Friday, 10 February 2017

விரைவில் வெளியாகவுள்ள ’மெய்’ நூலின் சில பகுதிகள்:

விரைவில் வெளியாகவுள்ள ’மெய்’ நூலின் சில பகுதிகள்:

ம.செந்தமிழன்

 

“எப்போதும் உங்கள் உடலிலிருந்து கல்வியைத் துவங்குங்கள். இறைமை குறித்த எல்லாப் பாடங்களுக்குமான விளக்கம், நமது உடல்களில் உள்ளன. உடலின் ஒரேஒரு செல்லைப் பற்றிப் புரிந்துகொண்டால், இறையின் நுட்பத்தை அறிந்துகொள்கிறீர்கள். உடலின் முழுமையை உணர்ந்துகொண்டால், இறையின் பெருந்தோற்றத்தைத் தெரிந்துகொள்கிறீர்கள். ‘அண்டமே பிண்டம்’ என்று ஆசான் திருமூலர் உரைத்த மந்திரம் காலத்தில் நிலைக்கும் அருமைபெற்றது.
நமது இந்த உரையாடலை, உடலிலிருந்தே துவங்குவோம்.
பசி எப்படி உருவாகிறது? பசியை உருவாக்கிக் காட்டுவதற்கு வல்லமை படைத்த மனிதர்கள் இருக்கிறார்களா? அது தானாகத்தான் உருவாகும். தாகம் எப்படி உருவாகிறது? அது தானாகத்தான் உருவாகிறது. சிறுநீர் எப்படி கழிக்கப்படுகிறது? அது தானாகத்தான் வெளியேறும். மலம் எப்படி வெளியேறும்? அது தானாகத்தான் வெளியேறும். சுவாசம் எப்படி நடக்கும்? அது தானாகத்தான் நடக்கும். எல்லாம் தானாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன, நாமாக எதுவும் செய்யவில்லை. நாமாக எதுவும் செய்யமுடியாது. நாமாக என்ன செய்ய முடியும் என்றால், கருவிகளை உற்பத்தி செய்யமுடியும். அவை அழிந்து போவதையும், அந்தக் கருவிகள் நம்மை அழிப்பதையும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். கருவிகள் உற்பத்தி செய்வதைத் தவிர மனிதர்களுக்கு வேறு எந்த உரிமையும், குறிப்பாக உடலின் மீது இயற்கையின் அங்கங்கள் மீது துளி உரிமை கூட படைப்பாற்றல் வழங்கவில்லை.
இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டால், ’நான் உங்களுக்கு மருத்துவம் பார்த்தேன்’ என்கிற கர்வம் எந்த மருத்துவருக்கும் இருக்காது. ஏனென்றால் யாரும் யாருக்கும் மருத்துவம் பார்க்க முடியாது. ’என் மருத்துவத்தின் வழியாகத்தான், நான் தொட்டதினால்தான் அவர் குணம் அடைந்தார்’ என்று யாராவது பேசினால், யாராவது சிந்தித்தால் அவர் உண்மையின் ஒளியை தரிசிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் உண்மை ஒளியை தரிசித்தவர்களுக்கும், அதற்குச் சாட்சியாக இருப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும், ’இவரை நான் நலப்படுத்தவில்லை, நலப்படுத்தும் அதிகாரம் எனக்குக் கிடையாது. ஏன் என்னுடைய மூச்சுக்காற்று மீதே எனக்கு அதிகாரம் கிடையாது. அது தாமாக நிகழ்ந்தால்தான் உண்டு. என் உடலின் மீதே எனக்கு அதிகாரம் இல்லாத பொழுது சக மனிதரின் உடலின் மீது எனக்கு என்ன அதிகாரம் இருக்க முடியும்’ என்பது உண்மையின் ஒளி தரிசித்தவர்களுக்கு, ஒளியின் சாட்சிகளுக்கு நன்றாகத் தெரியும்” 


                                                                       ………..


”ஒரு தரிசு நிலத்தில் ஓர் உழவன் இரசாயன உரங்களை எல்லாம் கொட்டி அதில் இருக்கக் கூடிய உயிர் ஆற்றலைச் சிதைக்கும் பொழுது அந்தத் தோட்டத்திற்கு இயற்கை நன்மைகள் வருகை தர மறுக்கின்றன. அங்கே கொக்குகள் வருவதில்லை, நாரைகள் வருவதில்லை. ஏனெனில் அந்த நிலத்தில் தவளைகள், வண்டுகள், மண்புழுக்கள் படுகொலை செய்யப்படுகின்றன. அங்கே இயற்கையின் அங்கங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்த உழவர் இயற்கையையும் அதன் உன்னதங்களையும் நம்பவில்லை. படைப்பின் அற்புதங்களை இவர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக இவர், வேளாண்மைத் துறையில் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் தொழில்நுட்பங்களையும் நம்புகிறார்.
படைப்பாற்றலைப் புரிந்து கொண்ட வேறு ஒருவர், அதே நிலத்தில் தன்னுடைய பாதத்தை வைக்கும் பொழுது அங்கே உயிர்கள் உற்பத்தியாகத் தொடங்குகின்றன. இது கவிதையோ கற்பனையோ அல்ல. இப்படித்தான் இந்தத் தமிழ் நாட்டில் கைவிடப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட நிலங்களெல்லாம் இன்றைக்கு இயற்கை வேளாண்மை செய்யக்கூடிய இளைஞர்களால் உயிர் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
எவர் ஒருவர் இந்த நிலம் செழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விதை விதைக்கிறாரோ, அவருடைய விருப்பத்திற்காக அங்கே உயிர்கள் அலங்கரிக்கப்படுகின்றன. எவர் ஒருவர் இந்த நிலத்தைச் சுரண்ட வேண்டும், இந்த நிலத்தைப் பண்டமாக மாற்ற வேண்டும், இந்த நிலத்திலிருந்து விளைச்சலை எடுத்து வணிகம் செய்ய வேண்டும், இந்த வணிகத்தினால் உயிர்கள் கொலை செய்யப்படுவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்ற மமதை கொள்கிறாரோ அவருடைய நிலத்தின் உயிர் ஆற்றல் அழிக்கப்படுகிறது, அவருடய உடலின் இயக்க ஆற்றல் சிதைக்கப் படுகிறது. அது தான் விதி, இதுதான் முயற்சிக்கும் சரணடைவதற்கும் உள்ள வேறுபாடு.
யார் நன்றாக வேளாண்மை செய்ய முடியும் என்றால், எவரொருவர் நிலத்தை நம்பி காலை வைக்கிறாரோ அவர் நல்ல உழவர். எவர் தன்னுடைய அறிவையும் உர நிறுவனங்களையும் நம்பிக் கொண்டு எந்திரங்களுடன் வருகிறாரோ அவர் மோசமான உழவர். அவர் விவசாயம் செய்யத் தகுதியற்றவர், அதனால் தான் பசுமைப் புரட்சிக்கு பிந்தைய இந்தக் காலத்தில் உழவர்கள் நிலங்களை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களுடைய நிலங்கள் பிடுங்கப்படுகின்றன. எதிர்த்து நிற்பதற்கு நேர்மையும் துடிப்பும் விவசாயிகளுக்கு இல்லாமல் போனது. அவ்வளவு கொலைகள், அவ்வளவு முயற்சிகள், அவ்வளவு பகுத்தறிவுப் பாவங்கள் நிலங்களின் மீது திணிக்கப்படுகின்றன”

                                                         ………………….

”ஒரு வேலை செய்ய வேண்டும். இந்த வேலை நன்றாக வர வேண்டும் என்பது உங்கள் விருப்பம். இந்த விருப்பம் நிறைவேற என்ன செய்ய வேண்டும் என்றால், அந்த வேலையை மட்டும் செய்ய வேண்டும். அதுதான் கடமை. ’அந்த வேலையை இப்படிச் செய்தால் அப்படியாகும். அப்படிச் செய்தால் இப்படியாகும். அதற்கு நாம் இவரைப் போய் பார்க்க வேண்டும். அவரைப் போய்ப் பார்க்கலாம்’ என்று கணக்குப் போடுவது முயற்சி. ’இதை, இப்படிச் செய்தால்தான் சரியாக வரும்’ என்று திட்டமிட்டுச் செய்வது முயற்சி.
செய்யப்போகும் வேலையின் விளைவைப் பற்றிய முன்முடிவுகளின் அடிப்படையில் வேலை செய்தால் அது முயற்சி. மாறாக, ‘இந்த வேலையின் வழியாக எனக்கு இவை கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் என் கடமையை மட்டும் செய்வேன். இதன் விளைவுகளை என் இறையே, நீதான் முடிவு செய்ய வேண்டும்’ என்ற தெளிந்த சிந்தையுடன் பணியாற்றுவது கடமை.
சுருக்கமாகச் சொல்வதானால், ‘விளைவின் மீது அதிகாரம் செலுத்தி செய்யப்படுவது எல்லாமே முயற்சிகள். விளைவைப் பற்றிச் சிந்திக்காமல், தேவையை மட்டும் நிறைவேற்றினால் அது கடமை’.
அலுவலகத்தில் ஒரு பணி ஒப்படைக்கப்படுகின்றது. ’அந்தப் பணியை எப்படிச் செய்தால் நல்ல பெயர் கிடைக்கும்’ என்று முடிவு செய்துவிட்டு இறங்கினால் அது முயற்சி. ’நல்ல பெயர் கிடைகின்றதோ கெட்ட பெயர் கிடைகின்றதோ, என் வேலையை நான் செய்வேன். இது என் கடமை’ என்று கடமையை மட்டுமே செய்பவர்களுக்குத் தீய விளைவுகள் வருவதில்லை. பாவ விளைவுகள் அவர்களை நெருங்குவது இல்லை. ஆனால் முயற்சி செய்பவர்களுக்குப் பெரிய வெற்றிகள் கிடைக்கின்றன; பெரிய தோல்விகள் கிடைக்கின்றன; ஆனால் இவை இரண்டுமே நிரந்தரமானவையல்ல”

No comments:

Post a Comment