Monday, 6 February 2017

வெண்மைப் புரட்சி

வெண்மைப் புரட்சி


வெண்மைப் புரட்சி என்ற அழகான பெயருக்குப் பின்னால் மறைந்திருக்கும் குரூரம் இது. ஆனந்த விகடனில் வெளியாகும் எனது தொடருக்காக, ஹாசிப் கான் வரைந்த இவ்வோவியத்தில் துளியும் மிகை இல்லை. கன்றுகளின் வயிற்றில் அடித்துவிட்டு, வெறும் எந்திரத்தை வைத்து பால் உறிஞ்சுவதுதான் இப்போதைய ‘பால் உற்பத்தித் தொழில்’.

பசுக்களின் கழுத்தில் ஊசி குத்தி, குருதியைப் பாலாகத் திரித்துத்தான் பால் நிறுவனங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன.

பாலில் கால்சியம் இருக்கிறதா, புரதம் இருக்கிறதா, வைட்டமின் இருக்கிறதா எனக் கேட்பவர்களே, எனக்குத் தெரிந்த ஒன்று அதில் உள்ளது. மனிதப் பேராசை எனும் சூனியம் அந்தப் பாலில் உள்ளது. 

சக உயிரினத்தின் உடலையும் உயிரையும் குறித்த அக்கறையே இல்லாமல், சுரண்டிச் சுரண்டி பழகிய நவீன மனிதர்களுக்கு பசுவின் வாழ்க்கையைச் சுரண்டுவதில் எந்தக் குற்ற உணர்ச்சியும் இருக்கப் போவதில்லை. திருந்துவதைப் பற்றிய சிந்தனையே இல்லாதவர்கள் மேலும் மேலும் பசுக்களையும் காளைகளையும் அவற்றின் கன்றுகளையும் துன்புறுத்தி மகிழட்டும்.

’எனக்கு மனசாட்சி உறுத்துகிறது’ என்று எண்ணுவோருக்கான சில வழிகாட்டுதல்களை முன்வைக்கிறேன்.
1. நிறுவனங்களின் பால் பொருட்களை முற்றிலும் நிராகரியுங்கள்.
2. நாட்டுப் பசுக்களைப் போற்றிப் பாதுகாக்க உங்களால் இயன்றவற்றை எல்லாம் செய்யுங்கள்.
3. நாட்டுக் காளைகளை வாங்கிப் பாதுகாத்திடுங்கள். உங்களிடம் நிலம் இல்லையெனில் சரியான வேளாண் பண்ணைகளுக்குக் காளைகளை அன்பளிப்பாகக் கொடுங்கள். வணிக நோக்கில் பண்ணை வைப்போரிடம் இவற்றைக் கொடுத்து மீண்டும் ஏமாறாதிருங்கள்.
4. சீமைப் பசுக்களையும் காளைகளையும் கூட பாதுகாத்திடுங்கள். அவையும் உயிர்கள்தான். அதேவேளை, சினை பிடிக்க ஊசி குத்தும் குரூரத்திற்கு எதிராகச் செயலாற்றுங்கள். இதைச் செய்தாலே இன்னும் சில ஆண்டுகளில் சீமை மாடுகளின் எண்ணிக்கை குறையும்.
5. உள்ளூர் பால்காரர்களிடம் மட்டுமே பால் வாங்குங்கள். அவர்களும் ஊசி குத்தி பால் கறந்தால், அப்பாலை நிராகரியுங்கள்.
6. பொதுவாகவே, பால் பருகும் வழக்கத்தை நிறுத்துங்கள். தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகியவைதான் சிறந்த உணவுகள். பால் மட்டும் அருந்துவது நம் மரபில் மிகவும் குறைவான வழக்கம்.
7. பாக்கெட் பால் வகைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள்.
8. இவற்றிலும் தனியார் பால் பாக்கெட்டுகளை முற்றிலும் நிராகரியுங்கள். நிலைமை மாறும்வரை, ஆவின் மட்டும் வாங்குங்கள்.
9. தயிருக்கு வீட்டிலேயே உறை ஊற்றுங்கள்.
10. கடைகளில் தேநீர் பருகும் வழக்கம் இருந்தால், பாலில்லா தேநீருக்கு மாறுங்கள்.
Senthamizhan Maniarasan
 

No comments:

Post a Comment