Friday, 10 February 2017

சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!

சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!

-ம.செந்தமிழன்

மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் ஓர் நோய்க் குறியைப் பற்றி உங்களோடு உரையாட விரும்புகிறேன். அவசரமாகவும் அதேவேளை நிதானமாகவும் கையாள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் காய்ச்சலுடன் கூடிய தோல் நோய்கள் இப்போது அதிகரித்துக்கொண்டுள்ளன.
காய்ச்சலின்போதே தோலில் மாற்றங்கள் உருவாகின்றன. புண்கள், கொப்புளங்கள், தோல் தடிப்புகள், சிவப்புப் புள்ளிகள் ஆகியவை தோலில் தோன்றும் அறிகுறிகள்.
பெரும்பாலும் சிறுவர்களை இந்நோய் பற்றிக்கொள்கிறது. சிலருக்கு ஒரு மாதகாலம் வரைக்கும் இதன் தீவிரம் குறையாதிருக்கிறது. முறையான வாழ்வியல் ஒழுங்குகளைக் கடைபிடித்தால் விரைவில் நலம் கிடைக்கிறது.
நுரையீரல் சிக்கல்களுக்கும் தோல் நோய்களுக்குமான உறவைப் பற்றி இரு மாதங்களுக்கு முந்தைய ஊர் சந்தையில் உரையாற்றியிருந்தேன். இது தோல்நோய்கள் பெருகும் காலம் என்பதையும் அவ்வுரையில் குறிப்பிட்டிருந்தேன். கடந்த சில நாட்களுக்கு முன், மனித உடலின் பருவ நிலை மாறிக்கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, இதன் விளைவு நுரையீரல் நோய்களை உருவாக்குவதாக இருக்கும் என்பதையும் பதிவு செய்திருந்தேன். மேற்கண்ட பேச்சு மற்றும் கட்டுரை இணைப்புகளைக் கீழே தருகிறேன். அவற்றை உள்வாங்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், பருவநிலைகளின் வழியாக நம் மீது ஒரு போர் தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த பெருவெள்ளத்திற்குப் பிந்தைய காலம் நிச்சயமாக, நமது வரலாற்றில் மோசமான மாற்றங்களை உருவாக்கியுள்ளது. மனித உடலின் வெப்பநிலை இப்போது குறைந்துள்ளது.
உடலில் இருக்க வேண்டிய அளவுக்கான வெப்பம், இப்போது இல்லை. நாம் குளிர்ந்துகொண்டிருக்கிறோம்.
நவீன அறிவியல் அளவீடுகளின்படி இக்கருத்தைப் புரிந்துகொள்ள இயலாமல் போகலாம். எனது கருத்துகள் யாவும் ஐம்பூதக் கொள்கையின் வழிப்பட்டவை என்பதையும் அக்கொள்கையின் வழிநின்றுதான் எனது கருத்துகளை விளக்க இயலும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
ஐம்பூதங்களில் வெப்பம்தான் நோய் எதிர்ப்பாற்றலுக்கானது. வெப்பம் குறைந்த உடலை எளிதாக நோய்கள் தாக்கும். காற்று மாசுபாடு, குளிர்சாதனப் பெட்டிகளின் மிகையான பயன்பாடு, கொசுக்கொல்லிகள் பயன்பாடு, செயற்கை மணமூட்டிகள் (room freshners, perfumes, etc) முறையற்ற உணவுப் பழக்கங்கள், பனிக் கட்டி கலந்த பானங்களை மிகுதியாகப் பருகும் வழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இச்சமூகத்து மனிதர்களின் உடல்கள் வெப்பநிலையை ஏற்கெனவே இழந்திருந்தன.
கடந்த பெருவெள்ளத்திற்குப் பிறகான காலம், பருவநிலையில் ஏற்படுத்திய மாற்றங்களால் உடல்கள் மேலும் மேலும் குளிர்ந்துகொண்டுள்ளன. வானிலை ஆய்வு மையம் ‘இப்போதைக்கு வெப்பம் குறைய வாய்ப்பில்லை’ என்று அறிவித்த கடந்த வெள்ளிக்கிழமை மாலை நான் சிதம்பரத்தில் மழையைக் கண்டேன்.
கொங்கு மண்டலத்தின் சில பகுதிகளில் சனிக்கிழமை மழை பெய்தது. அன்று இரவு செம்மை வனத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் மழை நனைத்தது. இதோ இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டுள்ள இந்தக் கணம், மின்னலும் இடியுமாக வானம் தனது வெள்ளத்தை இறக்கத் தயாராகிக்கொண்டுள்ளது.
வானிலை மேதைகள் இதற்கும் ஏதாவது பெயர் வைத்துவிடுவார்கள்.
இப்போதைய பருவநிலை தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். கோடையின் சில நாட்கள் கொடுமையான வெப்பம் தாக்கியது. பின்னர் மழைப் பொழிவு துவங்கி குளிர்வித்தது. மீண்டும் வெயில் உயர்ந்தது. இப்போது மழை துவங்கிவிட்டது.
மிகையான வெப்பம், மிகையான குளிர்ச்சி ஆகிய இரு சூழல்களையும் தாங்கும் உடல்கள்தான் இனி தாக்குப் பிடிக்க இயலும் என்பதை நாம் உணர வேண்டிய தருணம் இது. இப்போது உடல்கள் குளிரும் பருவம். ஏற்கெனவே சளி மிகுந்த சிறுவர்கள், குழந்தைகள் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். குறைந்துபோன வெப்பநிலையை உயர்த்தவும், உறைந்து கிடக்கும் சளியை உருக்கி வெளியேற்றவும் காய்ச்சல் உருவாகிறது.
இவ்வாறான பாதிப்புகள் உருவான நிலையில் பின்வரும் வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம் என்பது எனது முன்மொழிவு.
மரபுவழி மருத்துவமுறைகளில் விருப்பம் கொண்டோரால் எனது கருத்துகளை எளிதாகக் கடைபிடிக்க முடியும்.
காய்ச்சலின்போது, ஆற வைத்த வெந்நீர் மட்டும் தாகத்திற்குத் தர வேண்டும். எந்தவிதமான கசாயமும் கூட வேண்டாம். காரமில்லாத அரிசி கஞ்சி, இட்லி ஆகியவை மட்டுமே உணவாக இருக்க வேண்டும். காய்ச்சல் குறையும்போது, பசியின் அளவு உயர்ந்த பின்னர் தக்காளி இரசத்தில் சோற்றினை நன்கு கரைத்து உணவாகக் கொடுப்பது நல்லது. எக்காரணம் கொண்டும், பசிக்காதபோது உணவு தர வேண்டாம்.
தூய வெள்ளைத் துணியை விரித்து நலம் குன்றியவர்களை அதன் மீது படுக்க வையுங்கள். அம்மைக்கு என்னவிதமான தூய்மைப் பராமரிப்புகள் செய்வோமோ அதே வகையில் செய்ய வேண்டும்.
காரமான, புளிப்பான உணவுகளின் மணம்கூட இல்லாதவகையில் வீடு இருந்தால் நல்லது.
மேற்கண்டவை தவிர வேறெந்த உணவும் பானமும் தரக் கூடாது. குறிப்பாக, பால் தருவது கூடாது. கடையில் வாங்கிய பொருட்களையும் உண்ணத் தராதீர்கள். கஞ்சி, இட்லி, இரசம் சோறு மட்டுமே உணவுகள் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். இவற்றிலும், காய்ச்சல் இருக்கையில் கஞ்சி, இட்லியும் குறைந்த பின்னர் இரசம் சோற்றினையும் தர வேண்டும்.
தோலில் உள்ள புண்களின் மீது ஈரத் துணியால் அவ்வப்போது ஒத்தடம் தாருங்கள். இந்தத் துணி, மென்மையான பருத்தியாக இருந்தால் நல்லது. துணியில் சீழ் ஒட்டி அழுக்கான பின்னர், மாற்றிவிட வேண்டும். புண்களின் மீது எவ்விதமான எண்ணெய், களிம்பு மற்ற பிற மருந்துகள் பூசக் கூடாது. புண்கள் ஆறும் வரைக்கும் இந்த ஈர ஒத்தடம் தேவை.
ஈர ஒத்தடம் தரும் அதேவேளை, உடலின் வெப்பத்தைக் குறைக்காதவகையில் செயல்பட வேண்டும். ஈரம்தான் புண்களுக்கான மருந்து. ஆனால், அளவுக்கு அதிகமாக ஈரம் இருந்தால் உடல் வெப்பம் மேலும் குறையும்.
செம்மை குடும்பத்துச் சிறுவன் ஒருவனுக்கு, உடல் முழுவதும் புண்களால் மூடிக்கிடந்தது.
ஈர ஒத்தடம், பச்சைத் தண்ணீரில் மட்டுமே தரப்பட வேண்டும்.
அவனுக்கு இவ்வாறான வழிமுறைகளைக் கடைபிடித்த பின்னர் மூன்றே நாட்களில் நலமடைந்தான். வேறு பல செம்மைச் சிறுவர்களுக்கும் இந்தத் தொல்லை உருவாகி இதே வழிமுறைகளில் நலமடைந்துகொண்டுள்ளார்கள்.
இம்முறையில் உணவுக் கட்டுப்பாடும், தூய்மையும், ஓய்வும் மிக மிக அவசியமானவை.
காலை மற்றும் மாலை வெயிலில் சிறிது நேரம் காய்தல் நல்லது. இளவெயிலில் மட்டும் உடலைக் காட்ட வேண்டுமே தவிர, வெயில் உயர்ந்த பின்னர் வெளியே செல்வது முற்றிலும் தவறானது.
உடலுக்குத் தேவையான இயற்கை வெப்பத்தை இளவெயில் அளிக்கும். உயர்ந்த வெப்பநிலையில் உள்ள முதுவெயில் (உச்சி வெயில்) புண்களை அதிகரிக்கச் செய்யும்.
இக்கட்டுரையின் வழியாக நான் கூற விரும்பும் மற்றுமொரு செய்தி என்னவெனில், இயற்கை தனது பதில் நடவடிக்கைகளைத் துவங்கிவிட்டது. இயற்கைக்கு எதிராக, மாறாகச் செயல்பட்டதன் விளைவுகள்தான் இவை எல்லாம்.
இனிவரும் காலம், குறிப்பாக வரவிருக்கும் மழைக்காலம் வேறு பல தாக்குதல்களை நிகழ்த்தவுள்ளது. இப்போது காய்ச்சலுக்கும் புண்களுக்கும் ஆளாகும் பிள்ளைகளில் ஒருவர் கூட இந்த நிலைக்குப் பொறுப்பாளிகள் அல்லர். எல்லாப் பாவங்களையும் செய்தது மூத்த தலைமுறைதான்.
பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் சிலநாட்களுக்கு முன்பு இப்படிக் கூறினார், ‘இன்னும் சில நாட்களில் அனைவரும் முதுகில் ஆக்சிஜன் சிலின்டர்தான் கட்டிக்கொள்ள வேண்டும்’.
இதுதான் உண்மையான நிலைமை. காற்று மாசுபாடு, கையாளவே முடியாத இரசாயனக் கழிவுகள், ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளின் கதிர்வீச்சுகள், நெகிழிக் குப்பைகள், தேவைக்கதிகமான சொகுசு வாகனங்கள், குளிர்சாதனப் பெட்டிகளின் வரம்பற்ற இயக்கம், வனங்களின் அழிவு உள்ளிட்ட நவீன ‘சாதனைகள்’ இயற்கைச் சூழலைச் சீரழித்துவிட்டன.
காற்று நாசமாகிபோனது. ஆகையால், நுரையீரல்கள் கெட்டுப் போயின. தாறுமாறான பருவநிலையும் இவற்றோடு இணைந்துவிட்டது.
இந்தக் கணத்திலிருந்து மாற்றத்தைத் துவக்குங்கள். வாழ்வியலைப் புரட்டிப் போடுங்கள். நமது மரபுவழிப்பட்ட வாழ்க்கைமுறைகளையும் அறக்கொள்கைகளையும் கடைபிடியுங்கள்.
இப்போது நோயுற்று வாடும் எல்லாச் சிறுவர்களும் குழந்தைகளும் நலமடைந்து வாழ, எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன். இக்கட்டுரையை வாசிப்போரும் விருப்பமிருந்தால், அக்குழந்தைகளுக்காக வேண்டலாம். அந்த வேண்டுதல்களால் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் மாற்றிவிட முடியும்.

No comments:

Post a Comment