செந்தமிழனின் இரங்கல்
ஒருமுறை கூட சக மனிதர்களுக்குப் பாவம் இழைக்காதவர்களும்
இனியேனும் நல்ல சமூகத்தை உருவாக்குவதற்காகப் பணியாற்ற முடிவெடுத்தவர்களும்
எந்த வகையிலும் ஊழல் செய்யாமல், ஊழலுக்குத் துணைபோகாமல் இருப்போரும்
எளிய மனிதர்கள் பசித்திருக்கக் கூடாது என்ற அக்கறையுடன் அவர்களுக்கான உணவுத் திட்டங்களை செயல்படுத்தியோரும்
குறைந்தபட்சம் தம்முடன் வாழும் மனிதர்களுக்குத் தமது செல்வாக்கின் மலர்களைச் சூட்டி அழகு பார்க்கும் பாசம் கொண்டோரும்
பெண்மையை உண்மையாகவே தமது சமபாகமாகக் கருதி வாழ்பவர்களும்
அந்த அம்மையாரை இழிவு செய்யலாம்!
தலைமை என்பது வானிலிருந்து இறங்குவதல்ல. மக்களின் அருகதையிலிருந்து புறப்படுவது.
நல்ல தலைமை வேண்டுமானால் சமூகம் தனது அருகதையை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
இந்தச் சமூகம் வாழும் வாழ்க்கைக்குக் கிடைத்தவர்களில் அவர் சிறந்தவர் என்று எண்ணுகிறேன். அவரது உயிரை அமைதியடையச் செய்ய எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்.
ஒரு திரைப்பட நடிகையாகத் தன் வாழ்க்கையைத் துவங்கியவர் எவ்வளவு மேம்பட்ட வாழ்க்கையை முடியுமோ அவ்வளவும் அவர் வாழ்ந்துவிட்டார்.
நண்பர்களே,
உங்களுக்கு நல்ல தலைமை வேண்டுமானால், நீங்கள் நல்ல வாழ்க்கைமுறையை உருவாக்கத் துவங்குங்கள்!
- செந்தமிழன்
Published on 06/12/2016
No comments:
Post a Comment