய்ய வேண்டும்’ என மனதால் விரும்புங்கள். எல்லாம் ஒன்றுதான்.

நாம் ஒன்றிணைந்து அம்மக்களில் சிலருக்கேனும் நல்ல குடிநீரை உறுதி செய்ய வேண்டும். அந்நீரை அவர்கள் சுகமாகப் பருக வேண்டும். அக்காட்சியைக் காண்பதில் நான் பெருவிருப்பத்துடன் இருக்கிறேன். என் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும் என் இறை, இவ்விருப்பத்தையும் நிறைவேற்றட்டும்!

இப்போது பெய்யப் போகும் மழையைச் சேகரித்து, வெகு சிலருக்காவது குடிநீராக மாற்றித் தர செம்மை அகல் திட்டத்தில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.
.............................

இராமநாதபுரம் பணிகளுக்கென நன்கொடையைப் பணமாக அனுப்ப வேண்டாம். எந்த வங்கிக் கணக்கையும் நாங்கள் முன்வைக்கவில்லை. இப்பணியில் ஈடுபட விரும்புவோர் செய்ய வேண்டியவை:

1. முதலில் உங்களைத் தன்னார்வராக இணைத்துக்கொள்ளுங்கள்.

2. எந்தக் காலகட்டத்தில் பணிகள் நடக்கும் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பார்கள். அந்தக் காலத்தில் எத்தனை நாட்கள் உங்களால் அங்கு வர முடியும் என்பதைத் தெரிவியுங்கள்.

3. பணிகள் நிகழும் கிராமத்திற்கு வந்து ஓரிரு நாட்களாவது தங்கி பணியாற்றுங்கள்.

4. கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்களை நீங்கள் வரும்போது தெரிவிப்போம். அவற்றுக்கான தொகையை அங்கே வந்து செலுத்துங்கள். அல்லது நீங்களே பொருட்களை வாங்கி அனுப்புங்கள்.

5. நேரில் வரவே இயலாதவர்கள், ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசி, தேவையான பொருட்களை வாங்கித் தருவதற்கு ஒத்துழைப்பு நல்குங்கள்.
6. இயன்றவரைக்கும் களப்பணியாற்ற முன்வாருங்கள்.

இம்மழைக்காலத்திற்குப் பின்னர் நாம் பணியாற்றும் கிராம மக்கள், குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் நிம்மதியாக தாகம் தணிக்க இணைவோம் வாருங்கள்.
செம்மை அகல் பணிகள் நிறைவேற்றப்பட்ட பின்னர், இத்திட்டத்தை முன்மாதிரியாகக்கொண்டு வேறுபல அறச் சிந்தனையாளர்களும் இக்களத்தில் இறங்க வேண்டும். வாய்ப்புள்ள அனைவரும் ஒன்றுகூடினால், வறட்சியில் வாடும் உயிர்களுக்கு மழைநீர் வார்க்க முடியும்.

ஒருங்கிணைப்பாளர்கள்:
இராஜேஸ்வர்: 97915 12095
பாலாஜி: 96770 73007
https://www.facebook.com/photo.php?fbid=10208956151678787&set=a.1135580027456.2020908.1165998916&type=3&theater

Published on : 28/10/2016

No comments:

Post a Comment