Friday, 10 February 2017

மனுதர்மத்தின் ‘மந்திரங்கள்’ குறித்து!

உச்சநீதிமன்ற வாசலில் யாகசாலை அமைத்து பசுக்களைச் சுட்டுத் தின்னுங்கள்!
- மனுதர்மத்தின் ‘மந்திரங்கள்’ குறித்து!
ம.செந்தமிழன்

 

நாகரிகம், உயிர்வதை பற்றியெல்லாம் பேசுவதற்குத் தகுதி வேண்டும். பசுக்களையும் குதிரைகளையும் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்து வேள்வித்தீயில் வீசிக்கொண்டிருக்கும் கும்பலின் பிரதிநிதிகள் முதலில் தம் பற்களில் படிந்துள்ள இரத்தக் கறையைத் துடைத்துக்கொள்ளட்டும்.
’காளை அடக்குதல் தமிழர்களின் பண்பாடு என்றால், உடன்கட்டை ஏறுவதையும் சட்டமாக்கிவிடலாமா?’ எனக் கேட்கிறார் பீட்டாவின் பொறுப்பில் இருக்கும் பெண். காளைகளின் வாலைப் பிடித்து இழுப்பது பெரிய துன்புறுத்தல்’ என்று அரற்றுகிறார்கள் ‘பாரத தேஸ பக்தர்கள்’.
ரிக், யஜூர் ஆகிய இரு வேதங்களையும் வாசித்து முடிக்கும்போது, குதிரைகளின் இரத்த வாடை வீசும், பசுக்களின், காளைகளின் மரண ஓலம் மனதுக்குள் நீண்ட நேரம் ஒலிக்கும். யஜூர் வேதமே உயிர்ப் பலிகளைப் பற்றிய சடங்குகளின் பதிவுதான். இந்த வேதங்களை எல்லாம் பொதுமக்கள் படிக்கக் கூடாது என அவர்கள் நீண்ட காலம் தடுத்து வைத்திருந்தார்கள். ‘அவை எல்லாம் புனிதமானவை’ என்று காரணம் சொன்னார்கள். உண்மையான காரணம் ‘அவை எல்லாம் உயிர் வதையின் கோரத்தன்மையைப் பாடல்களாகக் கொண்டவை’ என்பதுதான்.
மனுதர்மம் பற்றி தமிழர்கள் குறைகூறினால் வடக்கத்திய அடிமைகளுக்கு ஆவேசம் பொங்கும். ‘மனிதகுலத்துக்கே அதுதான் தர்மம்’ என்று வாய்கூசாமல் அக்கூட்டம் கத்தும்.
மனுதர்மத்தின் உணவுக்கொள்கைகளில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்;
அத்தியாயம்: 5 (உணவு, சுத்தி, மாதர்)
29. மான் போன்ற விலங்குகளுக்குப் புல் போன்றவை உணவு. புலி போன்ற கோரைப் பல் கொண்டவற்றிற்கு மான் போன்றவை உணவு. கைகள் கொண்ட மனிதர்களுக்கு, கைகள் இல்லாத மீன் முதலியவை உணவு.
30. எனவே, உணவாக உரியவற்றை அன்றாடம் கொன்று தின்றாலும் பாவமில்லை. உண்ணத்தகுந்தவையும் கொலைச் செய்யத்தகுந்தவையும் பிரமானால் படைக்கப்பட்டவைதானே!
31. யாகத்தில் பலியிடப்பட்ட மாமிசத்தை உண்பது தேவகாரியம்; ஆசைக்காகக் கொலை செய்து உண்பது இராட்சச காரியம்.
32. வேத விதிப்படி, மந்திரங்களின் வழியில் பசுவைக் கொலை செய்து உண்ண வேண்டும். அவ்வாறு முறையாகக்கொல்லப்படாத பசுவை ஒருபோதும் உண்ணக் கூடாது.
33. வேள்விக்காகத்தான் பசுக்கள் பிரமனால் படைக்கப்பட்டுள்ளன. உலக நன்மைக்காகப் பசுக்களை வேள்வியில் கொல்வது, பாவம் அல்ல.
34. வேள்வியில் கொலை செய்யப்படும் பசு, விலங்குகள், பறவைகள் ஆகியவை எல்லாம் மரணத்திற்குப் பின்னர் மேலான நிலையை அடைகின்றன.’
காளைகளை விரட்டுவதே பாவம் என்று குமுறும் ஆரிய நீதிவான்களுக்கும் அவர்களுக்கான அரசியல் குன்றுகளுக்கும் ஓர் அறிவுரை.
பாராளுமன்றத்தின் வாசலில் ஒரு யாகசாலை அமைத்து அன்றாடம் பசுக்களைத் தீயில் வீசி, அவற்றின் ஈரலைச் சாப்பிடுங்களேன். உச்சநீதிமன்றத்தின் வாசலில் ஒரு யாகசாலை அமைத்து அந்தத் தீயில் சில காளைகளை வீசி எறிந்து சுட்ட கறியை அக்கினி தேவனுக்கும் இந்திரனுக்கும் படையலிட்டு சோமபானம் அருந்திக்கொண்டே தின்னுங்களேன்.
- இவையெல்லாம் உங்கள் வேதங்களிலும் தர்ம நூல்களிலும் உங்கள் ‘ரிஷி’கள் பதிவு செய்துள்ள மந்திரங்கள்தான். அதனால், இவ்வாறான காட்சிகளைக் கற்பனை செய்துவிட்டு எங்கள் மேல் கோபம் கொள்ள வேண்டாம்!
’கொல்லான் புலால் மறுத்தானை எல்லா உயிரும் தொழும்’ என்று செய்யுள் இயற்றிய திருவள்ளுவர் எங்கள் ஆசான்.
‘சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக வோதினும் சிவனைநீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எங் கள் ஈசனே’ என்று பாடி உங்கள் அடித்தளத்தை அறுத்துப்போட்ட சிவவாக்கியர் எங்கள் சித்தர்.
”பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பண்ணுமே’ என்றார் சிவவாக்கியர். எல்லாப் பாதகச் செயல்களையும் செய்துவிட்டு ’வேதம் ஓதினால் அந்தப் பாவங்கள் பறந்துபோகும்’ என்று நீங்கள் ஓலமிடுவதை இவ்வாறு அவர் இடித்துரைத்தார். சிவத்தின் வாக்கியங்களை உள்வாங்கியவர்கள் இப்படித்தான் நேர்மையாகவும் துணிச்சலாகவும் பாடுவார்கள், இயங்குவார்கள்.
உயிர்களைக் கொல்வதையே மந்திரமாகப் பாடிய பாவத்தினாலும் மனிதர்களைப் பிரித்து அடக்கி ஆள்வதையே தர்மங்களாகக் கூறும் வினைப்பலனாகவும்தான் உங்கள் மொழி செத்துப்போனது. இன்றுவரைக்கும் அந்த மொழிக்கென சொந்தமாக அ, ஆ கூட கிடையாது. எம் தமிழ் உங்களைச் சிந்துவெளியில் சந்தித்தது, இப்போது அலங்காநல்லூரில் சந்திக்கிறது.
’முதற்சங்கத்தில் முக்கண்ணனாரும் முருகனும் வீற்றிருந்தார்கள்’ என்பது எங்கள் மொழியின் வரலாற்றுப் பதிவு. நந்தி எனும் வடிவில், காளையை இறைவனுக்கெதிரே அமரச் செய்து வணங்கும் குலம் எங்கள் குலம்.
தமிழ் வாழும், தமிழர்கள் நாங்கள் வாழ்வோம். உங்கள் மொழியைப் போலவே நீங்களும் அழிந்துவிடாதிருங்கள்!

பதிவு செய்த நாள்: 17/01/2017

1 comment: