Tuesday, 7 February 2017

நின் வினைகள் போற்றி!

நின் வினைகள் போற்றி!
ம.செந்தமிழன்

1.
இல்லை என்போருக்கு இல்லாமல் போகிறாய்
உண்டு என்போரின் உடன் உறைகிறாய்
நின் அருமை போற்றி!
கேள்விகள் கேட்போருக்கு பதில் அளிக்கிறாய்
சரணடைவோருக்கோ தீர்வுகளைத் தருகிறாய்
நின் பெருமை போற்றி!
அறிவை நாடுவோரை வேடிக்கை பார்க்கிறாய்
அருள் நாடுவோரின் உள் நுழைகிறாய்
நின் பேதம் போற்றி!
பெண்மையைப் பழிக்கும் கூட்டங்களின்
பெண்களை ஆண்மையாக்கினாய்
பெண்மை மதிப்போருக்கு
அண்மையில் நின்றாய்
நின் பாதம் போற்றி!
மலம் அள்ளுதல் இழிவென்ற சமூகத்தின்
இல்லத்தினுள் மலவறை வைத்தாய்
அவமல்ல எத்தொழிலும் என்போருக்கு
எவ்விடமும் தூய்மை செய்தாய்
நின் வினைகள் போற்றி!
பிறவியில் பேதம் காண்போர்
பிறவியில் வாதம் வைத்தாய்
அறவினை மட்டும் செய்வோர்
உறவினை மேன்மை செய்தாய்
நின் சினங்கள் போற்றி!

…………………………………………………………
2.
சமைத்தல் இழிவென்போர்
பெண்ணைப் பிரிதல் காண்கிறேன்
எப்பணியும் எமதே என்போர்
இணைந்து களித்தல் காண்கிறேன்
நோய்கள் உண்டென்போர்
அலைந்து திரிதல் காண்கிறேன்
படைப்பில் நோயிருக்காதென்போர்
மகிழ்ந்து துளிர்த்தல் காண்கிறேன்
அறிவே இறுதி என்போர்
அறிவால் அழிதல் காண்கிறேன்
மனமே அறுதி என்போர்
பரத்தில் பறக்கக் காண்கிறேன்
செல்வம் காக்கும் என்போரின்
செல்வத்தை நோய் அழிக்க
கர்வம் காக்கும் என்போரின்
கர்வத்தைக் கடன் அழிக்க
அதிகாரம் காக்கும் என்போரின்
அதிகாரத்தைப் பகை அழிக்க
அறிவே காக்கும் என்போரின்
அறிவைச் சூது அழிக்க
புகழே காக்கும் என்போரின்
புகழை விதி அழிக்க
படைப்பே எனைக் காக்கும் என்போரைப்
படைப்பே நீ காக்க!

…………….
3.
அடைத்தால் பெருஞ்செல்வம்
உடைத்தால் மண்கலயம்
நடத்தும் வாழ்க்கையெல்லாம்
துடைக்கும் வன்மை உனது!
உணர்ந்தால் உயிர் நனிகொள்ளும்
துறந்தால் மயிர் நுனியும் கொல்லும்!
(நனி – மிகுதி. உயிர் நனி கொள்ளும் – உயிர் தனது மிகுதியான வாழ்வை வாழும்)
இணைப்புப் படம்: Paul Gregory


Published on : 18/010/2016

No comments:

Post a Comment