இளநீர் குறித்து சுருக்கமாக ஒரு கட்டுரை வரைக!
ம.செந்தமிழன்
வெப்பம் மிகுந்த சூழலில் இருக்கும்போது இளநீர் பருகுவது ஆறுதல் தரும்.
உடலின் நீர்த் தேவையை நிறைவு செய்து, வெப்பத்தைத் தணிக்கும். உடல்
சூட்டினால் உருவாகும் ஆற்றல் பற்றாக்குறையை இளநீர் ஈடுசெய்யும். இளநீரின்
இனிப்புச் சுவை, உடலின் உள்ளே நீரைப் பெருக்கித் தரும். இனிப்புச்
சுவையில், உடனடி ஆற்றல் கிடைக்கும். வெப்பத்தில் பணியாற்றுவோருக்கு இந்த
இனிப்பாற்றல் தேவையானது.ஆகையினால்தான், கோடையில் இளநீரும் பதநீரும் கிடைக்கும்படி படைக்கப்பட்டுள்ளன. கோடையில் பழுக்கும், பலாப் பழங்களும் இனிப்பாற்றலின் வழியாக இயக்க ஆற்றலை வழங்குகின்றன. உடலின் நீர் குறைந்து சோர்ந்து விழுவோருக்கு இனிப்புச் சுவை நீர் மருந்தாகும்.
துவர்ப்புச் சுவை, மிகையான நீர்ப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும். அதேவேளை, நீர் வற்றிப் போன உடலில் நீரைச் சுரக்கவும் துவர்ப்பு துணை செய்யும்.
ஏனெனில், துவர்ப்பு, ஐம்பூதங்களில் காற்று எனும் பூதத்திற்கான சுவை. காற்று, ஓர் உடலில் மிகுந்தாலும் குறைந்தாலும் வெப்பம் சீர் கெட்டு நீர் கெடும். நீர் கெட்டால், உடலின் இயக்கம் தடைபடும். நீரைச் சீராக்க காற்றின் திறன் மேம்பட வேண்டும்.
துவர்ப்புச் சுவை, உடலில் உள்ள காற்றைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு இயங்கத்தக்கது. நீர்க் கடுப்பு ஏற்பட்டவர்கள் புளியங்கொட்டையைத் தின்றால், நீர்ச் சுருக்கம் விடுபட்டு, தாகம் உயரும். தாகத்திற்கான நீரைப் பருகியதும் உடலில் உள்ள மிகையான வெப்பக் காற்று வெளியேறி, நீர் மிகுந்து உடல் குளிரும். நீர்ச் சுருக்கு உருவாகும்போதெல்லாம், சிறுநீர் கசியும். அவ்வாறு கசியும் சிறுநீரோடு மலக் காற்றும் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும்.
இனிப்புச் சுவை நீரை உயர்த்தும், துவர்ப்புச் சுவை காற்றைச் சீராக்கும். இளநீரும் பனை நுங்கும் இவ்விரண்டு சுவைகளும் மிகப் பொருத்தமான விகிதத்தில் கலந்த அருமருந்துகள். எந்தப் பருவத்தில் என்ன தேவை என்பதை உணர்ந்த படைப்பாற்றல் வழங்கிய அருட்கொடைகள் இவை. எல்லா படைப்புகளுமே இவ்வாறான அற்புதங்கள்தான்.
இளநீரும் பனைநுங்கும் அனைவருக்குமான உணவுகள்தான். ஆனால், எல்லாச் சூழல்களுக்குமானவை அல்ல. வெப்பம் மிகுதியாக இருக்கும் சூழலில் வெயிலில் பணியாற்ற வேண்டியிருந்தால் இளநீர் பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் இளநீர் பருகுவது முற்றிலும் தவறான பழக்கம்.
ஓர் உணவு எதற்காகப் படைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், கடைபிடிக்கப்படும் பழக்கங்களில் என்னை மிகவும் வருந்தச் செய்வது மாநகர மக்களின் இளநீர் பழக்கம். இந்தப் பழக்கம் வயிற்றில் அமிலத்தை அதிகமாகச் சுரக்கச் செய்யும். ஏற்கெனவே உடலில் கபம் (சளி உள்ளிட்ட நீர்த்தன்மைகள்) மிகுந்தோருக்கு இளநீர் ஒவ்வாத உணவு. மோசமான உடல் மாற்றங்களைக் கூட ஓர் இளநீர் உருவாக்கும்.
இளநீரில் ஏதேதோ சத்துகள் இருப்பதாக நவீன அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மக்கள், பொருந்தாத வேளைகளில் இளநீர் பருகும் முறைக்கு மாறினார்கள். கடந்த சில ஆண்டுகளில், மாநகரங்களில் இளநீர் விற்பனை கற்பனைக்கெட்டாத வகையில் உயர்ந்தது. தென்னை விவசாயிகளிடம் நான்கு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு மாநகரங்களில் நாற்பது ரூபாய்க்கு விற்கப்பட்டன இளநீர்க் காய்கள்.
ஐந்து ரூபாய்க்கு இளநீர் கிடைத்த நிலை மாறி, பணம் உள்ளோர் மட்டும் வாங்கக் கூடிய சத்துப் பொருளாகவும், மருத்துவப் பொருளாகவும் இளநீர் மாற்றப்பட்டது.
சிறு நகரங்களில் இளநீர் தட்டுப்பாடு உருவானது. வெட்டப்பட்ட இளநீர்க் குலைகளின் பெரும்பகுதி, மாநகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மாநகரங்களில் உள்ளோர் எல்லோரும் படித்தவர்கள், விவரம் அறிந்தவர்கள், நவீன தகவல்களை விரல் நுனியில் கொண்டவர்கள், உடல் நலத்துக்காக செலவு செய்யும் வல்லமை படைத்தவர்கள்.
வசதியுள்ள பிள்ளைகள் காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடித்துக் கொண்டிருக்கும்போது, வெயிலில் திரியும் ஏழைப் பிள்ளைகளுக்கு இளநீர் எட்டாக் கனியானது.
இந்த இடத்தில், தேங்காயைப் பற்றியும் நீங்கள் கொஞ்சம் தெரிந்துகொள்வது நல்லது.
ஆற்றுச் சமவெளிகளிலும் மழை வளம் மிக்க மலைகளிலும் ஊற்று நீர் கொண்ட கடற்கரைகளிலும்தான் தென்னை படைக்கப்பட்டது. பசுமைப் புரட்சி எனும் பிசாசுக் கொள்கை, வறண்ட நிலங்களிலும் தென்னை பயிரிடுவதை அறிமுகம் செய்தது. இதற்காக நிலத்தடி நீர் சுரண்டப்பட்டது. நாற்பது அடி ஆழத்தில் கிணற்றில் ஊற்றெடுத்த நீர், தென்னை நடவுக்குப் பின்னர், நானூறு அடி ஆழத்திற்கு இறங்கியது. இப்போது தென்னை பயிரிடப்படும் பல இடங்களில் ஆயிரம் அடி ஆழத்தில்தான் நீர் கசிகிறது.
தென்னை பெருகிய பின்னர் கொப்பரைத் தேங்காயின் விலை வீழ்ச்சி அடைந்தது. கொப்பரைத் தேங்காய்கள் தேங்காய் எண்ணெய் பிழியும் ஆலைகளுக்கானவை. தொழிற் புரட்சி எனும் பிசாசுக் கொள்கை. உள்ளூர் எண்ணெய்ச் செக்குகளை ஒழித்துக் கட்டிவிட்டது. பெரு நிறுவனங்களின் தேங்காய் எண்ணெய் மட்டுமே நாகரிகத் தலைகளில் மயிர் வளர்க்கும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இதன் பின்னர், கொப்பரைத் தேங்காய்களின் விலையைப் பெரு நிறுவன ஆலைகள் கட்டுப்படுத்தத் துவங்கின.
ஒருபுறம் தென்னை உற்பத்தி உயர்ந்தது, மறுபுறம் கொள்முதல் குறைந்தது. நிலத்தைச் சுரண்டி தென்னைத் தோப்புகளை வளர்த்தவர்கள் கடனாளிகளானார்கள். எண்ணற்ற தோப்புகள் நிலக் கொள்ளையர்களுக்குக் கைமாற்றப்பட்டன. அந்த தோப்புகளுக்கு ‘கார்டன் வில்லா’ ‘க்ரீன் சிட்டி’ போன்ற பொருந்தாப் பெயர்கள் சூட்டப்பட்டன.
படித்த மக்களுக்கு தென்னைக்குப் பின்னால் நடக்கும் இந்த அவலங்கள் தெரியாது. இளநீரில் உள்ள சத்துகள் யாவை, தேங்காயில் உள்ள கொழுப்பு எந்தவையைச் சேர்ந்தது போன்ற அறிவுப் பூர்வமான கேள்விகளுக்கான விளக்கங்களை அவர்கள் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர்.
தேங்காய் எண்ணெயில் சமைப்பது மாரடைப்பை உருவாக்கும் என்ற கதை நவீன மருத்துவத்துறையினால் கட்டவிழ்க்கப்பட்டது.
இதன் பின்னர், பெருநிறுவனங்கள் தமது தயாரிப்புகளுக்கு, ‘தேங்காய் எண்ணெய்’ (Coconut Oil) என்று பெயரிடுவதை நிறுத்திக் கொண்டன. அதற்கு மாற்றாக, ‘கூந்தல் எண்ணெய்’ (Hair Oil) என்று அச்சிட்டன. ஏன் இந்த மாறுபாடு உருவானது என்று அந்த எண்ணெயை வாங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான மனிதர்களுக்குத் தெரியாது. எண்ணெய்ப் புட்டிகளில் தேங்காய் படத்தை அச்சிட்டால், அது தேங்காய் எண்ணெய் என நம்புவது கல்வி அறிவு கொண்ட சமூகத்தின் இயல்புகளில் ஒன்று.
தேங்காய் எண்ணெயுடன் பெட்ரோலிய எண்ணெயைக் கலப்பது பெருநிறுவனங்களின் நவீன பகுத்தறிவு தர்மம். அவர்கள் தர்மவான்கள் கலப்படம் செய்கிறார்கள். மக்கள் கல்விமான்கள், அதை வாங்கி தலையில் தேய்க்கிறார்கள்.
இதே காலகட்டத்தில், கொப்பரைத் தேங்காய்களின் கொள்முதல் சரிந்தது. தென்னை விவசாயம் வயிற்றில் மண்ணை வாரி இறைக்கத் துவங்கியது. இந்த நிலையில்தான் மாநகரங்களில் இளநீர் வணிகம் வேகம் கொண்டது. இப்போதும் அதே கல்விமான்கள்தான் இளநீரை வாங்கிப் பருகினர். ’இளநீர் உங்களுக்கான உணவல்ல, அளவு மீறி இளநீர் பருகுவது ஆபத்தானது’ என்று பேசுவதற்கு ஆளில்லை.
எல்லாப் பருவங்களிலும் இளநீர் கிடைக்கும் எனும் இழிவான வணிகம் மாநகர மக்களால் வளர்க்கப்பட்டது.
தென்னை விவசாயம் இளநீர் சார்ந்ததாக மாற்றப்பட்டது. கோடையில் மழை பெய்தால் தேங்காய்களின் காய்ப்பு குறையும், தோலில் கருப்பு பட்டைகள் விழும், நோய்த் தாக்குதல்கள் ஏற்படும், இளநீரின் சுவை குறையும். ஆனால், படித்த மக்களுக்கு இவை தெரியாது.
அவர்களுக்கு இளநீர்க் காயின் தோலில் கருப்பு இருந்தால் பிடிக்காது, சுவையில் துவர்ப்பு மிகுந்தால் ஆகாது.
’கோடையின் வெப்பத்தை நான் தணித்துவிட்டேன். நீங்கள் இளநீரைப் பருக வேண்டிய தேவையில்லை. ஆகவே, இளநீர்க் காய்களின் சுவையை, எண்ணிக்கையை மாற்றிவிடுகிறேன்’ என்பது படைப்பாற்றலின் குரல். அதைக் கேட்கும் செவிகள் இல்லாக் காலமல்லவா இது.
எக்காலமும் இளநீர் வேண்டும், அதிகாலையில் வேண்டும், பச்சையாக வேண்டும், சிவப்பாக வேண்டும், இனிப்பாக வேண்டும் என்பது கற்றோர் மிகுந்த சமூகத்தின் ஆசை. இயற்கைவழியில் இதற்குச் சாத்தியம் இல்லை. தென்னையில் உருவாகும் வண்டுகளை, தாக்கும் பூச்சிகளை அழிக்க விவசாயிகள் களமிறங்கினர்.
சல்பாஸ் எனும் நஞ்சு மாத்திரையைத் தென்னையில் திணிக்கத் துவங்கினர் தென்னை உற்பத்தியாளர்கள். மரத்தின் உச்சியில் தொங்கும் குலைகளில் வண்டு இருந்தால், மரத்தின் அடிப் பகுதியில் துளையிட்டு அதன் உள்ளே நஞ்சு மாத்திரைகளைத் திணிப்பர். சில நொடிகளில் மரத்தின் மேலிருந்து கூட்டம் கூட்டமாக வண்டுகள் செத்து விழும். அவ்வளவு வீரியமிக்க நஞ்சு அது.
தென்னைமரத்தின் பன்னாடைகளின் (மட்டைகளின் கீழ் இருக்கும் சல்லடை போன்ற பகுதி) அடியில் அந்து உருண்டைகளை (நாப்தலின்) புதைப்பது வண்டுகளை அழிக்கும் முறைகளில் ஒன்று. இவைபோக, குருணை மருந்துகள் எனப்படும் நஞ்சுகளைத் தென்னை மரத்தில் செலுத்துவது பரவலான பழக்கம்.
’மரத்தின் தண்டுப் பகுதி வழியாக ஊடுருவி உச்சிக்கே செல்லும் இந்த நஞ்சுகள், இளநீரில் மட்டும் கலக்காது’ என்பது நவீனக் கண்டுபிடிப்பு. அதைக் கல்வியாளர்கள் நம்பலாம், என்னைப் போன்ற மூடர்களால் நம்ப இயலாது. ஏனெனில், தென்னை விவசாயிகளைக் காப்பாற்றுவதை விட, இளநீரைப் பருகி நோயுற்று விழும் மக்களைக் காக்க வேண்டும் என்ற அன்பு மூடர்களுக்கு மிகுதி.
உங்கள் வாசலுக்கு வந்து சேரும் இளநீரில் சத்து உள்ளதா நஞ்சு உள்ளதா என நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள். ஆனால், அதன் பின்னால் நீண்ட வரலாறு உள்ளது. அந்த வரலாற்றில், இயற்கைக்குப் பொருந்தாத ‘புரட்சிகள்’உள்ளன, பெருநிறுவனங்களின் ‘வளர்ச்சிகள்’ உள்ளன, நிலத் தரகர்களின் ‘முன்னேற்றங்கள்’ உள்ளன, கோடிக் கணக்கான பூச்சிகளின் மரணங்கள் உள்ளன. செக்கு ஆட்டிய சமூகங்களின் தோல்வி முகங்களும், வெயிலில் மூட்டை சுமந்து ஒரு வாய் இளநீர் பருக வக்கில்லாத எளியோரின் வறுமையும் அதே வரலாற்றில் புதைந்துள்ளன.
’இளநீரில் நஞ்சு’ என்ற பரபரப்பிற்காக இக்கட்டுரை பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளதை நானறிவேன். இந்தப் பரபரப்பு இளநீர் விற்பனையைச் சரித்துப் போடும் அளவுக்கு உயர்ந்தாலும் வியப்பில்லை. எனது நோக்கம் அதுவல்ல.
இந்தக் கட்டுரை வழியாக, உங்களிடம் நான் தெரிவிக்க விரும்பும் ஒரே ஒரு செய்தி என்னவென்றால்,
‘மரபுவழிப்பட்ட உணவுக் கொள்கைகளை நிராகரிக்காதிருங்கள். நமது மரபு இயற்கையியலில் கரைகண்டது. நமது மரபு இறையாற்றலின் பெருங்கொடைகளை வாங்கித் தந்தது. எந்தக் கொள்கையாவது நமது மரபு உணவுப் பழக்கத்தை நிராகரித்தால், அக்கொள்கை உங்களை எவருக்கோ விற்பனை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்’
பதிவு செய்த நாள்: 01/05/2016
No comments:
Post a Comment