செம்மை மரபுப் பள்ளி: எங்கள் பிள்ளைகள் காட்டில் மழை! ம.செந்தமிழன்
செம்மை மரபுப் பள்ளி துவங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இரண்டாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளோம். மரபுப் பள்ளியில் தொடர்ந்து பயிலும் பிள்ளைகள் அனைவரும் ஏதோ ஒரு ஆங்கிலப் பள்ளியில் பயில்பவர்கள்தாம்.வாரத்தின் ஆறு நாட்களுக்கு மனப்பாடமும், அயல்மொழியும் திணிக்கப்படும் சூழலில் வாழும் பிள்ளைகளுக்கு, ஞாயிற்றுக் கிழமை மட்டும் இயல்புக்குத் திரும்பும் இடமாக மரபுப் பள்ளி இருந்துள்ளது. அவர்களுக்கு நிறைய பாடங்களைச் சொல்லித்தர வேண்டுமென நான் நினைத்தேன். என் எண்ணம் ஈடேறவில்லை. ஓரிடத்தில் அமர வைத்துப் பாடம் நடத்தும் சுதந்திரத்தை அவர்கள் எங்களுக்கு வழங்கவில்லை. மரபுப் பள்ளி என்றால், விளையாடும் இடம் என்பது அவர்களின் நினைவுப் பதிவாக இருந்தது.
அவர்கள் இவ்வாறு எண்ணுவதில் எந்தத் தவறும் இருக்கவியலாது. இந்த ஒரு நாளின் மூன்று மணி நேரத்தில்தான் அவர்கள் மரங்கள் சூழ்ந்த தோட்டத்தில் ஓடியாடுகிறார்கள், சேற்றில் புரளுகிறார்கள், அணில்களை வேடிக்கை பார்க்கிறார்கள், மண்புழுக்களையும் அட்டைப் பூச்சிகளையும் கையால் தொடுகிறார்கள். பசிக்கும்போது பசிக்கிறது என்று சொல்லவும், மூத்திரம் வரும்போது ஓடிச் செல்லவும் இந்தப் பள்ளியில் சுதந்திரம் கிடைக்கிறது. ஆகவே, எனது எதிர்பார்ப்புகளை நிறுத்திவிட்டு அவர்களைக் கவனிக்கத் தொடங்கினேன்.
விளையாட்டுகளுக்கு முன்பு ஒருமணி நேரம் மட்டும் நான் பாடம் நடத்துவேன். பெரும்பாலும் இயற்கையியல் பாடங்களைத்தான் அவர்களுக்கு நடத்தியுள்ளேன். உடல்நலம், மொழி, வரலாறு ஆகியவற்றையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.
ப.கலாநிதி, நளினி, சாதிகா மற்றும் அவரது குழுவினர் என்னுடன் இணைந்து மரபுப் பள்ளியில் பணி செய்கின்றனர் இந்த ஆண்டு துவக்கத்தில் ஆனந்த் செல்லையா பள்ளி ஆசிரியர்களில் ஒருவராக இணைந்துகொண்டார். அவரது வருகை எங்களுக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. தமிழ் கற்றுத் தருவதில் அவருக்கு ஆழ்ந்த விருப்பம் உள்ளதைப் புரிந்துகொண்டேன். இப்போது அவர்தான் மரபுப் பள்ளியின் தமிழாசிரியர். ஏற்கெனவே மழலைகளுக்கான தமிழ்ப் பாடங்களை காணொளி வழியாக காந்திமதி நடத்தியிருக்கிறார்.
விளையாட்டுகளின் வழியாக பல பாடங்களை நடத்தியிருக்கிறோம். மரபுப் பள்ளி மூன்று வகுப்புகளாக இயங்குகிறது. முகை, மொட்டு, மடல் ஆகியவை அவை. முகை, ஏழு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கானது. மொட்டு, பத்து வயது வரையான பிள்ளைகளுக்கும், மடல், பதினோரு வயதிற்கு மேற்பட்டவர்களுக்குமாகப் பகுக்கப்பட்டுள்ளன.
இப்போதைய சூழலில் மரபுவழிக் கல்வி முறையை முன்னெடுப்பது, பாலை நிலத்தில் பயிர் செய்ய நினைப்பதற்குச் சமமானது. எனக்கும் என் சக பயணிகளுக்கும் இந்த விருப்பம் உள்ளது. தலைகீழான நிலையில் உள்ள இந்தச் சமூகத்தில் மரபுவழிக் கல்வியை ஆழப் பதிக்க வேண்டுமென விரும்புகிறோம். எங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும் என்பதை நாங்கள் நன்கறிவோம்.
மரபுப் பள்ளி துவங்கப்பட்டதிலிருந்து பெற்றோருக்கான வகுப்புகளில் நான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். மாதம் இருமுறை பெற்றோருக்கான வகுப்புகளை நான் நடத்தியதுண்டு. பின்னர், எல்லா வாரங்களிலும் பெற்றோருக்கான விளையாட்டுகளையும் வகுப்புகளையும் நடத்தத் தொடங்கினோம்.
இதன்விளைவாக, மரபுப் பள்ளிக்கு வருகை தந்த குடும்பங்களின் வாழ்வியல் மாற்றம் பெற்றது. குழந்தைகளோடு சேர்த்து பெற்றோரும் மரபுவழிப்பட்ட வாழ்க்கை முறையைப் புரிந்துகொண்டனர்.
மரபுப் பள்ளி குழந்தைகளின் உடல்நலனில் முதன்மை அக்கறை செலுத்தினோம். இப்போது, எங்கள் மரபுப் பள்ளி பிள்ளைகளில் ஒருவர் கூட மருத்துவமனைக்குச் செல்வதில்லை. ஏறத்தாழ ஓராண்டு காலம், எந்த மருத்துவ உதவியும் தேவைப்படாத வாழ்க்கையை மரபுப் பள்ளி அவர்களுக்குக் கற்றுத் தந்துள்ளது.
எங்கள் மரபுப் பள்ளி பிள்ளைகளில் பெரும்பாலானோர் சோப்பு, சாம்பு, பற்பசை பயன்படுத்துவதில்லை. அவரவருக்கான பற்பொடி தயாரிக்கும் முறையைக் கற்றுத் தந்துள்ளோம். சில பிள்ளைகள் தாங்கள் தயாரிக்கும் பற்பொடியை ஊர் சந்தையில் விற்பனை செய்யுமளவு உயர்ந்திருக்கிறார்கள்.
மரபுப் பள்ளி பாடத்திட்டத்தில் பயணங்களும் உண்டு. பூண்டி, அய்யூர் ஆகிய இரு வனப் பகுதிகளுக்கும் சென்றுள்ளோம். இப்போது இந்தப் பிள்ளைகள் காடுகளை வேடிக்கை பார்ப்பவர்கள் அல்லர், காடுகளைக் கட்டிப் பிடிக்கத் தெரிந்தவர்கள். நான் ஒரு பரதேசி என்பதால், வழியில் இருப்பவற்றைக் கொண்டு வாழும் முறையை அவர்களுக்கும் காட்ட முடிகிறது. இந்தமுறை அய்யூர் சென்றபோது, பாறையில் தேங்கி பாசி பிடித்துக் கிடக்கும் நீரைப் பருகிக் காட்டினேன். உடன் வந்த பெற்றோரில் பலரும் அந்தத் தண்ணீரைப் பருகினார்கள்.
குழந்தைகளுக்கு இது மிகவும் தேவையான பக்குவம் என நினைக்கிறேன். ஊடகங்களின் வழியாக குடிநீர் வணிகமயாகிவிட்டது. நீரின் மீது ஏற்றப்பட்டுள்ள ‘பாதுகாப்பு’ எனும் போலித்தனம் பிள்ளைகளை எதிர்ப்பாற்றல் இல்லாதவர்களாக்கிவிட்டது. பாறையில் தேங்கியிள்ள தண்ணீரில் வாழும், நீர்ப் பூச்சிகளையும் தவளைகளையும் கையால் விலக்கிவிட்டு மாடுபோல உறிஞ்சிப் பருகும் மனிதர்களைப் பார்த்தால் பிள்ளைகள் பக்குவமடைந்துவிடுவார்கள். இதுதான் நான் கற்றுத்தர விரும்பும் கல்வி. இதைத்தான் நாங்கள் கற்றுத் தருகிறோம்.
ஓவியம், சிலம்பம் போன்ற கலைகளையும் மரபுப் பள்ளியில் அறிமுகம் செய்துள்ளோம். எல்லாவற்றிற்கும் மேலாக, மரபுப் பள்ளியின் வழியாகப் பலகுடும்பங்கள் செம்மை குடும்பங்களுடன் இணைந்துள்ளன. எங்கள் குடும்பம் கடந்த ஓராண்டில் விரிவடைந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் சென்னையில் மழை துவங்கியது. மரபுப் பள்ளியில் நாங்கள் பிள்ளைகளுடன் இணைந்து மழையில் நனைந்தோம். ஏறத்தாழ மூன்று மணி நேரம் எங்கள் பிள்ளைகள் மழையில் ஆடினார்கள். பெற்றோரில் பலரும் மழையில் நனைந்தனர். அந்த மழைதான் விடாத மழையாக தொடர்ந்தது.
அக்டோபர் மாதம் நாங்கள் பூண்டி காட்டிற்குப் பயணம் செய்தபோதும் மழை பெய்திருந்தது. காட்டின் உள்ளே புல்வெளியில் அமர்ந்து உரையாடிவிட்டு, மழை ஈரத்தில் மரக் கன்றுகளை நடவு செய்தோம்.
கடந்த 6ஆம் தேதி (06/05/16) அய்யூர் வனத்திற்குச் சென்றோம். ’அக்னி நட்சத்திர காலம் இது, வெயில் வாட்டி வதைக்கும்’ என்று பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. எங்கள் பிள்ளைகள் செல்வதற்கு ஒரு நாள் முன்பு, அய்யூரில் மழை கொட்டியது. மூன்று நாட்களும் மழைதந்த குளிரில்தான் காடுகளில் சுற்றினோம்.
அய்யூரிலிருந்து புறப்படும்போது, மழை அடித்து இறங்கியது. ஆம், எங்கள் காட்டில் எப்போதும் மழைதான்!
’உங்கள் தேவைகளை மனதால் அறிந்துகொள்ளுங்கள். அவற்றையே உங்கள் விருப்பங்களாக வைத்துக்கொள்ளுங்கள். எந்தச் சூழலிலும் விருப்பத்திலிருந்து விலகாதிருங்கள். உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும். எல்லா வல்லமையும் இறையாற்றலுக்கே உண்டு. சக உயிர்களிடம் அன்பு செலுத்துங்கள்’ - இந்த மந்திரத்தைக் கடைபிடிப்பவர்களுக்கு அனுபவம் கல்வியாகும்.
மரபுப் பள்ளியில் நாங்கள் ஆயிரம் பாடங்களை நடத்தினாலும், அவை எல்லாவற்றின் ஆழத்திலும் வீசிக்கொண்டிருக்கும் ஒளி, இந்த மந்திரம் மட்டும்தான்.
இந்த ஆண்டு மரபுப் பள்ளி சேர்க்கை வரும் ஜூன் 5 ஆம் தேதி (ஞாயிறு) ஊர் சந்தையில் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளோர் தொடர்பு கொள்ளுங்கள்.
செம்மை மரபுப் பள்ளி – பொறுப்பாளர்,
திருமதி. நளினி – 74012 34981
வாழ்த்துகள் தம்பி
ReplyDeleteஅருமை
ReplyDelete