கண்களுக்கு அப்பால் உள்ள உலகம் அழைக்கிறது!
ம.செந்தமிழன்
ம.செந்தமிழன்
துணி துவைக்கும் எந்திரம் ’ஆறாம் அறிவுடன்’ (SIXTH SENSE) இயங்குகிறது என்று விளம்பரம் செய்யப்படுகிறது. அழுக்கின் தன்மை அறிந்து தேவையான நீரை உறிஞ்சுவது, ஈரத்தின் அளவுக்கேற்ப துணிகளைக் கசக்குவது, உலர்த்துவது ஆகியவற்றையெல்லாம் எந்திரம் செய்கிறது. ஆனால், மனித உடல் மட்டும் தனக்குள் உருவாகும் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைச் சீர் செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என்று நவீன மருத்துவம் பரப்புரை செய்துவிட்டது.
மனித அறிவின் கழிவுகளை அமுதெனவும், படைப்பின் அற்புதங்களை இழிவெனவும் நம்பும் சமூகம் உருவாக்கப்பட்டுவிட்டது. நோய் என ஏதும் இல்லை எனும் உண்மையை ஏற்க இயலாத நிலை இருப்பதற்கு இதுவே காரணம் என எண்ணுகிறேன். இதற்கும் மேலாக ஒரு வேடிக்கையான கருத்து இங்கே உலவிக் கொண்டுள்ளது. உடல் என்பது வெறும் உறுப்புகளின் சேர்க்கை என்பதுதான் அக்கருத்து.
தொழிற்சாலைகளில் கோர்க்கப்பட்ட உதிரி பாகங்களின் உருவம்போல உடலை அணுகுபவர்களால் ஒருபோதும் நோய் அச்சத்திலிருந்து வெளிவர இயலாது.
உடல் உங்கள் கண்களுக்கும் பிற புலன்களுக்கும் அறியத்தக்கதாக உள்ளது. புலன்களால் அறிய இயலாத மனம்தான் இந்த உடலை வடிவமைத்து பராமரிக்கிறது. மனம் எங்கே உள்ளது என கேட்டால், நவீனம் மூளையைக் காட்டி மீண்டும் வேடிக்கை செய்கிறது.
மன நலம் என்பதே மூளை நரம்புகளின் மருத்துவ வணிகப் பிரிவாக மாற்றப்பட்டுவிட்டது. மனம் புலன்களுக்கு அப்பாற்பட்டது, புலன்களோடு பிணைந்துள்ளது. எல்லாவற்றையும் கண்களால் காண இயலாது என்பதுதான் முறையான அறிவியல். கண்களுக்கு இருக்கும் ஆற்றல் மிக மிக குறைவானது. கண்களுக்கு அப்பால் இருக்கும் உலகமே பெரியது.
நவீன சமூகம் இதையெல்லாம் அறியாது. நமது மரபுகளில் கண்களுக்கு அப்பாற்பட்ட உலகம் விரிந்துகிடக்கிறது. அந்த உலகத்தில்தான் நமக்கான மூலம் மறைந்துள்ளது. நமது வாழ்க்கை, நமது தேடல்கள், நமது உண்மையான அடையாளங்கள், செயல்பாடுகள், நலம், மரணம், பிறவிகள் உள்ளிட்ட சகலமும் கண்களுக்கு அப்பாலுள்ள வெளியில் மிதந்துகொண்டுள்ளன.
இவற்றை அறிந்துகொள்ள வேண்டுமானால், நீங்கள் உங்கள் கண்களைக் கடக்கத்தான் வேண்டும். புலன்களைக் கடந்து மனத்தை உணரத் துவங்குதல் உங்களை ஒரு புத்துலகிற்கு அழைத்துச் செல்லும். அந்த உலகில் நோயும் இல்லை, மருந்தும் இல்லை. அந்த உலகிற்கென கதவுகளும் இல்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கண்களை மூடிக் கொண்டு நடக்க வேண்டியதுதான். புலன்களை ஒடுக்கி, எந்தவிதப் பயிற்சியும் முயற்சியும் இல்லாமல் மனத்தை உணருவது மிக எளிதானது.
மனமே உடலாகிறது. மனமே மருந்தாகிறது. மனதிற்கும் உடலுக்குமான உறவை அறிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் செம்மையின் வாழ்வியல் மருத்துவ தொடர் பயிற்சிகளுக்கு வரலாம்.
இந்தத் தொடர் பயிற்சிகளில் வீட்டு மருத்துவ முறைகள் குறித்தும் பாடங்கள் நடத்தப்படும். அவையெல்லாம், வாழ்வியல் முறைகளாக இருக்குமே அன்றி, நோய்க்கு மருந்து எனும் வகையில் இருக்காது. நோய் என ஏதும் இல்லை என்பதை உண்மையாகவே உணர்ந்தவர்களுக்கு எந்த வழிநடத்தலும் தேவையில்லை.
பதிவு செய்த நாள் :15/8/2015
No comments:
Post a Comment